செம்மொழியான தமிழ்மொழியாம்!!

பிறந்து பிறந்து சாகின்றன.

எனது

ஏராளம் கவிதைக்குழந்தைகள்.


முள்ளிவாய்க்காலுக்கும்

புதுமாத்தளனுக்கும் இடையிலான

ஒரு ஒற்றையடிப் பாதையில்

போர்பிடுங்கித் தின்றுவிட்டுப் போட்ட

என்கைகளின் எச்சங்களைத் தேடி

அலைந்து கொண்டிருக்கின்றன

எனது தீயுமிளும் உணர்ச்சிகள்.
vanni_20090425001



காற்றில் கரைந்தழிந்து போகுமென்

ஞாபகங்களின் வலிமிகு பாடல்களை
உரத்த குரலெடுத்து பாடமுடியாமல்

பயமுறுத்திக்கொண்டு படுத்திருக்கிறது

சுருள்சுருளான முட்கம்பிகள்.

நாம் வாக்குப்போட்டு தேர்ந்தெடுத்த

பாராளுமன்ற உறுப்பினர்களையே

உள்நுளைய விடாத

எங்கள் தமிழகதி முகாம்களுக்குள்

எனது கவிதையை பிரகடனப்படுத்துதல்

சாத்தியமேயில்லை.
sri-lanka-tamil-camps


எனது மொழியின்...

எனது இனத்தின்...

எனது தாய்நிலத்தின்...

வலிமிகுந்த வார்த்தைகளை சுமந்துகொண்டு

ஒரு ஜனநாயக நாட்டின்

சிறுபான்மை சிறைமுகாமுக்குள்

இப்போதும்

உணவுக்காக வரிசையில் நிற்கும்

என்னிடமும் இருக்கிறது

ஆய்வுசெய்யப்பட வேண்டிய

ஏராளம் கருத்துக்கள்.


சுதந்திரத்தையல்ல...

சும்மா வெளியே காற்றுவாங்க நடக்கும்

அனுமதியை கூட

வாங்கித்தர மறுக்கிற
இயலுமையுள்ள அனைத்துலகிடமிருந்தும்...

இறைமையுள்ள அயல்வீட்டிடமிருந்தும்...

நான் எதை எதிர்பார்க்க?

ரகுமானின் தூள்கிளப்பும்

துள்ளல் பாடல்களையும்...

ராத்திரியில்

கொஞ்சம் ஆறுதலுக்காய் கேட்கும்

சோகப் பாடல்களையும்...

இப்போ

இடையிடையே விளம்பரப்படுத்தும்

கோவை மாநாட்டு

‘‘செம்மொழியான தமிழ்மொழியாம்”

பாட்டையும் தவிர.

*** முற்றும் ***

படைப்பு - தீபிகா.

Comments