கிறீக் சந்தித்ததுபோன்ற பொருளாதார வீழ்ச்சியை இலங்கை சந்திக்கலாம்

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் சிறீலங்கா அரசு பதில் கொடுக்க வேண்டிய காலஎல்லை கடந்த வியாழக் கிழமையுடன் (முதலாம் திகதியுடன்) நிறைவடைந்துள்ளபோதும் சிறீலங்கா அரசுக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்க தாம் தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறீலங்காவுக்கான தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாளுடன் நிறைவுபெறும் வர்த்தக வரிச்சலுகைகள் குறித்து சிறீலங்கா அரசிடம் இருந்து சாதகமான பதிலை நாம் எதிர்பார்த்திருந்தோம். அதன் கால எல்லை முடிவடைந்துள்ளது. ஆனால் சிறிலங்கா அரசு இந்தக் கால எல்லைக்குள் பதில் தரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வரிச்சலுகைகள் தமக்கு தேவையில்லை என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

எனவே ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள 15 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் சிறீலங்கா அரசு இல்லை. அதனை அது கௌரவக்குறைச்சலாக பார்க்கின்றது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் சிறீலங்காவில் தனது ஆட்சியை தக்கவைக்க முடியாது என அரசு அஞ்சுவதுடன், ஆசிய நாடுகளும், பிராந்திய வல்லரசுகளும் தன்னை காப்பாற்றும் எனவும் அரசு முற்று முழுதாக நம்புகின்றது. இந்த நிலையில் சிறீலங்காவுக்கான மூன்றாவது கடன் கொடுப்பனவை அனைத் துலக நாணயநிதியம் கடந்த திங்கட்கிழமை (28 ஆம் திகதி ) வழங்கியுள்ளது.

2.6 பில்லி யன் டொலர் கடன்தொகையின் மூன்றாவது கொடுப்பனவான வழங்கவுள்ள 408 மில்லி யன் டொலர்கள் நிதி உதவி அதிக நெருக் கடிகளை சந்தித்துள்ள சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு ஒரு சிறு தற்காலிக ஆறுதல். ஆனால் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னர் அனைத்துலக நாணயநிதியம் என்ன நிபந்தனைகளை முன்வைக்கும் என்பது தொடர்பிலான அச்சங்கள் சிறீலங்காவின் ஆளும் தரப்பை விட்டு அகலவில்லை.
இந்த உதவித் தொகையை பெறும் பொருட்டு அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (29 ஆம் திகதி ) சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்தில் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருந்தது.

அரச பணியாளர்களுக்கான ஊதிய உயர்வையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் அது அதிகரித்துள்ளது. 30வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போர் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் முன்வைக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் தென்னிலங்கை மக்களுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அது எதிர்மறையான போக்கை கொண்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி கருத்து தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய்கள் ஊதிய உயர்வை கடந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் இருந்து வழங்குவதாக நடைபெற்றுமுடிந்த அரச தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது அரச தரப்பினர் வாக்குறுதிகளை வழங்கியிருந்ததாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகளை நிறுத்தப்பட்டால் அது தென்னிலங்கையில் மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில், அமெரிக்காவும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது. சிறீலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் தொடர்பில் மீள்ஆய்வு செய்ய உள்ளதாக அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவுடனான வர்த்தகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல அமெரிக்காவும் முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றது. சிறீலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களில் 23 விகிதத்தை அமெரிக்காவே பெற்று வருகின்றது. 40 விகிதமான புடவைப்பொருட்களும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உதாரணமாக 2008 ஆம் ஆண்டு சிறீலங்காவில் இருந்து 1.9 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களையும், சேவைகளையும் அமெரிக்கா இறக்குமதி செய்திருந்தது. ஆனால் சிறீலங்கா அமெரிக்காவில் இருந்து 227 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களையும் சேவைகளையுமே இறக்குமதி செய்திருந்தது.

மேலும் சிறீலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வர்த்தக வரிச்சலுகைகளையும் அமெரிக்கா வழங்கிவருகின்றது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் பொருட்டு அமெரிக்கா 131 அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் 3,400 ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்த நாடுகளில் சிறீலங்காவும் உள்ளடங்கியுள்ளது. இந்த வரிச்சலுகை மூலம் சிறிலங்கா அரசு 2009 ஆம் ஆண்டு 116 மில்லியன் டொலர்களை பெற்றிருந்தது. ஆனால் சிறீலங்காவில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் வர்த்தக ஒன்றியமான தொழிலாளர் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்க அமைப்பு அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்த மனுவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த மனுவை பரிசீலிப்பதற்கு அமெரிக்க அரசு இணங்கியுள்ளதுடன் அது பொது நீதிமன்றத்தில் விசாரணைக்கும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டால் சிறிலங்கா அரசும் அங்கு பிரசன்னமாகி தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலான தனது நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தொழிலாளர் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்க அமைப்பு மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து மாலைதீவுக்கு வழங்கி வந்த வரிச்சலுகைகளை அமெரிக்கா நிறுத்தியிருந்ததும் நாம் அறிந்தவையே.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நிறுத்தப்படலாம் என்ற அச்சங்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டபோது அமெரிக்காவின் வரிச்சலுகைகளை தொடர்பில் சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீஸ் இடம் கேட்கப்பட்டபோது அவர் தமது வரிச்சலுகள் தொடர்பில் சில விளங்கங்களை தந்திருந்தார். அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகைக்கும், அமெரிக்காவின் வரிச்சலுகைக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. ஐரோப்பிய ஒன்றியம் புடவைப் பொருட்களுக்கே வரிச்சலுகையை வழங்கி வருகின்றது. ஆனால் அமெரிக்கா ஏனைய பொருட்களுக்கு (இயந்திரப் பொருட்கள், மின்சாதனப்பொருட்கள், இரசாயனப்பொருட்கள், விவசாயப்பொருட்கள், ஆபரணங்கள்) இந்த வரிச்சலுகையை வழங்கி வருகின்றது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையானது நல்லாட்சி, மனித உரிமைகள் போன்றவற்றை நிபந்தனையாக கொண்டது. ஆனால் அமெரிக்காவின் வரிச்சலுகை தொழிலாளர்களின் உரிமைகளை அடிப்படையாக கொண்டது. தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக இருத்தல் வேண்டும். எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையினால் பாதிப்படையும் புடவை ஏற்றுமதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தாது என அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் வரிச்சலுகைக்கும் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர் உரிமைகள் என்பதும் ஒருவகையில் மனித உரிமைகளையும், இனங்களின் சமத்துவத்தையும் சார்ந்ததாகவே உள்ளதால் அமெரிக்க நீதிமன்றத்திற்கு தகுந்த ஆதாரங்களை சிறிலங்கா சமர்ப்பிக்குமா என்பதும் கேள்விக்குறியானது.

சிறீலங்காவின் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது (4.1 றில்லியன் ரூபாய்கள்) சிறீலங்காவின் கடன்சுமை இந்த வருடத்தின் இறுதியில் 15 விகிதம் அதிகரிக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அது 4.5 தொடக்கம் 4.7 றில்லியன் ரூபாய்களாக இருக்கும். எனவே சிறீலங்காவின் கடன்சுமைக்கும் மொத்த உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 90 விகிதமாக அதிகரிக்கும். கிறீக் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டபோது அதன் சுமைக்கும் மொத்த உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 120 விகிதமாக இருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

2009 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 500 பில்லியன் ரூபாய்கள், இது மொத்த உற்பத்தியின் 10.3 விகிதம் என்பதுடன் அனைத்துலக நாணயநிதியம் விதித்த நிபந்தனையான 7 விகிதத்தை விட அதிகம். 2008 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட துண்டுவிழும் தொகை மொத்த உற்பத்தியின் 8 விகிதமாக இருந்தது. எனினும் இந்த வருடத்தின் வரவுசெலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 600 பில்லியன் ரூபாய்களாக (11.8 விகிதமாக) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மீண்டும், கிறீக் நாட்டின் பொருளாதாரத்தை கருதினால் அது வீழ்ச்சி கண்டபோது அதன் வரவுசெலவுத்திட்ட துண்டுவிழும் தொகை மொத்த உற்பத்தியின் 12.5 விகிதத்தை எட்டியிருந்தது. எனவே சிறீலங்காவின் பொருளாதாரத்தின் நெருக்கடி என்பது, அண்மையில் பொருளாதார வீழச்சி கண்ட கிறீக் நாட்டை அண்மித்து நிற்பதாகவே பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையின் நிறுத்தம், அமெரிக்காவின் வரிச்சலுகையின் நிறுத்தம் என்பன முழு அளவில் நடைமுறைக்கு வருமாக இருந்தால் சிறீலங்கா அரசின் பொருளாதாரம் கிறீக் நாடு சந்தித்ததை போல மிகவும் பாரிய ஒரு வீழ்ச்சியை சந்திக்கலாம். அவ்வாறான ஒரு நிலையில் தென்னிலங்கையில் அரசியல் உறுதியற்ற தன்மை ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும் என்றே கருதப்படுகின்றது.

எனினும் ஆசியக் கண்டத்தில் ஏற்படும் இத்தகைய வீழ்ச்சியை ஏனைய ஆசிய நாடுகளும், பிராந்திய வல்லரசுகளும் எவ்வாறு பார்க்கப்போகின்றன என்பதில் தான் சிறீலங்காவின் எதிர்காலம் தங்கியுள்ளது.
சிறிலங்காவின் ஆசிய பிராந்திய புதிய நண்பர்களும், மத்திய கிழக்கு நண்பர்களும் பொருளாதார ரீதியாக சிறிலங்காவை காப்பாற்ற முனைந்தால், ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழுவை வலுப்படுத்துவதே மேற்குலகத்தின் அடுத்த தெரிவாக அமையும். அதற்கான ஆதரவுகள் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் காத்திரமாக உண்டு என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

-வேல்ஸிலிருந்து அருஷ்

Comments