டக்ளஸ் - சித்தார்த்தன் தரப்புடன் கே.பி பேச்சுவார்த்தை - புதிய சிறீலங்கா துணைப்படைக் குழு?

சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, புளொட் குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும், கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனுக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச, சிறீலங்கா பொருண்மிய அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்பொழுது சிங்களப் படைப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்கி வரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஈ.பி.டி.பி, புளொட், கருணா, பிள்ளையான் குழுக்களுக்கு மேலதிகமாக தமிழீழ தாயகப் பகுதிகளில் ஈ.என்.டி.எல்.எவ், ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி போன்ற ஆயுதக் குழுக்களையும், கே.பி தலைமையில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றையும் இயங்க விடுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு டக்ளஸ் தேவானந்தா இணக்கம் தெரிவித்திருந்த பொழுதும், இதனால் வவுனியாவில் தமது உறுப்பினர்களிடையே குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறி தனது தயக்கத்தை சித்தார்த்தன் வெளிப்படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.

இதன்பொழுது கருத்துக்கூறிய பசில் ராஜபக்ச: ‘‘எல்லோரும் தங்களை இலங்கையர்கள் என்று சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. இந்த நாடு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற எந்தவொரு தனியினத்திற்கும் சொந்தமானது அல்ல.

இது சகல இலங்கையர்களுக்கும் சொந்தமானது. இந்த நாட்டின் எந்தப் பாகத்திலும் எவரும் வசிக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வசிப்பது போன்று யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் வசிக்கலாம். இதனை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

பிரபாகரன் செய்த தவறை இனியாவது நீங்கள் செய்யக்கூடாது. மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றார்கள். இதற்கு புலிகளோடு இருந்து இயங்கி இப்பொழுது எங்களோடு இணைந்திருக்கும் நீங்கள் இடம்கொடுக்கக்கூடாது.'' என்று கூறியதாக, கே.பியுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நம்பகமாக தெரிய வந்துள்ளது.

இதேயிடத்தில் கருத்துக்கூறிய கோத்தபாய ராஜபக்ச: உங்களுக்குள் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு நீங்கள் செய்யும் உதவி அளப்பரியது. புலிப் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு எமது படையினர் மட்டும் தியாகங்களை செய்யவில்லை.

ஈ.பி.டி.பி, புளொட், ரி.எம்.வி.பி உட்பட பல தமிழ்க் கட்சிகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை நாம் அழித்தோம். அதற்காக உங்களின் உறுப்பினர்கள் பலரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தார்கள். உங்களின் தியாகத்தை நாம் மறக்கவில்லை. மீண்டும் நாட்டில் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் கே.பி உறுதியாக இருக்கின்றார்.

கடந்த கால நிகழ்வுகளை நாங்கள் மறந்துவிட்டோம். இப்பொழுது எங்களுடன் ஒத்துழைக்கும் கே.பியிற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.'' என்று கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது யாழ் தீவகம் நயினாதீவுப் பகுதியில் உள்ள சிறீலங்கா கடற்படைத் தளத்தில் ஈ.பி.டி.பியினரால் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, வன்னியில் சனசஞ்சாரம் குறைவாகக் காணப்படும் வனப்பகுதிகளை அண்டிய கிராமங்களில் புளொட் குழுவினரால் காவலரண்களும், முகாம்களும் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தனது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக கே.பி குழுவை வடதமிழீழப் பகுதிகளில் களமிறக்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளின் சிறீலங்கா அரசு ஈடுபடுவதையே இது உணர்த்துவதாக, தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ் பல்லைக் கழக பேராசிரியர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

- அதியமான்

Comments