அழிக்கப்படும் மக்களின் பிணங்களின் மேல் வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் அன்னியப்படுத்தப்பட வேண்டும்

சமூகம் குறித்துச் சிந்திக்கும் வினைத்திறன் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கின்றது.


தெற்காசியாவின் முக்கியத்துவமற்றதாகக் கருதப்பட்ட ஒரு மூலையில் சாட்சியின்றி நடத்தப்பட மனிதப் படுகொலைகள் எழுபத்தையாயிரம் உயிர்கள் வரை காவு கொண்டிருக்கலாம் என சர்வதேசச் சிக்கல்களுக்கான குழுமம் கருதுகிறது. ஐ.நாவின் அதிகாரி கோடன் வைஸ் இன் கணிப்பில் நாற்பதாயிரமாவது இருக்கலாம் என்கிறார். உலகின் அதிகார பீடங்கள் இருபதாயிரம் வரை செல்லலாம் என்கின்றன. எது எவ்வாறாயினும் இதன் எதிர்விளைவுகள் மனித சமுதாயத்திற்குப் எச்சரிக்கை விடுக்கின்றன.

1. முதலில் இத்தனையும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரும் இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றி நடத்திவருகின்றது. இந்திய அரசின் பின்பலத்தோடு அதன் அரசியல் பொருளாதார நலன்களுக்காக பயன்படுத்தப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை, அரசியல், கலாச்சார, பொருளாதாரத் தளங்களில் நடத்திவருகின்றது. இதன் மிலேச்சத்தனமான அருவருக்கத்தக்க வடிவங்கள் இலங்கைப் பிரச்சனையை அவதானிக்கும் சமூகப்பற்றுள்ள அனைவரும் அறிவர். இதற்கு எதிராகப் போராடவல்ல இலங்கை மக்களை அதிலும் ஈழத் தமிழர்களை கோரமான பயத்தின் விழிம்பிற்குள் வைத்திருக்க முனைகிறது இலங்கை அரசு. ஆக, அங்கு ஏற்கனவே புலிகளின் தலைமைக்குள் இல்லாதொழிக்கப்பட்ட மக்கள் சமூகங்களின் வெகுஜனத்ப் போராட்ட அமைப்புக்களின் இல்லாமை ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் ஈழத் தமிழர்கள் திறந்தவெளிச் சிறைக்குள்ளேயே வாழ்கின்றனர். மக்கள் கூட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த அடிப்படை உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

2. உலகில் எந்த அரசும் தனது சொந்த மக்களை அழிப்பதற்கு இலங்கை முன்னுதாரணமாக அமைய வாய்ப்புண்டு. இந்தியாவில் பழங்குடி மக்களின் மீது இதே பாணியிலான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. காஷ்மீரில் இன்னொரு இனவழிப்புத் திட்டமிடப்படுகின்றது. இலங்கை அரசு தான் நிகழ்த்திய மனிதப்படுகொலையிலிருந்து தப்பித்துக்கொள்ளுமானால் இதே வகையான படுகொலைகளை எந்த அரசும் எப்போதும் நடத்தி முடித்துவிட்டுப் பயங்கரவாதத்திற்கான யுத்தம் என மார்தட்டிக்கொள்ள வாய்ப்புண்டு.

ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தவும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் வலிமையுள்ள மூன்று பிரதான சக்திகளை இலங்கை இந்திய அரசுகள் கையாள முற்படுகின்றன.

1. தமிழ் நாட்டு எதிர்புச் சக்திகள்.
2. புலம்பெயர் நாடுகளில் எதிர்ப்புணர்வு.
3. இடது அணிகளிடமிருந்து உருவாகும் சர்வதேசிய எதிர்ப்புக்குரல்.

இதில் மூன்றாவது பலமடைந்ததாக இல்லை. இடது சாரிகள் இவ்விடயத்தில் தங்களை மீளாய்விற்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாகப் புலம்பெயர் நாடுகளில் இனிமேல் உருவாகவல்ல எதிர்ப்பை இல்லாதொழிக்க இலங்கை அரசிடம் நேர்த்தியான நிகழ்ச்சி நிரல் ஒன்று உண்டு. கே.பி, இங்கிலாந்திலுள்ள இலங்கைத் துணைத் தூதர் ஹம்சா, சார்ள்ஸ் போன்றோர் உட்படப் பலர் இதன் முகவர்களாகத் .தொழிற்படுகின்றனர்.

இதன் முதல் பகுதி தமிழ் நாட்டு எதிர்ப்பு சக்திகள். இல்ன்ங்கைப் பிரச்சனையை மட்டும் முன்வைத்து தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் எரியும் நிகழ்வுகளைப் புறக்கணித்து தமிழ் நாட்டு மக்களை வென்றெடுக்க எண்ணுவதெல்லாம் அறிவீனம். இவ்வாறான ஒரு தூய தமிழ்த் தொலை தூரத் தேசியவாதம் நிலைபெற எந்த வாய்ப்பும் இல்லை என்பது ஒரு புறத்தில் இருக்க சர்வதேசிய வாதிகளாகக் கருதப்படும் இடதுசாரிகள் தேசிய வாதிகளின் ஏமாற்றப்பட்ட உணர்வுகளை நெறிப்படுத முன்வரவேண்டும்.

எது எவ்வாறாயினும் தமிழ் நாட்டின் எழுச்சியும் எதிர்ப்புணர்வும் இலங்கை அரசிற்கும் இந்திய இலங்கைக் கூட்டுக்கும் சவாலாகவே அமைந்துள்ளது. ஐபா நிகழ்வின் தோல்வி இதன் ஒரு வெளிப்பாடாகும். திராவிட இயக்க மாயைகளுக்கு அப்பால் புதிய சக்திகள் உருவாவதற்கான ஆரம்ப நிலையாகக் கூட இதனைக் கருதலாம்.

இந்த அரசியல் பகைப் புலத்திலிருந்து இலங்கை அரசு இந்திய மத்திய மாநில அரசுகளுடன் இனைந்து தமிழ் நாட்டைக் கையாளும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதிதான் அசின், கருணாஸ் போன்றோரின் இலங்கைப் பயணங்கள். சாதாரண குடிமகன் இலங்கைக்குச் செல்வதற்கும் இவர்கள் இலங்கை அரசின் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதற்குன் நிறைய வேறுபாடுண்டு.

இவர்களின் பயணங்கள் வழியாக

1. தமிழ் நாட்டில் உருவாகும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தல்

2. இலங்கை இப்போது சுமூகமன நிலையிலிருப்பதான விம்பத்தைக் கட்டியமைத்தல்

3. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களைத் தமிழ் நாட்டின் சினிமா மாயைக்கு உள்ளாக்கி அவர்களின் எதிர்ப்புணர்வைக் திசை திருப்புதல்.

போன்ற பல்வேறு நோக்கங்களை திரைப்படக் கலைஞர்களின் இலங்கை வரவு நிவர்த்தியாக்குகிறது.

அசின் என்ற நடிகையின் இலங்கைப் பயணம் உரக்கச் சொல்லும் இன்னொரு செய்தி,

* இப்போதெல்லாம் இலங்கை அரசை எதிர்க்க வேண்டாம், அங்குள்ளவர்களுகுச் சிறிய உதவிகளைச் செய்தால் போதுமானது என்பதாகும். கருணாஸ் கூட இப்படித்தான் பேசுகிறார். அசின் திரும்பியதும் நடிகர் சங்க சரத்குமார் என்ற நடிகர் சங்கத் தலைவர் தனது வியாபார நோக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

* இதே சரத் குமார் கடந்த வாரம் பிரிதானியாவிற்கு வந்து இங்குள்ள டபிள்யூ.எச்.சிமித் என்ற ஐந்தாயிரம் கிளைகளைக் கொண்ட வெளியீட்டு நிறுவனத்தோடு இந்திய சினிமா சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதற்கான ஒப்பந்ததை பெற்றுக்கொண்டு, ஹரோப் பகுதியிலுள்ள உணவகத்தின் இலங்கைத் தமிழ் உரிமையாளர் வழங்கிய “விருந்துபசாரத்தில்” கலந்து கொண்டு தனது ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கச் சென்றுவிட்டார். அதுவும் இலங்கைத் தமிழர் செலவில் ஒழுங்கு செய்யப்பட்ட ரீகன் ஸ்ரீட், ஹில்லடன் ஹொட்டேலில் உல்லாசமாகத் தங்கிச் சென்றிருக்கிறார்.

அவருக்கு சிமித் புத்தக வெளியீட்டகத்தில் ஒப்பந்தம் பெற்றுக்கொடுக்க உதவியது இலங்கைத் தூதரகம் என்று அறிந்த போது இலங்கை அரசாங்கம் எந்த எல்லைவரை சென்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இது குறித்து விருந்துக்குச் சென்ற தமிழர்களிடம் கேட்ட போது இன்ப அதிர்ச்சியிலிருந்த அவர்கள் அப்படியெல்லாம் சரத்குமார் செய்யமாட்டார் என்றார்கள்.

இனியாவது இந்திய சினிமாக் குப்பைகளை இலங்கைத் தமிழர்கள் நிராகரிக்கும் நிலைக்கு வரவேண்டும். குறைந்தபட்சம் தமிழ் நாட்டில் எமக்காகத் தியாகம் செய்த ஆயிரம் தமிழர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அழிக்கப்படும் மக்களின் பிணங்களின் மேல் வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் அன்னியப்படுத்தப்பட வேண்டும்.

Comments