ஐ.நா வல்லுநர் குழுவுக்கு உதவ நாங்கள் தயார் : வி. ருத்திரகுமாரன்

முன்னர் இச் செய்தியை நாம் விடுதலைப் புலிகள் வரவேற்றுள்ளதாக தவறுதலாக எழுதியிருந்தோம். ஐ.நா வல்லுநர் குழுவுக்கு உதவ நாங்கள் தயார் என வி. ருத்திரகுமாரன் அவர்களே தெரிவித்துள்ளார். அது விடுதலைப் புலிகள் தெரிவித்த கருத்து இல்லை என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகிறோம் !

கடந்த ஆண்டு நிறைவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்கவென அமைக்கப்பட்டுள்ள மூவரடங்கிய வல்லுநர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக நாம் தயார் என வி.ருத்திரகுமார் கூறியுள்ளார். அதோடு இவ்விடயம் குறித்து சாட்சி கூற முன்வருபவர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் வல்லுநர் குழுவுக்கு திரு ருத்திரகுமார் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா வல்லுநர்கள் குழு தமது அறிக்கைகளை இறுதியில் பொதுவில் வெளிவிடவேண்டும் என்றும் கேட்டுள்ள புலிகள், இதன்மூலம் என்னென்ன சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளன என்பது தெரியவரும் என்பதோடு எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற மீறல்கள் நிகழாமல் உறுதிப்படுத்தவும் உதவும் எனத் தெரிவித்தனர்.

ஆகவே ஐ.நா வல்லுநர் குழுவுக்கு தமது முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும், தங்களால் இவ்விசாரணைகளுக்கான் முதல்நிலை ஆதாரங்கள் பலவற்றை வழங்கமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு விஜயம் செய்யப் போவதில்லை என வல்லுநர் குழு அறிவித்துள்ள போதிலும், இவ்விடயம் குறித்து வன்னி மக்களிடம் தகவல் திரட்ட வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

அதோடு மூவர் அடங்கிய குழுவானது நான்கு மாதங்களுக்குள் இவ்விசாரணையை முடிக்கவுள்ளமை மிகவும் குறுகிய காலமாக இருப்பதாகவும் வி.ருத்திரகுமார் தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு பரந்த அளவில் நடந்த குற்றச்செயல்களை விசாரிக்க இந்தக் குறுகிய காலம் போதாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே போதுமான ஒரு அறிக்கையை உருவாக்கும் பொருட்டு இக்காலத்தை நீட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Comments