போராளிகளை நாய்கள் என்று திட்டி வதைக்கும் படையினர் - பி.பி.சி

சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் நாளாந்தம் வதைகளுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர்களால் எழுதப்பட்டுள்ள கடிதங்கள், மற்றும் தொலைபேசி அழைப்புக்களை ஆதாரமாகக்கொண்டு பி.பி.சி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இந்தப் போராளிகளைத் தடுத்து வைத்துள்ள படையினர், நாளாந்தம் வதைகள் புரிந்தும், அடித்துத் துன்புறுத்தியும் வருகின்றனர். முகாம்களிற்குப் பொறுப்பாக இருக்கும் படையினர் தம்மில் சிலரை விடுதலை செய்ய முன்னர் கையூட்டு (இலஞ்சம்) பெற்றிருப்பதாகவும் போராளிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் போராளிகளை தாம் மிகவும் சிறப்பாகப் பராமரிப்பதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசு, எந்தவொரு மனித உரிமை அமைப்புகளையோ, தனி நபர்களையோ அவர்களைப் பார்வையிட அனுமதி மறுத்து வருகின்றது. அத்துடன், இறுதிப் போரில் தாம் போர்க் குற்றம் எதுவும் புரியவில்லை எனவும் மறுப்புத் தெரிவித்து வருவதாக பி.பி.சி கூறுகின்றது.

சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அண்மையில் ஒரு பொதுமகன்கூட இறுதிப் போரில் கொல்லப்படவில்லை எனக்கூறியதைக் குறிப்பிடும் பி.பிசி, இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டும், காயமடைந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் கைது செய்து புனர்வாழ்வு வழங்கல் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், தமது கடிதத்தில், தாம் 'நாய்கள்" என அழைக்கப்படுவதாகவும், ஒவ்வொருநாளும் தாக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். தாம் முகச்சவரம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டதாகவும், அவ்வாறு முகச்சவரம் செய்யாத பட்சத்தில் அதற்கும் தாக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், மின்சார கட்டணங்களை செலுத்துமாறும், சுத்திகரிப்பு பணிகளுக்கான பணத்தை செலுத்துமாறும் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தம்மிடம் பணம் இல்லை என கூறினால் தம்மை கொழும்பு பூஸா முகாமிற்கு மாற்றிவிடுவதாகவும் அதிகாரிகளால் தாம் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட மற்றுமொரு கடிதத்தில், தாம் விடுதலை செய்யப்படுவோமா, அல்லது சுட்டுக் கொல்லப்படுவோமா என்பதே தெரியாதிருப்பதாக முன்னாள் போராளிகள் குறிப்பிட்டுள்ளனர். இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகளை கைது செய்ததாக கூறி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.

அவர்கள் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது இராணுவ முகாம்களிலும், பாடசாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களை பார்வையிடுவதற்கு ஊடகங்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுமதி வழங்காமல் அரசாங்கம் தடை விதித்து வருகிறது.

அவர்களுக்கு தற்போது தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் அவ்வாறான அர்த்தமுள்ள பயிற்சிகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என தமது கடிதங்களில் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை பகுதியில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரால் எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்கப்படுகின்றனர். சிலர் தரையில் படுக்க வைக்கப்பட்டு, இடைப்பட்டிகளால் தாக்கப்படுகின்றனர். தாக்குதலின் பின்னர் காயம் ஏற்படின் அவர்கள் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச்செல்லப்படுவதுமில்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பி.பி.சி, அமைச்சர் டியூ குணசேகரவிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது, இந்த முறைப்பாட்டு கடிதங்களை தமக்கு எழுதினால், அது தொடர்பில் பார்த்துக் கொள்வதாக கூறியதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.

Comments