இலங்கை செல்லும் நடிகர் -நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலக தமிழ் அமைப்பு முடிவு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பின் தலைவர் நாஞ்சில் பீட்டர், வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் பழனிசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

’’தமிழீழத்தில் நமது தொப்புள் கொடி உறவான தமிழ் இனத்தை சிங்கள அரசு பூண்டோடு ஒழித்து வருகிறது. தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் உலக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்படும் நாள் தொலைவில் இல்லை.

இலங்கைக்கு நடிகர்கள் யாரும் போகக்கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள நடிகர் சங்கத்துக்கு உலக தமிழ் இனம் நன்றி தெரிவிக்கிறது.

தமிழர்கள் உணர்வுகளை துச்சமென நினைத்து இலங்கை சென்ற மலையாள நடிகை அசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக தமிழ் அமைப்பு நடிகர் சங்கத்தை வலியுறுத்துகிறது.

அசின் நடித்த அனைத்து திரைப்படங்களையும் புறக்கணிக்க உலக தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர். அந்த முடிவை அமெரிக்கா, கனடா நாட்டில் நிறைவேற்றுவோம்.

தமிழ் உணர்வுடன் செயல்பட்டு வரும் ராதாரவி, சத்யராஜ் ஆகியோரையும் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவு நல்கும் நடிகர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.

தமிழர்களுக்காக உழைக்கும் திரைத்துறையினர் யாவர் எதிராக உள்ளவர்கள் எவர் என்பதை ஆராய்வதுடன் யாருடைய படங்களை புறக்கணிப்பது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் இருந்து வரும் திரைப்படங்களின் கணிசமான வருவாய் எங்களை போன்ற புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவால் ஈட்டப்படுகிறது.

கடந்த காலத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக திரைதுறையினர் நடத்திய போராட்டங்களை அலட்சியப்படுத்திய நடிகர்களின் படங்கள் புலயம் பெயர் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டன. இதன் விளைவாக அத்திரைப்படங்கள் படுதோல்வியை தழுவின.

இதுபோல் தொடர்ந்து தமிழர் உரிமை குரலுக்கு எதிராக செயல்படுவோர் படங்களை புறக்கணித்து போராட்டங்களை மேற்கொள்வோம்’’என்று தெரிவித்துள்ளார்கள்.

Comments