தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ள வெள்ளைவான் கடத்தல்: ராஜபக்ஷ தொடர்பா ?

இலங்கையில் குறிப்பாக கொழும்பு மற்றும் மட்டக்கிளப்பில் வெள்ளைவான் என்றாலே தமிழ் மக்களிடம் பீதி நிலவுவது வழக்கம். பலர் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டுள்ளனர் என்பதை யாவரும் அறிவர். அகதிகளாக இருக்க இடம் இன்றி இந்தியாவுக்குச் சென்று வாழும் ஈழத் தமிழர்கள் ஏராளம். இவர்களையும் தற்போது மிரட்டி வருகிறது வெள்ளைவான் என்றால் நம்பமுடியுமா உங்களால். இந்தக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார் ரஜபக்ஷ.

கடந்த வாரம் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஈழத் தமிழ் இளைஞர் சிவபாலன். ஒரு வெள்ளை நிற மாருதி வேன் வந்து அவர் அருகே நின்றது. அதிலிருந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் ஈழத் தமிழில் அவரிடம், ""உங்கள் பெயர் சிவபாலன்தானே. நீங்கள் விடுதலைப்புலி என நாங்கள் அறிகிறோம். உங்களிடம் விசாரிக்க வேண்டும் வாருங்கள்'' என கூப்பிடுகிறார்கள். ""நான் விடுதலைப்புலி அல்ல, எனது உறவினர்கள் திருச்சியில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க நான் போகின்றேன்'' என விடாப்பிடியாக மறுத்திருக்கிறார் சிவபாலன்.

""அப்படியா... சரி அந்த விபரத்தை அங்கேயுள்ள வெள்ளை குவாலிஸ் வேனில் அமர்ந்துள்ள இந்திய அதிகாரியிடம் விளக்கி சொல்லி விட்டு நீங்கள் போகலாம்'' என அவர்கள் கட்டாயப்படுத்தி அழைக்க... "சரி நான் வருகிறேன்' என சென்ற சிவபாலனை தூக்கிக் கொண்டு இரண்டு வேன்களும் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றது. நான் கொழும்பில் இருக்கிறேனா இல்லை சென்னையில் தான் இருக்கிறேனா என நினைத்தார் சிவபாலன்.

அந்த வானில் என்ன நடந்தது என்பதே ஆச்சரியம் ! துப்பாக்கிகள் சகிதம் இருந்த அந்த 4வரும் சிவபாலனை அடித்து உதைத்தனர். என்னை பேசவே விடவில்லை என்கிறார் சிவபாலன். எனது பையில் இருந்த நாலரை லட்சம் ரூபாவைப் பார்த்த பின்புதான் என்னை அடிப்பதை நிறுத்தினார்கள். எனது உறவினர் ஒருவரின் மருத்துவச் செலவிற்காக நான் அப் பணத்தை எடுத்துச்சென்றிருந்தேன். ஆனால் அந்தப் பணத்தை மட்டுமல்லாது, எனது வாச், மோதிரம், செல்பேசி, என அனைத்தையும் என்னிடத்தில் இருந்து புடுங்கிக்கொண்டனர்.

""நாங்கள் இந்திய உளவுத்துறையின் ஆட்கள். நாங்கள் இலங்கை ராணுவத்துடன் தொடர்பில் இருக்கிறோம். நீ பணம் கொண்டு செல்லும் அந்த உறவினர் பற்றிய விபரங்களை இலங்கை அரசுதான் எங்களுக்குத் தந்துள்ளது. உங்களை இலங்கைக்கு நாடு கடத்த சொல்லி இந்திய அரசு உத்தரவு போட்டுள்ளது'' என தங்களது பில்ட்- அப்பை அதிகரித்தனர். ""நாங்கள் அடுத்த வாரம் வருகிறோம், 25 லட்சம் பணம் எடுத்து வையுங்கள். உங்கள் உறவினரை இலங்கை ராணுவ முகாமில் இருந்து விடுவித்து விடலாம் என்று கூறிச் சென்றுள்ளனர்.

அடுத்த சில நாட்களிலேயே தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு வா என உத்தரவு போட்டார்கள். தாம்பரத்தில் அந்த வெள்ளை வேன் நின்று கொண்டிருந்தது. அந்த வேனுக்குள் ஏற சொன்னார்கள். வேனில் அமர்ந்து கொண்டுவந்த பணத்தை எண்ணி முடித்ததும், அந்த வேன் ஓடத்தொடங்கியது. வண்டலூர் தாண்டி கேளம்பாக்கம் போகும் சாலையில் சிவபாலனைப் போலவே வசந்தியும் ஜெயக்குமாரும் அடி உதையையும் வாங்கிய தோடு நகை, வாட்ச், மோதிரம் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வேனிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்கிற சூழ்நிலையில் தள்ளிவிடப்பட்டார்கள்.

இது இவ்வாறிருக்க, மாநில உளவுப் பிரிவான கியூ பிராஞ்ச் ஒரு ஈழத் தமிழரை பிடித்து சென்று விட்டது. அவரது பெயரைச் சொல்லி அவரை விடுவிக்க ஏற்பாடு செய்கிறோம் என மற்றொரு ஈழத்தைச் சேர்ந்த குடும்பத்திலும் பத்து லட்சம் ரூபாயை இதே பாணி யில் இதே கும்பல் பறித்து சென்றுள்ளது என்றால் நம்ப முடியுமா ? ஆனால் நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, சாதாரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஈழத் தம்பதிகளிடமும் வெள்ளை வேனில் வந்து பணத்தை பறித்துச் சென்றிருக்கிறார்கள் என கதறுகிறார் ஒரு ஈழத் தமிழர்.

பணத்தை பறி கொடுத்தவர்கள் போலீசில் புகார் கொடுத்தால் தமிழக போலீசாரால் வேறெதாவது தொல்லை வருமோ என அஞ்சும் இவர்களது வீக்னசை பயன்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்த வெள்ளை வேன்களின் தலைவன் யார் ????????????? இதற்கு எல்லம் யார் காரணம் என ஆராய்ந்த பொலிசார் ஒருவரைக் கைதுசெய்துள்ளது. ""அவன் பெயர் ரஜினிகாந்த். இவனிடம் பணத்தை பறிகொடுத்த சிவபாலன் அவரை அடையாளம் காட்டினார். சாலிக்கிராமத்தில் ஒரு பெரிய ஃபேன்சி ஸ்டோரை நடத்துகிறான் ரஜினிகாந்த். சிவபாலனிடம் பணம் பறித்ததை அவன் ஒப்புக் கொண்டான்.

இதுபோல கடந்த ஒரு வருடத்தில் 50 சம்பவங்களில் அவன் ஈடுபட்டிருக்கிறான். இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை ஆதரித்த அமைப்பான ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த இவ னும் மோகன் என்பவனும் சேர்ந்து தான் ராஜபக்சே ஸ்டைலில் வெள்ளை வேன்களை தமிழகத்தில் இயக்குகிறார்கள். நாங்கள் ரஜினி யை நெருங்கிவிட்டதை அறிந்து மோகன் டெல்லிக்கு சென்று பதுங்கிவிட்டான். அவனுக்கு உதவி செய்தவர்களும் சிதறி ஓடிவிட் டார்கள்.

அவனிடம் விசாரித்தபோது, "ஆமாம் நாங்கள்தான் சிவபால னையும் மற்றவர்களையும் தாக்கி னோம். இந்திய உளவுத்துறை சொன்னதால்தான் இவற்றை செய்தோம். அவர்களிடம் கொள்ளையடித்த பணத்தையெல்லாம் அவர்களிடம் கொடுத்து விட்டேன். அதற்கு நன்றியாக இவ்வளவு பெரிய கடையை எனக்கு அவர்கள் வைத்து கொடுத்திருக் கிறார்கள்' என வெளிப்படையாகவே சொல்கிறான் ரஜினி. அவனை எங்களால் என்ன செய்ய முடியும்''

தொப்புள்கொடியாம் தாய் தமிழகத்தை நம்பிவந்த ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது.

Comments