நாடு கடந்த பொறியில் சிக்குமா தமிழ்த் தேசியம்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSxHp8sB8R-Gi9IzKAvyd7iBCyWFBO8wlq1pMR2azCgTKf9iwoQDnnnR3cUWAliJcTk7AI12l6H98MBjjWBsvrQbtLq6FBXXWLvgzFqiEWvp246UZL_a_48cN7FSc3xEPmG6JZdR3I3qfe/s1600/mahindapasil+01.jpgஅமெரிக்காவிலிருந்து ஓர் ‘ஆழமான வட்டம்’ சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவிற்கும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையின் பிரதான அதிகாரிகளுக்கும் பல வருடங்களாக ஆலோசனை வழங்கிவருகிறது.

இந்த ‘ஆழ்வட்ட’த்திலிருந்து மீளமுடியாத ஒரு பொறிக்குள்ளேயே கே.பி. சிக்கியதாக 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்தேறிய விடயங்களை வரிசைக்கிரமமாக அடுக்கி ஆராயும்போது புலப்படுவதாக தமிழ்த் தேசிய இராணுவ விஞ்ஞான ஆய்வாளர்கள் சிலர் தீர்க்கமாக நம்புகின்றனர்.

குறிப்பாக, புலம்பெயர் சூழலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்போர் வெளிப்படுத்திய தாக்கம் காரணமாக குறித்த ‘ஆழ்வட்டம்’ சலனமடைந்தாலும் ‘பொறி’ சுதாகரிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுகின்ற அபாயம் தோன்றியுள்ளது.

கே.பி.யை ஒத்திசைந்து ஒருதிசை நோக்கி இயக்குவதற்குப் புலம்பெயர் சூழலில் பலர் தம்மை அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தப்பட்டிருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இவர்களில் தீவிரமாய் நின்றவர்களில் பலர் தமிழ்த்தேசிய வேர் மட்டத்தால் அடையாளம் காணப்பட்டுவிட்டனர். தேர்தல்களிலும் ஒதுக்கப்பட்டனர்.

இவர்களில் பலர் உண்மையில் ‘ஆழ்வட்ட’த்தின் வேலைத்திட்டத்திற்குள் தாம் அகப்பட்டிருப்பதை அறிந்துகொள்ளாத நிலையில் ஈடுபட்டவர்களே. ஆனாலும், புலம்பெயர் சூழலில் ஒரு ‘அறிதுயில்’ மட்டம் அடையாளம் காணப்பட்டாலும் தனது செயற்பாடுகளில் இருந்து இன்னும் முழுமையாகத் தனிமையாக்கப்படாமல் ஆபத்தான நகர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

இது பல ஊடகங்களையும் ‘சாமர்த்தியமாக’ கையாள்கின்றது. இந்நிலையில் சக்திகளின் ‘ஆழ்வட்டமும்’ புலம்பெயர் தமிழர் சிலரின் ‘அறிதுயில்’ வட்டமும் என்ன செய்கின்றன, அல்லது என்ன செய்ய எத்தனிக்கின்றன என்பது குறித்த சிந்தனைத் தெளிவு தமிழ்த்தேசியத்தினருக்கு மிகவும் அவசியமாகின்றது.

அமெரிக்காவின் ‘கோடிப்புறத்தில்’ நாடுகடந்த தமிழீழம் ஒருவரின் தலைமைக்கு உள்ளாக்கப்பட்டு
பொம்மையாக வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று ‘ஆழ்வட்டம’ எதிர்பார்க்கிறது. இது கே.பி. நகர்வுக்கு அடுத்தபடித் திட்டம். இதற்கு தமிழர்களின் ‘அறிதுயில்’ வட்டம் தனது முழு ஒத்தாசையை வழங்கிக்கொண்டிருக்கிறது.

அறிந்தே அது ஒத்தாசை வழங்குவதாலும், ஒருவரோடும் தொடர்பில்லாததுபோலவும், துயிலில் இருப்பது போலவும் அது தன்னைக் காட்டிக் கொள்கிறது. அதேவேளை ‘அறியாத’ பலர், குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசுக்குத் தேர்வான பல பிரதிநிதிகள், பின்னணி விவகாரங்களைச் சரியான முறையில் புரியாத நிலையில் இந்தத் திட்டத்திற்கு ஒத்துப் போகும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இதற்காகவே நியூயோர்க் கூட்டத்தை திட்டமிட்டு ஆழ்வட்டத்திற்காக, அறிதுயில் வட்டம் நடத்த எத்தனிக்கிறது என்பதே கவலை தரும் விடயம். ‘ஆழ்வட்ட’த்தின் பொறியின் ‘அரங்கேற்றக் களமாக’ நியூயோர்க்கில் நாளை நடைபெறும் நாடுகடந்த அரசாங்கத்தின் யாப்பமர்வு அமையப்போவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெளிவாக வெளியாகியுள்ளன.

எமக்குக் கிடைக்கப் பெற்ற, திருத்தப்பட்ட மாதிரி யாப்பு இதற்கான அறிகுறிகளை தெளிவாகக் காட்டுகிறது.

இந்த ஆழ்வட்டம் அமெரிக்க பென்ரகனின் அதிகாரிகளையும், முக்கியமாக கடற்படை இராணுவ அதிகாரிகளையும், ‘யூ.எஸ். பசிபிக் கொமாண்ட்’ (உஸ்பாகொம்) இணைத்து ‘நேசா’ என்றழைக்கப்படும் ‘சமீப கிழக்கு தென்னாசிய மையம்’ என்ற நிறுவன வடிவுக்குள்ளிருந்தவாறு சிறிலங்கா, இந்திய இராணுவ அதிகாரிகளுக்கிடையே உறவுப்பாலங்களை ஏற்படுத்திச் செயற்பட்டுவருவதாக நம்பப்படுகிறது.

இந்த நேசா நிறுவனத்தின் பென்ரகன் சூத்திரதாரி சில கிழமைகளுக்கு முன்னர் கோத்தபாயா பெரும் எடுப்பில் காலியில் நடாத்திய காலிச் சம்பாசணையில் பிரதான பங்கு வகித்த பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்.
இந்த ஆழ்வட்டத்தின் ஒரு பகுதி ‘சாணக்கியர்களே’ கே.பி. விவகாரத்தைச் செயற்படுத்தினார்கள் என்றும் ஊகிக்கமுடிகிறது.

இந்த விடயங்கள் ஆதாரங்களோடு எவராலும் சொல்லப்படமுடியாத வகையிலேயே நகர்த்தப்படுவதால் கூர்மையாக நிலைமையை அவதானித்து வருவோரால் மாத்திரமே போக்குகளை உய்த்துணர்ந்தே தீர்மானிக்கவேண்டும்.

இலங்கைத் தீவில் ஐ.பி.கே.எப் இன் அனுபவத்தைக் கற்பதிலும் சில வருடங்களாகக் கடும் கவனம் செலுத்துகிறது இந்த நேசா மையம். இந்திய இராணுவ மையங்களுடன் சேர்ந்தே தமிழ்த் தேசியத்தை வீழ்த்துவதற்கான ஓர் இராணுவ வியூகத்தை நேசா வகுத்திருக்கிறது.

சீனாவையும் ராஜபக்சாவையும் ‘பூச்சாண்டியாகக்’ காட்டி பல விடயங்கள் திரைமறைவில் நாசூக்காக நகர்த்தப்பட்டுவந்துள்ளன.

இதன் சூட்சுமங்கள் படிநிலையில்:

• முதலில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை இராணுவ ரீதியாக சிறிலங்கா முறியடிப்பதற்கான ‘பாதை வரைபை’ தாயகத்தில் நடைமுறைப்படுத்துவது. (இது நடந்து முடிந்து விட்டதாக இந்த ‘ஆழ்வட்டம்’ தற்போது நம்புகிறதாயினும், சில ஆழமான ஐயங்களையும் அது தன்னகத்தே கொண்டிருப்பதும் புலப்படுகிறது.)

• தமிழ்த் தேசியத்தின்பால் நிற்கும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை தமது சிந்தனைக்கேற்ப மட்டுமே செயற்படவைப்பது. நாடு கடந்த அரசாங்கம், ஜி. ரி. எப் போன்ற கட்டமைப்புக்களே இங்கு இலக்காகும். இதனால், நாடுகடந்த அரசாங்க அமைவை ‘ஆழ்வட்டம்’ ஆழமாகவே அணுகிவருகிறது.

இதை யாப்பு ரீதியாகவே தமிழ்த்தேசியத்தினர் கையாள வேண்டும். ஜி.ரி.எப் பின் முதல் தலைவரை அமெரிக்கா சிறிலங்கா சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு வேண்டியிருந்தது. அவர் ஐரோப்பாவில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக அத்திட்டத்தைக் கைவிட்டார்.

அண்மையில் அமெரிக்கா வந்திருக்கும் ராஜபக்சாவை ஜி.ரி.எப் இரகசியமாகச் சந்திக்கவேண்டும் என்று ஒரு முயற்சி ஆழ்வட்டத் தரப்பால் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டது, அதுவும் பலிக்கவில்லை. இதற்கு ஏதுவாகவே ஊடகக்காரரான ரங்காவை ராஜபக்சா அழைத்து வந்திருப்பதாக கொழும்பிலிருந்து நம்பகமான தகவல். தனது மகனைப் போல ராஜபக்சா ரங்காவை அமெரிக்காவில் காட்டியிருப்பது பகிரங்கமாகவே
அவதானிக்கப்பட்டுள்ளது.

• சீனாவுடனான ராஜபக்சாவின் உறவைச் சாட்டாக வைத்து தம்மை நோக்கிப் பழிவராத படி அமெரிக்கா பார்த்துக்கொள்ளும்.

• தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தாயகத்தில் உள்ள சகல தமிழ்த் தலைமைகளையும் இந்தியா மறுபுறத்தில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. அமெரிக்க நகர்வுகள் குறித்து இந்திய வட்டாரங்கள் உள்ளுக்குள் கிலேசமடைந்திருந்தாலும் நடைமுறையில் ஒரு விதமான வேலைப் பங்கீடு அவர்களுக்குள் இருந்து வருகிறது.

புலம் பெயர் சூழலில் தமிழ்த் தேசியத்தின் ‘பொம்மைத் தலைமை’ ஒன்றை தனது கைக்குள் வைத்துக்கொண்டு சிங்களத் தேசியத்தை சீனாவின் பக்கம் முழுமையாகச் செல்லாமல் பார்த்துக்கொள்வது. தமிழருக்கிடையில் ஒரு ‘கற்பனையான தமிழீழத்தை’ அமைத்துவிட்டது போன்ற தோரணையைக் காட்டிபோராட்டத் தீவிரத்தைக் குறைத்து வைத்திருப்பது ஒரு உள்ளார்ந்த நோக்கம்.

அதேவேளை ‘தமிழ்த் தேசியம் ஆபத்தானது’ என்ற கருத்தை கச்சிதமாக ‘அளந்த முறையில்’ சிங்களத் தேசியத்திற்கு புலம் பெயர் சூழலில் இருந்து வெளிப்படுத்திய வண்ணம் இருக்கவேண்டும் என்பதும் அமெரிக்க எண்ணம். சிங்கள அரசை தனது வழிப்படுத்த இது ஒரு கருவி என்று ஆழ்வட்டம் கருதுகிறது.

இது தமிழகத்தை தட்டியெழுப்புவதாகப் போய்விடாத வகையில் இதன் ‘அளவைப்’ பேணவேண்டும் என்பதில் இந்தியா கரிசனையாக இருக்கிறது. இதனாலேயே தலைமையைத் தமது கொல்லைப் புறத்தில் வைத்துக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா இருக்கிறது. தனது கட்டுப்பாட்டில் இருந்தால் தானே தமிழ்த் தேசிய எழுச்சியை உண்மையான எழுச்சியாகாத வண்ணம் அளந்து கட்டுப்படுத்தலாம். சிங்கள அரசை தனது வழிப்படுத்தியதும் அடுத்த கட்டம் சிங்கள அரசுடன் ஒத்துழைக்கும் படலத்துக்கு தமிழர்களின் ‘பொம்மைத் தலைமைகள்’ நகர்த்தப்படும்.

• இந்த இடைவெளியில், இந்தியா அரசியல் தீர்வொன்றைப் புகுத்தி தமிழீழக் கோரிக்கையை வேரறுப்பது இந்தியத் திட்டம். ஏற்கனவே பலமுறை தோற்றுப்போன திட்டம் தான். சிங்கள அரசு ஒரு மக்கள் வாக்கெடுப்பை கிழக்கில் நடாத்தி வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரித்துவிடும் அபாயமும் இருக்கிறது.

ஏதோ ஒரு வடிவில் ஒரு குறைந்த பட்சத் தீர்வை ராஜபக்சாவைக் கொண்டு இந்தியா நகர்த்தவேண்டும் என முயற்சிக்கிறது. இது 13ம் சட்டத்திருத்தத்திற்கும் குறைவானதாகவே நடைமுறையில் இருக்கும் என்பது சிங்களத் தேசியவாத எழுத்தாளரான டயன் ஜயதிலகேயின் கருத்து.

இதற்கான முன்னகர்வுகள் பல வடிவங்களில் (சூரிச், வியன்னா, தற்போது இலண்டன்) இந்திய மேற்கு ஒத்துழைப்புக்களோடு முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து உளவுத்துறைகளோடு சேர்ந்து இயங்குவதில் தனக்கென்றே ஒரு முத்திரையைப் பதித்துக் கொண்ட சந்திரகாசன் இலண்டனில் தமிழ் தகவல் மையத்தின் முஸ்தீபில் இந்தக் கிழமை மந்திராலோசனை நடாத்திக்கொண்டிருக்கிறார்.

• அபிவிருத்தி என்ற பெயரில் மேற்குலக உதவியுடன் முழு இலங்கைத் தீவையும் கலப்படமாக்கி சிறிலங்கா என்ற ஒரு சாத்தியமேயில்லாத தேசியத்தை நோக்கி அடுத்த ஒரு சில வருடங்களுக்குள் தீவை நகர்த்துவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை. இதற்கு ராஜபக்சாவையோ, பொன்சேகாவையோ யார் வென்றாலும் அவரவர் பாணியில் பயன்படுத்துவதற்கு தயாரான நிலையிலேயே ‘ஆழ்வட்டம்’ இயங்கிவருகிறது.

• சமாந்தரமாக, பொருளாதார ரீதியாக முழு இலங்கைத் தீவையும் வென்றெடுத்து நேரடியான இராணுவத்தளங்களை தீவில் நிறுவிக்கொள்வது.

மேற்குறித்த விடயங்களை எவ்வளவு தூரம் விரைவு படுத்த முடியுமோ, அதற்குத் தக்கவாறு வேலைத் திட்டங்களை குறித்த ‘ஆழ்வட்டம்’ நகர்த்திவருகிறது. இதிலே சிறிலங்காவின் உள்ளரங்கில் உள்ள வில்லன்களும் கீறோக்களும் ஒரே சக்திகளால் கையாளப்படுவர்.

இதேபோல தமிழ்த் தரப்பிலும் வில்லன்களும் கீரோக்களும் ‘உருவாக்கப்பட்டு’ கையாளப்படுவர். இதுவே நியூயார்க்கில் ஒரு மனிதரின் தலைமை உருவாக்குவது என்பதிலும், அந்த ஒரு மனிதர் தனது விரல்களால் சுட்டிக் காட்டுபவர்களே அமைச்சர்களாக அமைய வேண்டும் என்பதிலும் அதீத அழுத்தத்தோடு குறித்த வட்டாரங்கள் செயற்படுகின்றன.

இதற்கு முண்டு கொடுக்கும் வகையில் ஒரு செனட் சபை அமையவேண்டும் என்பதும், தாம் நினைத்தது போல ஒன்றில் பத்து அளவு பிரதிநிதிகளோடு மாத்திரம் தீர்மானங்களை நிறைவேற்றிவிடும் வகையில் யாப்பு நிறைவேற்று அதிகாரங்களை ஒரு மனிதருக்கு வழங்க வேண்டும் என்பதும் சில ‘ஆழ்வட்டத்’ தரப்புகளாலும், ‘அறிதுயில்’ தரப்புகளாலும் அதேவேளை அறியாத தரப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது.

மந்திரி பிரதானிகளை மட்டுமல்ல, எந்த ஒரு அதிகாரியையும் நிறைவேற்று அதிகாரமுடையவரான அந்த ஒருவர் (பிரதம மந்திரி) நியமித்துக்கொள்ளும் அதிகாரத்தையும் யாப்பு வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது ஆழ்வட்டம்.

இது மட்டுமல்ல, நாடு கடந்த பிரதிநிதிகளின் அவை கொண்டுவரும் தீர்மானங்கள் எவையும் ‘பிரதமரின்’ சம்மதமின்றி செல்லுபடியாக முடியாதென்று யாப்பில் வலியுறுத்த இந்தத் தரப்புகள் முயற்சிக்கின்றன.
பிரதிநிதிகள் ஜனநாயக ரீதியாக பிரேரிக்கும் தீர்மானங்களை 14 நாட்களுக்குள் ‘பிரதமர்’ நிராகரிக்கலாம்.

இவ்வாறு நிராகரிக்கும் தீர்மானங்களை மீண்டும் ‘பாராளுமன்றம்’ மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு மாத்திரம் தான் நிறைவேற்ற முடியும். தமிழ்த் தேசியம் பாதுகாக்கப்படவேண்டுமாயின் ‘மாட்டியும் மாட்டாத படியான’ ஒரு பொறியியலில் தன்னைச் செயற்படுத்தவேண்டும். ஆனால், எழுதப்பட்டிருக்கும் யாப்புக்கான நகல் அவ்வாறான ஒரு கட்டமைப்பை முன்வைக்கத் தவறியுள்ளது.

இதைத் திருத்துவார்களா நாளை நியூயோhக்கில் கூடப் போகும் பிரதிநிதிகள் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவை வாசகர்களில் எவரையேனும் நெருடினால், அல்லது கற்பனைக் கட்டுக் கதை போலத் தோன்றினால், அப்படியே அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியத்தின் நன்மை கருதி இதைக் ‘கற்பனை’ ஆக அல்லது ஒரு ‘எடுகோளாக’வேனும் எடுத்துக்கொண்டு கூட நடைமுறையில் எந்த ஒரு பொறிக்குள்ளும் தேசியம் மாட்டிவிடாது பாதுகாக்க வேண்டியது எமது கடமையல்லவா?

- new சங்கதியின் ஆய்வு

Comments