கட்டியிருந்த கோவணமும் பறிபோகுதடா... தமிழா: வலம்புரி

“பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டேன். கட்டியிருந்த கோவணமும் பறிபோனது.”என்ற கவிப்பேரரசு வைர முத்துவின் வைர வரிகள்தான் எங்கள் நிலைமையை நினைக்கும் போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

தமிழினத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்று யாரேனும் கேட்டால் கண்ணீரைத் தவிர வேறு எதனையும் பதிலாகத் தரமுடியாது. அந்தளவிற்று நிலைமை மோசமாகி வருகிறது. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம் அமைக்கப்படும் பணி நடைபெறுகின்றது.

முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழல், அங்கிருந்த இறைபக்தி, நம்பிக்கை என அனைத்தும் வெறுமையாகிப் போகும் அளவில் அந்தப் பகுதி ஆக்கப்பட்டுள்ளது.

இந்துசமயம் சார்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழலில் ஹோட்டல் அமைக்கும் பணி நடந்தேறியுள்ளது. ஹோட்டல் என்றால் அங்கு மதுவும் மாமிசமும்தாராளமாக பரிமாறப்படும்.

அவ்வாறாயின் முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழலின் புனிதத் தன்மையை வேரறுப்பதே இதன் நோக்கம் ஆகும். இத்தகைய செயற்பாட்டின் மூலம் வடக்கில் தமிழர்களின் தனித்துவமான இடங்கள் என எதுவும் இருக்கக் கூடாது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற திட்டம் அமுலாகுவதை உணர முடியும். அதேநேரம் வரலாற்றுப் பெருமைமிக்க இந்து ஆலயங்கள் இந்த நாட்டில் இருந்த தமிழர் ஆட்சியை சான்று படுத்துவதாகவும் இருக்கின்றது.

இதன் காரணமாக வரலாற்றுப் பெருமைமிக்க இந்து ஆலயங்களை அண்மித்து பெளத்த விகாரை களை அமைப்பது. பேரினவாதத்தின் முக்கிய செயல் முறையாக உள்ளது. அதன் அடிப்படையிலேயே முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் அருகில் பெளத்த விகாரை அமைக்கும் பணி நடைபெறுகின்றது.

இத்தகைய செயல்கள் வரலாற்றை மாற்றிய மைக்கும் நோக்குடையவை. எனவே இவற்றை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பது தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை எடுத்துக்கொண்டவர்களின் கடமையாகும்.

என்னும் இது விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கவனம் செலுத்துவதாக இல்லை. அவர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்குச் சந்தேகம் தருவதாக மட்டுமே அமை கின்றன. எதுவாயினும் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் சிறிதாயினும் அதன் கீர்த்தி மகத்தானது. இந்த மகத்துவம் அங்கு இருக்கக்கூடிய அமைதி யான - சைவத்தன்மை வாய்ந்த ஆடம்பரமற்ற சூழமைவாலும் - அதீத இறை நம்பிக்கையாலும் உருவானதாகும்.

இதற்கு இடையூறு விளைவிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்பதால், இது விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை தலையிடுமாறு தமிழ் அரசியல் தலைமைகள் கோரிக்கை விடவேண்டும்.

இதைவிடுத்து எதைக்கண்டும் அமைதியாக இருப்பதற்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தேவையற்றது என்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

Comments