ராஜபக்ஷவிடம் கொள்ளிக் கட்டை வாங்கித் தலையைச் சொறிந்து கொள்ள முயற்சிக்கின்றதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

கடந்த வாரத்தில் ஒரு செய்தி கசிந்தது. சிறிலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிய ஐ.நா. செயலர் பான் கி மூன் அவர்கள் நியமித்துள்ள ஆலோசனைக் குழுவின் நகர்வுகளைப் பின்போடுமாறு இந்தியா ஐ.நா.விடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை யுத்தத்தின் பங்குதாரரான இந்தியா போர் முடிவுற்ற பின்னர் ஈழத் தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக மேற்குலக நாடுகளால் சிறிலங்கா மீது மேற்கொள்ள முற்பட்ட அனைத்து அழுத்தங்களையும் இந்தியாவே தகர்த்து சிறிலங்காவைக் காப்பாற்றியது. சிறிலங்கா இன அழிப்பு நடவடிக்கைகளையும், இன ஒடுக்கு முறையையும், நில ஆக்கிரமிப்பையும் தொடர்ந்த காரணத்தால் எழுந்த மேற்குலகின் அழுத்தங்கள் ஐ.நா. செயலர் பான் கி மூனின் தூக்கத்தைக் கெடுத்தது. அதனால், சிறிலங்கா விடையமாகத் தனக்கு ஆலோசனை வழங்க மூவர் கொண்ட குழு ஒன்றை நியமித்தார். இந்த மூவர் குழு தமது விசாரணைகளை ஆரம்பிக்க உள்ள நிலையிலேயே இந்தியா அதனைத் தடுத்து நிறுத்தும் பெரு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுடன் நெருக்கமாக இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் இந்தியா தனது செல்வாக்கைச் செலுத்தும் என்பது எதிர் பார்க்கப்பட்ட விடயமே. அதன் பிரகாரம், 'இலங்கை அரசோடு தற்போதைக்கு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை' என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசை எவ்வாறாவது ஒரு வழிக்கு கொண்டுவந்து தமிழர் நலன் குறித்த விடயங்களை நிறைவேற்றவே தாங்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். இது கடந்த காலத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையை நினைவூட்டுகின்றது. தனித் தமிழீழக் கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அ. அமிர்தலிங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவைர் பதவியைப் பெற்றுக் கொண்டதுடன் திருப்திப்பட்டு, ஏனைய எல்லாவற்றையும் கை கழுவி விட்டுவிட்டது.

யுத்த அழிவுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு இனியும் விலை போகாது என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்து சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில், பாதிச் சிங்களவரான பியசேனா சிங்கள தேசியத்தினுள் கரைந்து மகிந்த அணிக்குத் தாவிவிட்டார். இப்போது எஞ்சியிருக்கும் கூட்டமைப்பினராவது கொள்கை அளவில் உறுதியாக, சிங்கள இனவாத தேசியத்தை எதிர்த்துப் போராட முன்வராவிட்டால், அவர்களில் பாதிப்பேரை அடுத்த ஆண்டுக்குள் சிங்கள தேசியம் தனக்குள் கரைத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை அரசு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் குறித்து அரசுடன் இணைந்து இயங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியிருப்பதாகவும் , இது குறித்து அரசுடன் சேர்ந்து பணியாற்ற தமது அமைப்பிலிருந்து சிலரின் பெயர்களை கூட்டமைப்பு அரசிடம் அளித்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. முதலில் இனப் பிரச்சினைக்கு இணைந்து இயங்குவதற்கு முன்னர் தமிழ் மக்களது உயிருக்கும், உடமைக்கும், மானத்திற்கும், பூமிக்குமான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

திட்டமிட்ட குடியேற்றங்களால் தமிழ் மக்களது பிரதேசங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிப்புச் செய்யப்படுகின்றது. இராணுவ மயப்படுத்தப்பட்டு, வன்னிப் பெரு நிலம் இராணுவ குடும்பங்களின் குடியேற்ற நிலங்களாக மாற்றப்படுகின்றது. யுத்தம் முடிந்த பின்னரும் இராணுவ முற்றுகைக்குள்ளேயே மக்கள் குடியிருக்கவும் பயணப்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். யாழ். குடாநாடு சிங்களவர்களால் நிரப்பப்பட்டு தமிழர்கள் அச்சத்துள் வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். செல்லுமிடத்துக்கான முகவரியை சிங்களத்தில் கேட்க வேண்டிய பரிதாபகரமான நிலையில் தமிழ் மக்கள் தலைவிதியை நொந்து கொள்கிறார்கள். மினி பஸ்களிலும், தேனீர்க் கடைகளிலும் சிங்களப் பாட்டுக்கள் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். புத்த கோவில்கள் பிரமாண்டமாக எழுப்பப்படுகின்றன. இதற்குள் எங்கே அரசியல் தீர்வுக்கான வழி கிடைக்கப் போகின்றது.

யுத்தம் காரணமாக வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யவும், மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்றவற்றுக்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கத்தயாராக இருப்பதாக, கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து அரசு நியமிக்க உள்ள குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இடம்பெறும் உறுப்பினர்கள் பெயரைத் தருமாறு, சமீபத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டிருந்தார். இதனடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரது பெயர்கள் அரசுக்கு தரப்பட்டிருகின்றன என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆக, டக்ளஸ் தேவானந்தவின் பாதையில் சம்பந்தரும் பயணிப்பதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு எதற்கு என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகப் போய்விடும். ஈழத்தைக் கொழுத்திய ராஜபக்ஷவிடம் கொள்ளிக் கட்டை வாங்கித் தங்கள் தலையைச் சொறிந்து கொள்ளும் முயற்சி ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளதாகவே தமிழ் மக்கள் நம்புகின்றார்கள்.

போர் முடிந்து சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ஆகியிருந்த நிலையில், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் நடவடிக்கைகளை எடுக்க, அரசாங்கத்தின் சார்பில் அவசரத்தன்மை காட்டப்படவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் போதிய அழுத்தம் தரவில்லை என்ற கருத்துக்களை முற்றிலுமாக மறுக்க முடியாது என்று ஒப்புக்கொண்டுள்ள சம்பந்தன், இந்த காலகட்டத்தில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவை நடந்திருக்கின்றன, அரசு, அவர்களுக்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளே மகிந்தவின் 18 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஒரு சர்வாதிகார ஆட்சிக்கான அடித்தளமாக அச்சத்துடன் நோக்குகின்றது. பல அரசியல் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும் சிறிலங்கா அரசை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். இந்த அரசியல் திருத்தச் சட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படும் கருத்து அதை விடவும் அதிர்ச்சியானது என்பதில் சந்தேகம் இல்லை.

- அகத்தியன்

Comments