காமன்வெல்த் போட்டிகளின் இறுதி விழாவின் சிறப்பு விருந்தினராக மஹிந்த: வைகோ-நெடுமாறன் கண்டனம்

நாளை மறுதினம் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியா அழைத்துள்ளது. இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 71 நாடுகள் கலந்து கொள்ளும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், டெல்லியில் ரூ.70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன.

விழாவைக் கோலாகலமாகத் தொடங்கிவைக்க, இங்கிலாந்து அரசு குடும்பத்தின் பிரதிநிதியாக, இளவரசர் சார்லஸ் இந்திய அரசால் அழைக்கப்பட்டு, அவரும் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.

நாளை மறுநாள் இந்தப்போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முடித்து வைக்க, ராஜபக்சேக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஈழத் தமிழர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கிய ராஜபக்சே அரசின் குற்றங்களை ஆய்வு செய்ய, ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் மூவர் குழுவை அமைத்து உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் கூடிய, பன்னாட்டு நீதிமான்களின் தீர்ப்பாயம், சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்காக, வரிச் சலுகைகளை ரத்து செய்தது. அனைத்து உலக நாடுகளின் சிங்கள அரசு செய்த இனக்கொலை பற்றிய, விழிப்புணர்வு வேகமாக ஏற்பட்டு வருகிறது. எனவே மகிந்த ராஜபக்சேயைப் பாது காப்பதற்காகவே, இந்த துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தாங்கள் விரும்பியவாறு போரை நடத்திய, இலங்கை அரசுக்கு உதவ வேண்டியே, இந்திய அரசு ராஜபக்சேயை இந்தியாவுக்கு அழைத்து வந்து, நான்கு நாட்கள் அரசு விருந்தாளியாக ஏற்கனவே உபசரித்தது. அந்த இந்திய அரசே ராஜபக்சேயை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை முடித்து வைக்கின்ற கெளரவத்தைக் கொடுத்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுமை செய்யவில்லை என்ற எண்ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இதை இந்திய அரசு செய்கிறது.

நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் டெல்லி மாநில முதல் வரை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததற்கு நியூசிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க நேரிட்டது.

மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார். ஆனால், தாய்த் தமிழகத்து மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாடச் சம்பவங்களாகிவிட்டன. அப்படியானால், தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா?.

வேல் பாய்ந்த இருதயத்துக்குள்ளே சூட்டுக் கோலைத் திணிப்பதுபோல, தற்போது, ராஜபக்சேக்கு காமன்வெல்த் போட்டிகளை முடித்து வைக்கின்ற மரியாதையை வழங்கி உள்ளதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அரசும், அதனை இயக்குகின்ற தலைமையும், அந்த அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், பொறுப்பாளிகள் ஆவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

ராசபக்சேவை அழைக்கும் செயலை த‌மிழ‌ர்க‌ள் ம‌‌ன்‌‌னி‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்: பழ.நெடுமாறன்

சர்வதேச நாடுகளால் மனித உரிமை மீறல்களைச் செய்த போர்க்குற்றவாளி எனக் கண்டிக்கப்பட்ட இல‌ங்கை அ‌‌திப‌ர் ராசப‌க்சேவை காமன்வெல்த் நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்த இந்திய அரசின் செயலை தமிழர்க‌ள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எ‌ன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல்,

அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் காமல்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக ராசபக்சேயை இந்திய அரசு அழைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பிரிட்டன் உள்பட காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த பல நாடுகளாலும் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளாலும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியவர் எனப் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டவர் இராசபக்சே.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இராசேந்திர சச்சார் உட்பட பத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் ராசபக்சே ஒரு போர்க் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்த விசாரணைக் குழுவை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து உலக நாடுகளின் அமைப்பையே அவமதித்தவர்.

இத்தகைய ஒருவரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி விழாவை முடித்துவைக்க இந்திய அரசு அழைத்திருப்பது தமிழக மக்களின் வெந்த உள்ளங்களில் வேலைச் செருகுவது போன்ற வேதனையைத் தந்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்தவர் மட்டுமல்ல. முள்வேலி முகாம்களில் இன்னமும் 30,000க்கும் மேற்பட்ட தமிழர்களை அடைத்து வைத்துச் சித்திரவதை செய்வதாக அண்மையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எழுத்து பூர்வமான புகார் அளித்திருக்கிறார்.

தமிழர்களின் உணர்வுகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சர்வதேச நாடுகளால் மனித உரிமை மீறல்களைச் செய்த போர்க் குற்றவாளி எனக் கண்டிக்கப்பட்ட ஒருவரை காமன்வெல்த் நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்த இந்திய அரசின் செயலை தமிழர்களும், மனித நேயம் படைத்தவர்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எ‌ன்று பழ. நெடுமாறன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Comments