ஐ.நா மற்றும் செஞ்சிலுவைக் குழு செல்ல முடியாத இடங்களில் 5000 முன்னாள் போராளிகள்

சிறிலங்காவில் ஐ.நாவோ அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவோ செல்ல முடியாத இடங்களில் 5000 முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியாக இருந்த நீல் புனே நேற்றுடன் கொழும்பில் பணியை முடித்து கிளம்பியுள்ளார்.

அவர் கடைசி நாளான நேற்று கொழும்பிலுள்ள ஐ.நா தலைமைப் பணியகத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ இருபத்தைந்து ஆண்டுகால போரின் பின்னர் சரணடைந்த 5000 முன்னாள் போராளிகளே 21 மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு ஐ.நா அதிகாரிகளோ அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அதிகாரிகளோ அனுமதிக்கப்படுவதில்லை.

அதேவேளை மேலும் 5000 முன்னாள் போராளிகள் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடபகுதியைப் புனரமைக்க 280 மில்லியன் டொலர் தேவைப்படுகிறது.

இதற்கென சிறிலங்கா அரசுடன் ஐ.நாவும் அனைத்துலக உதவி நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

வீடுகளை மீளக்கட்டுவதற்கும், பாடசாலைகள், அரசாங்கப் பணியகங்கள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மீளவும் ஏற்படுத்துவதற்கும் இன்னும் ஏராளமான நிதி தேவைப்படுகிறது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments