பேரறிவாளன் வெளியே வருவான்! – சோலையார்பேட்டையில் கொந்தளிப்பு

கடந்த 22-ம் தேதி வேலூர் மாவட்ட சோலையார்பேட்டை கே.ஜி.எஸ். திருமண மண்டபத்தில் ‘மரண தண்டனை ஒழிப்பு மற்றும் தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்’ எனும் நூல் ஆய்வுக் கருத்தரங்கம் நடந்தது. இதில், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோருடன், பேரறிவாளனின் பெற்றோரும் கலந்து கொண்டனர்!

பேரறிவாளன்… தமிழக மக்களால் மறக்க முடியாத பெயர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெடிகுண்டுத் தயாரிக்க பேட்டரி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 21 வருடங்​களுக்கும் மேலாக சிறைக் கம்பிகளுக்கு பின்னால், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருப்பவர். இவரது சொந்த ஊர், இந்த நிகழ்ச்சி நடந்த சோலையார்பேட்டைதான்.

கருத்தரங்கில் பேசிய கொளத்தூர் மணி, »பேரறிவாளன் மீது தடா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். தடா சட்டம் என்பது, இந்திய மக்களை அச்சப்பட வைப்பதும் குழப்பத்தை ஏற்படுத்துவதும் ஆகும். காவல் துறை விசாரணை தாக்கல் செய்த அறிக்கையிலேயே பொட்டு அம்மான் சொன்னதாக ‘சிவராசன், தணு, சுபா இவர்கள் மூவரைத் தவிர வேறு எந்த நபருக்கும் இது தெரியாது’ என்று வருகிறது. அப்படி இருக்கும்போது பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தான் என்ற ஒரே காரணத்துக்காக அப்பாவியை அடைத்து வைக்கலாமா?


சில வருடங்களுக்கு முன்பு அப்துல் காதிர் என்ற காவல்துறை அதிகாரி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்​டார். அந்தக் கடிதத்தில், ‘என் மனசாட்சிக்கு விரோதமாக 11 வருடங்களுக்கு முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். அப்போது ஒரு பெண் பாலியல் பலாத்காரம் கொலை சம்பந்தமாகக் குற்றவாளியைத் தேடியபோது, எனது மேலதிகாரி ‘இன்னும் இரண்டு நாட்களில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உன்னை வீட்டுக்கு அனுப்பி விடுவேன்’ என்றார். அதனால் தெருவோரம் படுத்துக் கிடந்த ஆறுமுகம் என்பவரைக் கைதுசெய்து, பொய் வழக்குப் போட்டு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தேன். அன்று முதல் தினம் தினம் மனசாட்சி என்னை சிறுகச் சிறுகக் கொன்றதால் ஒரேயடியாக இந்த முடிவை எடுக்கிறேன்’ என்று எழுதி வைத்திருந்தார்!

எப்போதுமே தமிழனுக்காக நீதி கேட்க நாதி இல்லாமல்தான் நாம் இந்தளவுக்கு நிற்கிறோம். கண்டிப்பாக இந்தப் பேரறிவாளன் வெளியே வரு​வான். அவன் வருவது ஒரு தனி நபர் விடுதலை அல்ல… ஒட்டுமொத்த உண்மைத் தமிழனுக்கான விடுதலை. இது சோலையார்பேட்டை அல்ல… என்று பேரறிவாளனை பொய் வழக்கு போட்டு சிறை பிடித்தார்களோ, அன்று முதல் இது பேரறி​வாளன்பேட்டை! » என முடிக்க அரங்கத்தில் பலத்த கரகோஷம்.

பெண்கள் முன்னணித் தலைவரும் பேராசிரியையுமான சரஸ்வதி, »பேரறி​வாளனை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். என் வீட்டுக்கு ‘அக்கா அக்கா’ என்று வந்து விளையாடுவான். அவன் ஈழத்தின் மீது பற்று உள்ளவன்தான். ஆனால், வன்முறைக்கு போகாத ஒரு தம்பி. பேட்டரி வாங்கிக் கொடுப்பதே ஒரு குற்றம் என்றால், அந்த சட்டத்தையே மாற்றவேண்டும். இந்திரா காந்தி கொலை வழக்கு எல்லோருக்கும் தெரியும். கொலை செய்யப்பட்ட அன்று, அவர் பாதுகாப்புக் கவசம் அணிந்திருக்கவில்லை. சாப்பிட்ட இடத்திலேயே அவர் விட்டுவிட்டு வந்துவிட்டார். இந்தத் தகவல், அவரைச் சுட்ட கொலையாளிக்கு எப்படித் தெரியும்? அவர்கள் வீட்டில் சோனியா காந்தியும், ஆர்.கே.தவான் இருவரும்தானே இருந்தார்கள். இந்த தகவல் ராஜீவ் காந்திக்குத் தெரியவந்தும் அவர் ஏன் அதை வெளியே சொல்லவில்லை?


ஒரு குற்றத்துக்கு தண்டனை மரணம் என்​றால், அதுவும் குற்றம் அல்லவா? தண்டனை என்பது குற்றவாளி மனம் திருந்தி வெளியே வருவது. உலகில் 126 நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்திருக்கிறார்கள். கொலைக்கு நேரடியாக தொடர்பு உள்ள ஒரு நபரையே கருணை மனு போட்டு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்​பதில்லையா? மேலும், சதாம் உசேனை தூக்கி​லிட்டபோது, மரண தண்டனையை எதிர்த்தவர் முதல்வர் கருணாநிதி! தேசம் விட்டுத் தேசம் நோக்கும் உங்கள் பார்வை நம் இனத்தவன் மீது ஏன் இல்லை? ‘ஈழம் மலர்ந்தால் மகிழ்வேன்’ என அறிக்கை கொடுக்கிறீர்களே… அது மலர்​வதற்கு என்ன மல்லிகைப் பூவா? கொத்துக்கொத்தாக மடிந்து​கொண்டு இருக்கும்போதும், எதுகை மோனையுடன் கடிதம் எழுதும் முதல்வரே, இதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள்! » என்று பேசினார்.

அடுத்து மைக் பிடித்த சீமானோ வழக்கம்போல் காரசார​மாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, அரங்கத்தில் குடி​போதையில் இருந்த ஒரு நபர் எழுந்து »தலைவா.. தலைவா… » என கூச்சல் போட…

பாருங்க… கருணாநிதி அரசு எப்படி இருக்குன்னு! தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்​திருக்கிறார். ஒரு பக்கம் எம் இனம் ஈழத்தில் அல்லாடுது. இன்னொரு பக்கம் எம் இனம் போதையில் தமிழ்நாட்டில் தள்ளாடுது! என்ற விளாசலோடு முடித்தார்.


- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

Comments