போர்க்குற்ற புற்று நோய்க்கு வைத்தியம் செய்யப் போன கதை...

மகிந்தவின் அமெரிக்கப் பயணமும் உள்ளுராட்சி தேர்தல்களும்.

போர்க்குற்ற புற்று நோய்க்கு வைத்தியம் செய்யப் போன கதை..
ஆயுதக் குழுக்கள் சிறீலங்கா அரசியல் வானில் மங்கத் தொடங்குகின்றன..
Pov_Mauritius
போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்வினையை இங்கிலாந்தில் சந்தித்த மகிந்த ராஜபக்ஷ அதற்குப் பின் தன் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ சகிதம் அமெரிக்கா போய் வந்துள்ளார்.

அவர் அமெரிக்கா போனது புற்றுநோய்க்கு வைத்தியம் செய்ய என்ற வதந்தி ஒன்று பரப்பவிடப்பட்டது.. தனக்கு புற்றுநோய் இல்லை என்று மகிந்த பகிரங்கமாக இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால்..

மகிந்த ஒரு புற்றுநோய் தொடர்பாகத்தான் அமெரிக்கா போயுள்ளார் என்பதை அவரின் பயணத்தின் பின் வெளியான தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. அது போர்க் குற்றம் என்னும் புற்றுநோயாகும். போர்க்குற்ற புற்றுநோய்க்கு வைத்தியம் செய்ய போயிருக்கிறார் என்று திருத்தப்பட்டிருந்தால் அச்செய்தி மேலும் செம்மை பெற்றிருக்கும்.

அமெரிக்காவால் வந்த மகிந்த ராஜபக்ஷ முதலில் விட்ட அறிக்கை ஜனநாயகத்தை காப்பாற்றுவது கடுமையிலும் கடுமையான காரியம் என்ற தலைப்புடன் வெளியானது.

புலிகளையே வெற்றி கொண்டதாக மார்தட்டும் மகிந்த ராஜபக்ஷ ஒரு சின்னஞ்சிறு தீவில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது கடினம் என்று ஏன் நினைக்கிறார்..?

இந்தத் தலையங்கமே போதும் அமெரிக்காவில் நடந்த விடயங்களை ஊகித்துக் கொள்வதற்கு..

போருக்கு முன் என்னென்ன காரியங்களை செய்தால் இந்தப் போர் வெற்றிபெற உதவுவோம் என்று வாக்களித்த அத்தனை நாடுகளும் இப்போது அந்தப் பழைய வாசகங்களை மகிந்தவுக்கு நினைவுபடுத்தியுள்ளன.

போர் முடிந்ததும் ஒரு தேர்தலை அவசரமாக நடாத்தி தன்னை புதுப்பித்துக் கொண்டால் பழைய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடலாம் என்று திட்டமிட்டார். தேர்தல் புதிதாக இருந்தாலும் மகிந்த ராஜபக்ஷ என்பவர் பழையவரே என்று அந்த நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கும்.

அவருடைய கரங்களில் உள்ள இரத்தக்கறையை ஒளிப்படங்களாக காட்டியிருப்பார்கள். ஹபிள் தொலை நோக்கி குளோசப்பில் போரை ஒளிப்படுத்தியிருக்கும் முப்பரிமாண திரைப்படத்தையும் காட்டியிருக்க வாய்ப்புண்டு.

இனி மகிந்த செய்ய வேண்டிய நிகழ்ச்சி நிரலையும் மேசையில் போட்டிருப்பார்கள்..

வடக்கில் டக்களஸ் நடாத்தும் அரசியலை மெல்ல மெல்ல குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் கிடைத்திருக்கலாம். தேர்தலில் தமது கட்சியின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி பின்வாங்க வேண்டிய நிலை வந்தது. ஆக, புத்த விகாரை கட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் வடக்கு அரசியலில் படிப்படியான மாற்றங்கள் வரவேண்டும் என்ற நிபந்தனையை மகிந்த அமெரிக்காவில் சந்தித்திருக்கலாம்.

டக்ளஸ் கட்சி போட்டியிட முடியாத நிலை தற்செயலானது என்று கூறப்பட்டாலும் அது ஏன் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலாக இருக்கக் கூடாது என்று நோக்கவும் இந்த நிகழ்வுகள் வழிகாட்டுகின்றன.

அப்படியானால் இந்தியாவே இதைக் கூறியிருக்கலாம் என்று ஏன் கருத முடியாது?

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் யுத்தத்தின் முன் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல உளறியிருந்ததாக முன்னரே தகவல்கள் வந்திருந்தன. இந்தியாதான் போரை நடாத்தியது என்று மகிந்த பல தடவைகள் கூறிவிட்டார். ஆகவே இந்தியாவின் சொல்லைக் கேட்க வேண்டிய தேவை மகிந்தவுக்குக் கிடையாது.

இந்திய மீனவர்களை சுட்டு எச்சரிக்கை விட்டார். எனவேதான் அடக்க முடியாத மாணவன் பெரிய வாத்தியாரிடம் அனுப்பப்பட்டிருக்கிறார்.

உலக நாடுகளின் தலைவர்கள் பாடசாலை வகுப்புகளில் உள்ள மொனிட்டர்கள் போன்றவர்களே. பெரிய வாத்தியார் நினைத்தால் அவர்கள் பதவியில் இருக்க முடியாது என்பதும் உலக விதியே.. எனவேதான் உலகில் ஜனநாயகத்தை காப்பது கடினம் என்று மகிந்த மனம் வருந்திக் கூறியிருக்கிறார்.

வடக்கில் நடக்கும் உள்ளுராட்சி தேர்தல்கள் தமிழர்கள் கையில் சிறிய அதிகாரத்தைக் கொடுக்கும். அதிலிருந்து படிப்படியாக அதிகார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது மேலை நாடுகளின் விருப்பமாக இருக்கலாம். எனவே போரின்போது அரசின் பக்கமாக நின்ற தமிழ் ஆயுதக் குழுக்கள் அரசில் வானில் மெல்ல மெல்ல மறைய வேண்டிய நிலையும் வரலாம்.

அதுதான் நடந்து கொண்டிருக்கிறது..


இந்தச் சம்பவத்தின் பின்னர் அமெரிக்கா சிறீலங்காவுக்கு பல பாராட்டுதல்களை வழங்கியது. தாம் தமிழீழம் அமைக்கப்படுவதை ஆதரிக்க மாட்டோம் என்று கூறுவதுவரை முன்னேறியிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 50.000 வீடுகளை அமைக்கப் போகிறோம் என்று இந்தியா அவசரப்பட்டது. ஆனால் அபிவிருத்தியிலும், தொழில்களிலும் இந்தியா அவ்வளவு விரைவாகப் போக மற்றைய நாடுகள் அனுமதிக்காது.

புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற இந்திய ஆவலை நிறைவேற்ற உதவிய உலக நாடுகள், அபிவிருத்தி என்று இந்தியா இலங்கைப் பொருளாதாரத்தில் அள்ளு கொள்ளைவிட அனுமதிக்காது. சிறீலங்கா அபிவிருத்தியில் இந்தியா தனியுரிமை செலுத்த முடியாது என்பதை அமைக்க முடியாத 50.000 வீடுகள் இலகுவாக உணர்த்துகின்றன.

போருக்குள் உலகில் உள்ள நாடுகள் எல்லாம் மூக்கை நீட்டியது புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல, போருக்குப் பின்னுள்ள தொழில்களில் இலாபம் பார்க்கவே. தமிழர், சிங்களவர் என்பது நாணயங்களுக்குக் கிடையாது. அதுதான் சர்வதேச நாணய நிதியம் சிறீலங்காவை பாராட்டியுள்ளது. நாணயப் பெறுமதியை குறைத்து, சர்வதேச நாணய நிதியை மகிழச் செய்தது சிறீலங்கா. 5000 நாணயத்தாள்வரை வெளியிட்டு வைத்துள்ளது. நாணயத்தாள் 5000 ரூபாவுக்கு வந்தால் பச்சை மிளகாய் கிலோ 800 ரூபாவுக்கு போகும் என்பது இயற்கையே. சிம்பாப்பேயில் ஒரு கிலோ பச்சை மிளதாய் 10.000 இலக்கமிட்ட நாணயத் தாளுக்கு விற்பனையாகிறது தெரிந்தால் இதன் பாரதூரம் புரிய வரும்.

இதுவரை நடந்த நிகழ்வுகளின்படி..

01. சிங்களவர் நினைத்ததும் நடக்காது..
02. தமிழர் நினைத்ததும் நடக்காது..
03. இந்தியர் நினைத்ததும் நடக்காது..
04. சீனார் நினைத்ததும் நடக்காது..
05. அமெரிக்கா நினைத்ததும் நடக்காது..

காட்டில் செத்துக்கிடக்கும் ஒரு விலங்கை பல மிருகங்கள் ஆளாளுக்கு கடித்துக் குதறுவதைப் போல குதறும் காட்சிகளே அரங்கேறும். புலிகளை முற்றாக அழிக்காமல் சிறிய அளவு மீதம் வைத்திருந்தால் சிறீலங்கா மேலும் பல வருடங்கள் புலிகளைக் காட்டி வண்டி ஓட்டியிருக்கலாம். அச்சாணியை புடுங்கிவிட்டு அமெரிக்கா போனால் இப்போது நடப்பதுதான் நடக்கும்.

அலைகள்.

Comments