எதனைக் கண்டு அஞ்சுகின்றது சிறீலங்கா அரசு

எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி அங்கு 30 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் ஹொஸ்னி முபாரக்கை வீட்டுக்கு அனுப்பும் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த பத்தி எழுதப்படும் போது முபாரக் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

முபாரக் உடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு மாற்றம் தேவை என வலியுறுத்தியுள்ளதுடன், புதிய அரசில் எதிர்;கட்சிகள் உள்ளடக்கப்படவேண்டும் எனவும், நீதியானதும், நேர்மையானதுமான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 350 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், இந்த வாரத்தின் முற்பகுதியில் பல இலட்சம் மக்கள் வீதிகளில் இறங்கிபோராடியது முபாரக் அரசை நிலைகுலைய வைத்துள்ளது.

கடந்த மாதம் துனீசியாவில் இடம்பெற்ற மக்கள் எழுச்சி அதன் அதிபர் பென் அலியை பதவியில் இருந்து தூக்கி எறிந்துள்ளது. 23 வருடங்களாக பதவியில் இருந்த அலியை பதவியில் இருந்து துரத்திய மக்களின் எழுச்சிகள், எகிப்த்திலும் மக்கள் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

23 வருடங்களாக மக்கள் மீது வன்முறைகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்த அதிபர் அலியையும், அவரின் மனைவி லெய்லாவையும் கைது செய்யும் உத்தரவுகளை அனைத்துலக குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் முன்னாள் அதிபர் மீது தடைகளை கொண்டுவந்துள்ளது.

வடஆபிரிக்க நாடான துனீசியாவில் ஜனநாயகம் மலர்ந்துள்ள அதேசமயம், தென் சூடான் நாடு தனிநாடாக பிரிந்து செல்லும் வாக்கெடுப்பில் 99 விகித்திற்கும் மேற்பட்ட ஆதரவுகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் அங்கு ஒரு புதிய நாடு உருவாகப்போகின்றது.

அதேசயம் மத்தியகிழக்கு பகுதியில் உள்ள எகிப்திலும் ஜனநாயகம் மலரும் அறிகுறிகள் தென்படுகின்றன. உலகில் ஜனநாயகத்தை தோற்றுவித்தல், தமக்கு ஆதரவுள்ள இனங்களை கொண்ட சிறிய நாடுகளை உருவாக்குதல் என்ற மேற்குலகத்தின் காய்நகர்த்தல்கள் மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மிகவேகமாக இடம்பெற்றுவருகின்றன.

உலகில் ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்கள் சிறீலங்கா அரசுக்கு அனுகூலமானவையல்ல. மூன்று தசாப்தங்களாவது தமது குடும்ப ஆட்சியை தக்கவைக்கும் வியூகங்களை மகிந்தா உருவாக்கிவருகையில் உலகில் பல தசாப்தங்கள் ஆட்சியில் இருந்த முடிசூடா மன்னர்கள் தூக்கி வீசப்படுவதை சிறீலங்கா அரசு ஒரு கலக்கத்துடன் தான் பார்த்துவருகின்றது.

எகிப்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் இராணுவம் உட்பட அரச படையினர் பொதுமக்களுக்கு ஆதரவு வழங்குவதை வெளியிட வேண்டாம் என சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா அரச ஊடகங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

அதேசமயம், மக்கள் புரட்சி, சிறீலங்கா அரசின் வன்முறைகள் என்பன தொடர்பில் தென்னிலங்கை தகவல்களை வெளியிட்டுவந்த தென்னிலங்கை இணையத்தளம் ஒன்றும் அரச தரப்பினர் என சந்தேகிக்கப்படுபவர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் என தமது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ள மேற்குலகத்தின் அடுத்த நகர்வு ஆசிய பிராந்தியம் தான் என்பதை ஆசிய நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன. அதனால் தான் இந்தியாவே முன்னின்று நோர்வேயை சிறீலங்காவில் நடைபெற்ற அமைதி முயற்சிகளில் இருந்து வெளியேற்றியிருந்தது.

அமைதி முயற்சியை முறியடித்து, விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டால் சிறீலங்காவில் நுளைவதற்கு மேற்குலகத்திற்கு வழிகள் இருக்கப்போவதில்லை என இந்திய போட்ட திட்டத்தை எண்ணி சீனாவும் மகிழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் மறிய கதையாக, போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை முன்னிறுத்தி வருகின்றது மேற்குலம்.

மேற்குலகத்தின் நுளைவுப்பாதைகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் உலகின் முன்னனி மனித உரிமை அமைப்புக்களும், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களில் உறுதியாகவே உள்ளன.

எனவே தான் சிறீலங்கா அரசு அனைத்துலக மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களையும், ஊடகங்களையும், மனிதஉரிமை அமைப்புக்களையும் ஒடுக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக, எதிர்க்கட்சிகளின் துணையுடன் சிறீலங்காவில் உள்ள சிங்கள மக்களை அரசுக்கு எதிராக போராட வைப்பதற்கு மேற்குலகம் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என சிறீலங்கா அஞ்சுகின்றது.

அவ்வாறு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், எதிர்த்தரப்பு மகிந்தாவை அனைத்துலக நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம் எனவும், தூக்கி எறியப்பட்ட தலைவர் மீது மேற்குலகம் நேரடியான தலையீட்டை மேற்கொள்ளும் எனவும் தற்போதைய சிறீலங்கா அரசு அச்சமடைந்துள்ளது. துனீசியா அதிபருக்கு ஏற்பட்ட நிலை அதற்கு சிறந்த அண்மைய உதாரணமாக அமைந்துள்ளது.

மேற்குலகம் விரும்புவது என்ன?

தனது நலன்களுக்கும், தனது மக்களின் பாதுகாப்புக்கும் எதிராக அமையாத நாடுகளும், அணு ஆயுதம் அற்ற பிராந்தியமுமே தற்போது மேற்குலகம் விரும்பும் முதன்மையான காரணிகள்.

அரபு நாடுகளில் மேற்கொள்ளப்படும் களையெடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஈரான் குறிவைக்கப்படுகின்றது. ஈரானுக்கு அண்மையாக உள்ள அரேபியன் கடற்பகுதியில் நிலைகொண்டுள்ளது யூ.எஸ்.எஸ் ஏபிரகாம் லிங்கன் என்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல். ஆப்கானில் நடவடிக்கையில் ஈடுபடும் படையினருக்கான ஆதரவு நடவடிக்கை இது என அமெரிக்கா தெரிவித்தாலும் அதன் நோக்கம் வேறுபட்டது.

97,000 தொன் கொண்ட இந்த கப்பலில் 65 தாக்குதல் விமானங்கள் தரித்து நிற்பதுடன், 5600 படையினரும் பணியாற்றி வருகின்றனர். எமது மொழியில் கூறுவதானால் ஒரு பிரிகேட் படைத்தளத்தின் கட்டமைப்பை கொண்டது இந்த கப்பல்.

ஈரானின் கடற்கரை பகுதியிலும், ஓமான் கடற்கரை பகுதியிலும் என்ன நடைபெறுக்கின்றது என்பதை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஜோன் அலக்ஸ்சான்டர் தெரிவித்துள்ளார்.

சீனா புதிதாக தயாரித்துவரும் விமானம்தாங்கி கப்பல்களை தகர்க்கும் ஏவுகணையால் பாதிப்பு ஏதும் உண்டா என கேட்டபோது, அமெரிக்காவின் பலமே விமானம்தாங்கி கப்பல்கள் தான். அதனை நாம் எதிர்காலத்திலும் தக்கவைப்போம் என கப்டன் அலக்ஸ்சான்டர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் இந்த மாற்றங்களை ஈழத்தமிழ் இனம் எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப் போகின்றது? சீனாவிடம் சரணடைந்துள்ள இந்தியாவை நம்பப்போகிறோமா? அல்லது மேகுலகத்தின் இந்த ஜனநாயக விஸ்த்தரிப்புக்களை தென்ஆசியா பிராந்தியத்திற்குள் இழுத்துவரப்போகிறோமா?

இந்த நடவடிக்கைகளில் அனுகூலங்களும், பிரதிகூலங்களும் இருக்கலாம் ஆனால் அதனூடாக எமது இனம் விடுதலை பெறுவதற்கான வழியை ஏற்படுத்துவதே சரியான இராஜதந்திரம் என்றால் அதனை மறுக்க முடியாது.

– வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி: ஈழமுரசு (11.02.2011).

Comments