பிளேக் – மகிந்தா இரகசிய சந்திப்பு – போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற முனைகின்றதா அமெரிக்கா?

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை அவர் தங்கியிருந்த ரெக்ஸஸ் மாநிலத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.


மகிந்தா ரெக்ஸஸ் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் பிளேக்கும் ரெக்ஸஸ் பகுதியில் தங்கியிருந்தது ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பல சந்தேகங்களை தோற்றுவித்திருந்தது.

ஆனால் ரைஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவே பிளேக் அங்கு சென்றதாகவும், மகிந்தாவை அவர் உத்தியோகபூர்மாக சந்திக்கும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை எனவும் அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் குளேலி தெரிவித்திருந்தார்.

ஆனால் மகிந்தாவுக்கும் – பிளேக்கிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள சந்திப்பு இரு தரப்பும் சில காய்நகர்த்தல்களை மேற்கொள்வதாகவே கருதப்படுகின்றது. அமெரிக்கா வலியுறுத்திவரும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள முனைகின்றதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கடந்த வருடம் அமெரிக்காவுக்கு சென்ற சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவையும் பிளேக் சந்தித்திருந்தார்.

பிளேக் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்தே மகிந்தா துணிச்சலாக அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிளேக்குடன் மேற்கொள்ளும் சந்திப்பை முன்னிட்டே அவர் ஜி.எல் பீரீஸ் மற்றும் லலித் வீரதுங்கா ஆகியோரை அழைத்துச் சென்றிருந்தார்.

மகிந்தா ராஜபக்சாவின் குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் றொபேட் ஓ பிளேக் மறுபுறம் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு வி உருத்திரகுமாரனுடனும் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்காவின் பொருளாதாரம் பெரும் முன்னேற்றப்பாதையில் செல்வதாக தெரிவித்துள்ள அனைத்துலக நாணயநிதியம் அதற்கான கடன் தொகையின் ஐந்தாவது கொடுப்பனவையும் பரிந்துரை செய்துள்ளது.

2.6 பில்லியன் டொலர் கடன் உதவியை வழங்கிவரும் அனைத்துலக நாணயநிதியம் விடுத்துள்ள இந்த அறிவிப்பால் சிறீலங்காவின் பங்குச்சந்தை திடீர் உயர்வை சந்தித்துள்ளது.

அனைத்துலக நாணய நிதியத்திற்கு பிரதம கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா இருப்பதையும் நாம் அறிவோம். எனவே அமெரிக்காவின் பின்புலம் இல்லாது அனைத்துலக நாணயநிதியம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க முடியாது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Comments