உலகின் மூன்று திக்குகளில் இருந்து சட்ட நடவடிக்கை.

போர்க்குற்றம் இழைப்பதில் துணைபோன சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலிய இரட்டைப் பிரஜா உரிமைகொண்ட பாலித கோஹனவை விசாரிக்குமாறு சர்வதேச குற்றவிசாரணை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த புலம் பெயர் ஈழத்தமிழர், சட்டநடவடிக்கைகளை முன்னெடுப்போர் தமது சிந்தனைகளை நேரடியாக ஈழத்தமிழ் மக்களுக்கு முன்வைக்கும் பலகணி நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சி தமிழ்நெட் ஊடாக வெளியாகியுள்ளது.

சுவிஸ் ஈழத்தமிழர் மக்களவை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இன அழிப்புக்கெதிரான அமைப்பு, அவுஸ்திரேலியத் தமிழர் கவுன்சிலின் இரண்டாம் தலைமுறை சட்டத்துறை நடவடிக்கைளை முன்னெடுப்போர் இணைந்து மேற்கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் முதலாவது சர்வதேச வழக்குத் தாக்கல் குறித்த விபரங்களையும், எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் குறித்த இரண்டாம் தலைமுறைப் பிரதிநிதிகளே நேரடியாக தமிழிலும், ஜேர்மன் மொழியிலும், ஆங்கிலத்திலும் வீடியோ வடிவில் தரும் விளக்கம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

உலகின் மூன்று திக்குகளில் இருந்து இரண்டாம் தலைமுறையினர் நேரடியான சர்வதேச சட்டவியலில் ஈடுபாட்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும். தமக்கு என ஒரு வழக்கறிஞரை வைக்காது, தாமே வழக்கைப் பதிவுசெய்து அவர்கள் இதனை நகர்த்தி வருகின்றனர். முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசு இழைத்த பலவிதமான போர்க்குற்றங்களில் ஒன்றான வெள்ளைக்கொடிப் படுகொலைகள் குறித்த விசாரணைக்கு நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவிசாரணை நீதிமன்றில் திங்களன்று மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னணியையும், தொடர்ந்தும் எவ்வாறு சர்வதேச, பிராந்திய, நாடு தழுவிய சட்டங்களைப் பயன்படுத்தி சர்வதேச நியாயம் கோரப்படவேண்டும் என்பதையும் அமெரிக்காவைச் சேர்ந்த ரஜீவ் சிறிதரன், சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த லதன் சுந்தரலிங்கம், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் சாம் பரி ஆகியோர் தரும் விளக்கம் காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது

Comments