நா. த .அ அனைத்துத் தமிழர்களுக்குமான சனநாயக பீடமாக உருவாக்கப் படுவதனை திரு. ருத்ரகுமாரன் உறுதிப்படுத்த வேண்டும்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏனைய தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களுடன் மேற்கொள்ளும் மோதல் போக்கினைத் தவிர்த்து, அனைத்துத் தமிழர்களுக்குமான சனநாயக பீடமாக உருவாக்கப் படுவதனை அதன் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் திரு. ருத்ரகுமாரன் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்துள்ள மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZt6jE8uJOhCJUrLoY0E8KTpVpV6GQvQDYU1479pHpheEXGkFdyM4T5iB4hVHhMkj2mJjQmAwcxn8FbIkrpLBrpi5qXpJ-LjQtudxi2rz-XzYKq3JoR5NcPxrhpy-KSmnjqSOmEQPhmGE/s1600/25857_104571952909846_100000711251422_91887_7936700_n.jpg
அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் பின்வருமாறு:

திரு. ருத்ரகுமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

அன்புடையீர்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருப்பொருளை முற்று முழுதாகவும், உன்னதமாகவும் உள்வாங்கி, தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு, தமிழீழ தேசத்தின் விடுதலையை சனநாயகப் பாதையில் வென்றெடுக்கும் உறுதியுடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், மக்களது தெரிவு மறுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் பின்வரும் கோரிக்கைகளை பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் உங்களிடம் முன்வைக்கின்றோம்.

1) பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு, அவர்களது தெரிவு தேர்தல் ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், நீதியற்ற முறையில் கடந்த எட்டு மாதங்களாக தெரிவு மறுக்கப்பட்டு வரும் திரு. திருச்சோதி திருக்குலசிங்கம் (தேர்தல் மாவட்டம் 92), செல்வி கிருஷாந்தி சக்திதாசன் (தேர்தல் மாவட்டம் 93), திரு. கொலின்ஸ் மைக்கேல் (தேர்தல் மாவட்டம் 93) ஆகியோரது தெரிவுகளைக் கால தாமதமின்றி உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.

2) பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட டேவிட் ஜோசப் பரராஜசிங்கம், டாக்டர் நவசிவாயம் சத்தியமூர்த்தி, அப்பாத்துரை வைரவமூர்த்தி ஆகிய மூவரும் நிர்ப்பந்திக்கப்பட்டு, இராஜினாமா செய்ய வைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதுடன், அவர்களது இடத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜெய்சங்கர் முருகையா, தணிகாசலம் தயாபரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதையும், ஐந்து (5) உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய தொகுதியில் போட்டியிட்ட ஒன்பது (9) பேரில், மக்களின் தெரிவில் எட்டாவது (8) இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த தயாபரன் அவர்களுக்கு முக்கிய மந்திரி பதவி வழங்கப்பட்டதையும் நாங்கள் வன்மையாகக்கண்டிக்கின்றோம்.

3) பிரித்தானியாவில், லண்டனுக்கு வெளியே நடைபெற்ற தேர்தல் முடிவில், வாக்குச் சீட்டுக்கள் எண்ணுவதை இடைநிறுத்தி, அந்தத் தேர்தலை தேர்தல் ஆணையாளர் இரத்துச் செய்திருந்தார். அதன் பின்னர் அமெரிக்காவில் நடைபெற்ற முதலாவது அமர்வில் இந்தத் தேர்தல் மூன்று மாத காலத்திற்குள் நடாத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என நீங்கள் உறுதி தெரிவித்திருந்த போதும், அதற்கான மீள் வாக்குப்பதிவை இதுவரை நடாத்தவில்லை. எனவே, உடனடியாக அதில் போட்டியிட்டவர்கள் மத்தியில் மீள் வாக்குப்பதிவு நடாத்தி மக்களது தெரிவினை உறுதிப்படுத்த வேண்டும்.

4) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்ட கனடிய உறுப்பினர் திரு. ஈசன் குலசேகரம் அவர்கள் மீதான தாக்குதல் எத்தனத்திற்கும், ஆயுத வன்முறை முயற்சிக்கும் அன்றைய இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் என்ற வகையில் அன்று நடைபெற்ற அந்த வன்முறை எத்தனத்திற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

5) இரண்டாம் அமர்வில் இருந்து வெளி நடப்புச் செய்த கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் பிரதிநிதி உட்பட மக்கள் பிரதிநிதிகள் மீது மிகவும் கீழ்த்தரமான, எந்த வித அடிப்படையுமற்ற, அருவருக்கத்தக்க விதமாக சமுதாயத்தில் குடும்ப வாழ்க்கையையும், கௌரவத்தையும் சிதைக்கும் நோக்கிலான உயிர் அச்சுறுத்தல் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் நா.க.தமிழீழ அரசாங்கத்தின் பெயரால் வெளிவரும் பத்திரிகை, ஊடகங்கள் ஊடாக நடாத்தப்படும் விசம பிரச்சாரங்கள் போன்ற வன்முறைகளை கண்டிப்பதுடன், அது தொடராத வகையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

6) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் தமிழீழ விடுதலைப் பாதை நேர் வழியில், நேர்மையாக அமைய வேண்டும் என்பதுடன், உலகின் புது முயற்சியாக சனநாயக முறைமையில் அமையும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தராதரம் உலகின் அனைத்துத் தரப்பினராலும், வர்க்கத்தினராலும் பெறுமதி மிக்கதாகப் பார்க்கப்படும் என்பது எமது நம்பிக்கை. எனவே இதன் யாப்பும், அதன் மீதான தீர்மானங்களும், இதன் அடிப்படையிலான தெரிவுகளும் முறையாக அமைய வேண்டும் என்ற உந்துதலால் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவும், அச்சுறுத்தல் காரணமாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் கலந்துகொண்ட (பதிலி வாக்குக்கள் உட்பட) 83 உறுப்பினர்களில் 38 உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய நேர்ந்தது. ஆகவே அவையில் பிரசன்னமாகிய பிரதிநிதிகளில் 54 வீதமானவர்கள் (45 உறுப்பினர்கள்) மட்டுமே தொடர்ந்தும் இருந்த நிலையில், அன்றைய தினம் சனநாயக விரோதமாக எடுக்கப்பட்ட அத்தனை தீர்மானங்களும் இரத்துச் செய்யப்பட்டு, அவைக்கான 115 உறுப்பினர்களது தெரிவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், புதிய தெரிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

7) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பு சனநாயக முறைமைப்படி அல்லாமல் வெறும் மூன்று நாட்களுக்கு முன்னதாக மட்டுமே மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு அனுப்பி வைத்த நிலையில், முறையான தெரிவுகளும், அங்கீகாரமும் இல்லாத வகையில், சனநாயக விழுமியங்களை மீறி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய அவையால் அங்கீகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் யாப்பும், அதன் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட அத்தனை தீர்மானங்களும் முழுமைப்படுத்தப்பட்ட அவையில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

8) புலம்பெயர் நாடுகளில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்களாலும், அவர்களது ஆதரவாளர்களாலும் முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களை சிதைக்கும் நோக்கத்திலான நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை, அதன் நோக்கத்தை விட்டு திசை திருப்பும் அபாயத்தைக் கொண்டுள்ளதனால், அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

9) குழுநிலைச் செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களது ஒன்றிணைந்த பலத்தைச் சிதறடிக்கும் முயற்சியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஈடுபடுவதன் மூலம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சிதறடிப்பதற்குக் காரணமாக உள்ளனர். உதாரணமாக பிரான்சில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சிதைக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட 'தமிழர் நடுவம்' என்ற அமைப்பின் பின்னணியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் செயல்படுவதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இது போன்றவை தமிழ்த் தேசிய நலனைப் பாதிப்பதாகவே அமைகின்றது. அதனால், இதற்குக் காரணமான பிரதிநிதிகள்மீது ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

10) நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏனைய தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களுடன் மேற்கொள்ளும் மோதல் போக்கினைத் தவிர்த்து, அனைத்துத் தமிழர்களுக்குமான சனநாயக பீடமாக உருவாக்கப் படுவதனை அதன் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த பத்து அம்சங்கள் கொண்ட கோரிக்கையினை முழுமையாக ஏற்று, அதனை நிறை வேற்றுவதன் மூலம் தமிழ்த் தேசியத்திற்கான விடுதலைப் பாதை வலுவுறும் என நாங்கள் உறுதியாக நம்புவதனால், உங்கள் கவனத்திற்கு இதனை முன்வைக்கின்றோம்.

இதற்குரிய நேர்மையான தீர்வு தங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் பட்சத்தில், நாடு கடந்த தமிழீழ அரசு தேசியத்திற்கான பாதையில் வேகமாகப் பயணிக்கும் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.

இதற்கான உரிய பதில்கள் தங்களிடமிருந்து இரு வார காலத்திற்குள் (03-03-2011 இற்கு முன்னதாக) கிடைக்கப்பெறாத பட்சத்தில், நாங்கள் மக்களுடன் இணைந்து சாத்வீக முறையிலான அனைத்து வகைப் போராட்டங்களையும் மேற்கொள்வோம் என்பதைத் தங்களது கவனத்திற்குத் தருகின்றோம்.

தங்களது புரிந்துணர்வுக்கும், ஒத்துழைப்பிற்கும் எமது முன்கூட்டிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஒப்பம் :

• தெய்வேந்திரன் குலசேகரம் (ஈசன்),
• மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன்,
• வனிதா இராஜேந்திரம்,
• திரு எஸ். திருச்செல்வம்,
• சுரேசானந்த் ரத்னபாலன்,
• பாலன் ரத்னராஜா,
• சிவகுரு பாலச்சந்திரன்,
• சசிகுமார் சரவணமுத்து,
• கிருஷாந் தர்மேந்திரன்,
• திருச்சோதி திருக்குலசிங்கம்,
• கிருஷாந்தி சக்திதாசன்,
• சேரன் சிறிபாலன்,
• பரமு ஆனந்தசிங்கம்,
• வித்தியா ஜெயசங்கர்,
• ரேணுகா லோகேஸ்வரன்,
• நடராஜா திருச்செல்வம்,
• இராசையா தனபாலசுந்தரம்,
• முகுந்தன் இந்திரலிங்கம்,
• கணேசரட்ணம் சந்திரபாலன்,
• மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்,
• ஜெயசிறி பாலசுப்ரமணியம்,
• சிவானந்தன் முரளி,
• சிவகணேசன் தில்லையம்பலம்,
• ஜெயவாணி அச்சுதன்,
• கார்த்திகேசன் பரமசிவன்,
• மகேஸ்வரன் சசீதர்,
• சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி,
• வாசுகி சோமஸ்கந்தா,
• சண்முகநாதன் கவிராஜ்,
• சின்னத்துரை ஸ்ரீறிரஞ்சன்,
• ஆறுமுகம் விவேகானந்தராஜா

Comments