சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாலித கொஹனவுக்கு எதிரான வழக்குத் தாக்கல்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹனவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு மற்றும் சுவிஸ் ஈழத் தமிழர் பேரவை என்பன கூட்டிணைந்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலேயே கலாநிதி பாலித கொஹனவுக்கு எதிரான வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

2009ம் ஆண்டின் மே மாதம் 18ம் திகதி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான ரமேஷ், புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோரின் படுகொலையில் பாலித கொஹனவுக்கும் பங்கிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அவருக்கு எதிரான முறைப்பாடுகளுடன் ஒளிப்பதிவு நாடாக்களும் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அறியக் கிடைத்துள்ளது.

Comments