நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அந்நியப்பட்டு வருகின்றதா?

இதுவரை, புலம்பெயர் தமிழ்த் தேசிய தளங்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது, அதில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளதாக அதன் அவைத் தலைவராக அறிமுகப்படுத்தியுள்ள திரு. பொன் பால்ராஜன் அவர்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.


அவரது இந்த அறிவித்தல், புலம்பெயர் தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. இந்த அறிவித்தலின் பின்னர், லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை மக்கள் புறக்கணித்து அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளனர்.

தற்போது துவிச்சக்கர வண்டிப் பிரச்சாரம் ஒன்றை லண்டனில் மேற்கொண்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலம் பேணும் அமைச்சராக அறிவிக்கப்பட்ட திரு. உருத்திராபதி சேகர் அவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டு, வடமேற்கு லண்டனில் கூட்டப்பட்ட கூட்டம் ஒன்றில் 11 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களில் 5 பேர் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாகக் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்டதாக இருந்தாலும், முள்ளிவாய்க்காலின் பின்னர் உலகளாவிய ஜனநாயகக் கட்டமைப்பின் அவசியத்தை உணர்ந்து கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தை வரவேற்றதுடன், அதில் இணைந்து செயலாற்றவும் விரும்பினார்கள்.

ஆனால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கே.பி. குழுவினர் மேற்கொண்ட தொடர் அராஜகம் காரணமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் முழுமையாக இணைந்து பணியாற்றும் தமிழ்த் தேசியவாதிகளது எண்ணம் வீணாகிப் போனது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தளமாக அமைத்துக்கொள்ள விரும்பிய தமிழ்த் தேசியவாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியவாதிகள் இரண்டாவது அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதன் பின்னர் தொடர்ந்த அவை நடவடிக்கையின்போது மிகக் குறைந்த அங்கத்தவர்களே அவையில் இருந்த காரணத்தினால், அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய அரசியல் யாப்பு விவாதத்திற்கோ, அங்கீகாரத்துக்கோ விடப்படவில்லை.

ஆனாலும், தமது கைப்பிடி நழுவிவிடக் கூடாது என்ற கே.பி. குழுவினரால் அந்த அவையில் யாப்பு நிறைவேற்றப்பட்டதாக பொய்யான அறிவித்தல் கொடுக்கப்பட்டது. இது குறித்து, தமிழ்த் தேசியவாதிகளால் மதியுரைஞர் குழுவிடம் மேற்கொண்ட முறைப்பாட்டடின் காரணமாக, அன்றைய நிகழ்ச்சிக் காணொளிப் பதிவைப் பல தடவைகள் போட்டுப் பார்த்து, தமிழ்த் தேசியவாதிகளின் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.

மோசடியான தமது வார்த்தைகளை நியாயப்படுத்தும் விதமாக, மக்கள் பிரதிநிதிகள் அனைவரிடமும் அவையில் அங்கீகாரம் பெறாத யாப்பு மீது பதவிப் பிரமாணம் கோரப்பட்டது. இதனை, தமிழ்த் தேசியவாதிகள் முற்றாக நிராகரித்ததுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தொடர்ந்தும் பிழையான பாதையில் செல்வதை அனுமதிக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.

இதன்படி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது முதல் இதுவரை நடைபெற்ற முறைகேடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள திரு. ருத்திரகுமாரன் அவர்களுக்கு 10 அம்சக் கோரிக்கைகள் கொண்ட கடிதம் ஒன்று 17-02-2011 அன்று தமிழ்த் தேசியவாதிகளால் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளிப்பதற்காக திரு. ருத்திரகுமாரன் அவர்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தங்களது பிழைகளும். ஜனநாயக விரோத செயற்பாடுகளும் தமிழ்த் தேசியவாதிகளால் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக, தம்மோடு இணைந்து பணியாற்ற மறுத்து, தமிழீழ விடுதலையை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்ட தமிழ்த் தேசியவாதிகளை, போலியான காரணம் ஒன்றினூடாக வெளியேற்றும் முயற்சி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவராக அறிமுகப்படுத்திக்கொண்ட திரு. பொன். பால்ராஜன் அவர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சத்தியப்பிரமாணம் எடுக்காதவர்கள் பதவி இழக்கின்றார்கள் !!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 68 பேர் அரசாங்கத்தின் யாப்பை ஏற்று சத்தியப் பிரமாணம் எடுத்த நிலையில் ஏனையோர் இதுவரை சத்தியப் பிரமாணம் செய்யாது இருந்துள்ளனர். இவ்வாறு 4 மாதங்கள் கடந்த நிலையில், இவர்கள் ஒரு புறமாக விலத்தி நிற்கையில் அரசவையின் அன்றாட அலுவல்களை தொடர்ந்தும் சரிவர முன்னெடுக்க முடியாத நிலை உருவாவதைத் தடுப்பதற்கும் வாக்களித்த மக்களுக்கான கடமைகளைச் சாரிவரச் செய்வதற்கான ஏது நிலையை உருவாக்குவதற்கும், இவர்களை உள்வாங்குவதற்கான இறுதி முயற்சியாகவும் எதிர்வரும் 5ம் திகதி வரை இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதற்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவர் கௌரவ பொன் பாலராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் கூறிய அவர், சத்தியப் பிரமாணம் செய்யாமல் இருப்போரைத் தாம் விலத்தி வைக்கவில்லை ஆனாலும் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு பாராளுமன்ற அரசியல் முறைப்படி அதன் விழுமியங்களுக்கமைய, தமது ஆதங்கங்களைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக காலக்கெடுவுடனான இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 5ம் திகதி அன்றும் இவர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளாவிடின்,இவர்கள் தாமாகவே பதவி துறந்ததாகக் கருதி இவர்களுடைய வெற்றிடங்களை நிரப்பும் பணி தோ்தல் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்துவரும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மாறான விழைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அரசியல் கள நிலைகளுக்கு இசைவாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழீழ விடுதலைக்கான தளமாக உருவாகும் என்ற புலம்பெயர் தமிழர்களின் எண்ணங்களில் விழுந்த அடியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைவதால், அந்தத் தளம் மக்களால் புறக்கணிக்கப்படும் அபாயத்தில் உள்ளதையே அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலம் நமக்குக் கொடுத்துள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, எமது மண்ணையும், மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்தை நாம் அனைவரும் இணைந்தே மேற்கொள்வது அவசியமான தருணத்தில், சிங்கள தேசத்தின் விருப்பங்களுக்கு இசைவாக மக்களைப் பிளவு படுத்துவதும், புலம்பெயர் விடுதலைத் தளங்களைச் சிதைப்பதற்கான புதிய தளங்களை உருவாக்குதல், தமிழ்த் தேசியவாதிகளின் உணர்வுகளை நிராகரித்து, தனிப் பயணம் மேற்கொள்வது போன்ற தேசியச் சிதைவு நடவடிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிறுத்தி, மக்கள் மன்றங்களில் வாதங்களை முன் வைத்து தமிழீழம் நோக்கிய பாதையில் ஒன்றிணைந்து பயணிக்கும் முயற்சியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேர்மையுடன் ஈடுபட வேண்டும்.

மக்களதும், தமிழ்த் தேசியவாதிகளையும் தொடர்ந்தும் நிராகரிப்பது, நாடு கடந்த தமிழீழ அரசு என்ற மதிப்பிற்குரிய சொற்பதத்தை செயலிழக்கச் செய்யும் முயற்சியாகவே மக்களால் உணரப்படும். இதுவே, அண்மைக்காலமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளை மக்கள் புறக்கணிப்பதற்கான காரணமாக உள்ளது.

எனவே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் திறந்த மனத்துடன் கலந்துரையாடி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைக்கான பாதையில் நேர்மையாகப் பயணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

- கரிகாலன்

Comments