சிறிலங்காவின் அனைத்துலக இராணுவக் கருத்தரங்கு - புறக்கணிக்கக் கோருகிறது மனிதஉரிமைகள் கண்காணிப்பகம்

சிறிலங்கா ஏற்பாடு செய்துள்ள “தீவிரவாதத்தைத் தோற்கடித்த சிறிலங்காவின் அனுபவங்கள்“ என்ற இராணுவக் கருத்தரங்கைப் புறக்கணிக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த அனுபவங்கள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் மூன்று நாள் கருத்தரங்கை நடத்தவுள்ளது.

எதிர்வரும் மே 31ம் திகதி தொடக்கம் ஜுன் 2ம் திகதி வரை கொழும்பு கலதாரி விடுதியில் இந்தக் கருத்தரங்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச 54 நாடுகளுக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளார்.

ஆனால் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கமாறு மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிறட் அடம்ஸ் பிபிசி “சந்தேசய“ வுக்கு கூறுகையில்,

“ இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில்லை என்று பல முக்கிய அழைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பெருமளவு பொதுமக்களைப் படுகொலை செய்த நிகழ்வுடன் தொடர்புடைய இராணுவக் கொள்கையைக் கொண்டாடும் வகையிலான இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்குமாறு அனைத்துலக நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.“ என்று தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்களில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், தீவிரவாத முறியடிப்பு நிபுணர் கலாநிதி றொகான் குணரட்ண மற்றும் போரில் பங்கெடுத்த இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

உலகளாவிய தீவிரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவத்தினரால் கையாளப்பட்ட பல தந்திரோபாயங்கள் சட்டவிரோதமானவை என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

“ உலகின் எந்த இராணுவமாயினும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றால், சிறிலங்கா இராணுவத்தின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பேச வேண்டும்.

அதேவேளை சிறிலங்கா அரசின் கோட்பாட்டை பின்பற்ற முனையக் கூடாது“ என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அடம்ஸ் கேட்டுள்ளார்.

“ இது ஒரு உண்மையான நிகழ்ச்சி நிரலாக இருந்தால், இது சுதந்திரமானதாக நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் போரின் தீமைகள் நல்லதா கெட்டதா என்று பார்க்கவும் நடுநிலையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் இந்தக் கருத்தரங்கை வரவேற்க முடியும்.

ஜப்பானின் அரசியலமைப்பு அனைத்துலக ஆயுதமோதல்களில் தலையிடுவதை அனுமதிக்கவில்லை.

எனவே கொழும்பில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் இருந்து அவர்கள் தொலைவிலேயே உள்ளனர்.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் மறுசீரமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அடிக்கடி பொய் கூறி வருகிறது.

அவர்கள் எப்போதும் கூறுவது போல அரசியல் மறுசீரமைப்பு ஒன்றை ஒருபோதும் செய்யப் போவதல்லை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

அரசியல் மறுசீரமைப்பு பேச்சுகளின் ஒரு அங்கமாக இருந்தாலும் அவர்களால் அதைச் செய்ய முடியாது.

அது வெறும் வெட்டிப் பேச்சு. இது அடிப்படையில் ஒரு பொய்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு என்பதில் நாம் சந்தேகம் கொள்ளவில்லை.

நாம் புலிகளை மிக அதிகமாகவே விமர்சித்துள்ளோம்.

ஆனால் அவர்களை அழிப்பதற்காக பொதுமக்கள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுவது தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு கோரமான தகவலைச் சொல்கிறது“ என்றும் அடம்ஸ் மேலும் கூறியுள்ளார்.


தமிழர் சாராத பிற அமைப்புகள் இம் மாநாட்டை புறக்கணிக்குமாறு பல உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கும்போது, ஏன் எந்த ஒரு தமிழ் அமைப்பும் இதுகுறித்து முன்னெடுப்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க விடையமாகும்.

எனவே உடனடியாக இந்த பாதுகாப்பு மாநாட்டிற்கு உலக நாடுகள் செல்லக்கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தவேண்டும்.


சிறிலங்காவின் அழைப்பை அமெரிக்காவும் ஜப்பானும் நிராகரிப்பு

சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ள போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கைப் புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும் ஜப்பானும் முடிவு செய்துள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

‘தீவிரவாதத்தை தோற்கடித்த சிறிலங்காவின் அனுபவங்கள்‘ என்ற பொருளில் சிறிலங்கா இராணுவம் இந்தக் கருத்தரங்கை எதிர்வரும் மே 31ம் திகதி முதல் ஜுன் 2ம் திகதி வரை கொழும்பில் நடத்தவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகளுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் அழைப்பு அனுப்பியுள்ளார்.

ஆனால் ஜப்பானின் அரசியலமைப்பு இந்தக் கருத்தரங்கிற்குப் பிரதிநிதிகளை அனுப்புவதற்குத் தடையாக உள்ளது.

அதேவேளை அமெரிக்கா இந்த கருத்தரங்கைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா மறுப்பதற்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கம் பல தொடர் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இந்தக் கருத்தரங்கும் கூட சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

ஆனால் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் விடயங்களில் அமெரிக்க திருப்தி கொள்ளவில்லை.

இதன்காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளது.

அதேவேளை மேலும் பல நாடுகள் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்றும் ‘லங்கா நியூஸ் வெப்‘ குறிப்பிட்டுள்ளது.

Comments