வீரத்தாயின் அஸ்தி சென்னை மெரீனா கடற்கரையில் கரைக்கப்பட்டது (காணொளி)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கடலில் கரைக்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் பின்புறம் உள்ள கடற்கரையில் இன்று மாலை பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டனர். சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை பிடித்திருந்தனர். ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக் கொடிகளும் பறந்தன.

மாலை 5.30 மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனும் வந்தனர். அவர்களோடு கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தானம் ஆகியோரும் கலந்துக்கொள்ள, பார்வதி அம்மாளின் படத்துடன் பெரும் திரளாய் கடலை நோக்கிச் சென்றனர்.

கடல் நீரில் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைக்கப்படும்போது, பார்வதி அம்மாள் புகழ் வாழ்க என்று உரத்த குரலில் வைகோ முழக்கமிட, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் முழக்கமிட்டனர்.





இந்நிகழ்ச்சி கடற்கரையில் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments