ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையின் அதிர்வலைகள் - செய்தித்துளிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் சிறிலங்காவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் போர்க்குற்ற அறிக்கையின் அதிர்வலைகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு இது.

உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும் அவற்றின் செயற்பாட்டாளர்களுக்கும் உளவியல் ரீதியான ஊக்கத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும், சிறிலங்காவின் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க.

“மேற்கு நாடுகளின் ஆதரவுடன் பான் கீ மூன் நிபுணர்குழுவை நியமித்ததானது ஐ.நாவின் சாசனங்களை மீறுகின்ற செயலாகும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சம்பந்தப்பட்ட சரத் பொன்சேகாவையோ அல்லது வேறெவரையோ எந்தவொரு வெளிநாடு நீதிமன்றத்திலும் சிறிலங்கா அரசாங்கம் நிறுத்துவதற்கு அனுமதியாது.

நாடு முழுவதற்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இந்த அறிக்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.“ என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

போர்க்குற்ற அறிக்கையை ஆழமாக ஆராய முடியாது

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு படித்துப் பார்க்கும் என்றும், ஆனால் அதிலுள்ள விடயங்கள் தொடர்பாக ஆழமாக ஆராயமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரதி ஒன்றை சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிசிலனைக்காக அனுப்பி வைத்துள்ளது.

“இந்த அறிக்கையில் என்னென்ன விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்று படித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஆனால் குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் நிலை இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 216 பக்கங்களைக் கொண்ட ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை இன்னமும் படித்து முடிக்கவில்லை“. என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக பனிப்போர்

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சிறிலங்காவுக்கு எதிராக பனிப்போர் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளதாக பிரான்சுக்கான சிறலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

“ சிறிலங்காவில் பொம்மை நிர்வாகம் ஒன்றை அமைக்க பிரிவினைவாதிகளும் அவர்களின் அனுதாபிகளும் முனைகிறார்கள்.

அது தனிநாடு அமைக்கும் தமது நோக்கத்தை அடைவதற்கு வசதியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

நிபுணர்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதைத் தாமதிக்கும்படி ஐ.நாவிடம் சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

ஆனால் அதையும் மீறி ஐ.நா பொதுச்செயலர் இந்த அறிக்கையை வெளியிட்டு விட்டார்“ என்றும் தயான் ஜெயதிலக குற்றம்சாட்டியுள்ளார்.

பான் கீ மூனும் நேட்டோவுமே மேற்குலகின் ஆயுதங்கள்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனையும், நேட்டோவையும் மேற்கு நாடுகள் தமது ஆயுதங்களாகப் பாவித்துக் கொள்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார் மானெல் மல் அமைப்பின் அமைப்பாளரான, சட்டநிபுணர் எல்.எல்.குணசேகர.

“மேற்குலக நாடுகள் உலகமே தமக்குச் சொந்தம் என்று தான் நினைக்கின்றன. ஆயுதங்களைக் கொண்டு அவை உலகத்தை அழிக்கின்றன. ஈராக்கில் சதமாமை வீழ்த்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்றன.

ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும், பஹ்ரெய்னிலும் இதற்கு உதாரணங்கள் உள்ளன.

மேற்குலக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஏனைய நாடுகள் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்“ என்றும் எஸ்.எல்.குணசேகர மேலும் கூறியுள்ளார்.

பான் கீ மூனை சாடுகிறது இன்னர் சிற்றி பிரஸ்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இதுவரை பாதுகாப்புச் சபையிடமோ அல்லது பொதுச்சபையிடமோ கோரிக்கை விடுக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் தகவல் விசனம் வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையைப் பகிரங்கப்படுத்தி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையிலும், இது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் இன்னர் சிற்றி பிரஸ் நேற்று குற்றம்சாட்டியுள்ளது.

எனினும், ஐ.நா பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான கொலம்பியாவைச் சேர்ந்த நெஸ்டர் ஒசோரியோ, இந்த நிபுணர் குழு அறிக்கையை தான் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இது ஓர் வழக்கமான நடவடிக்கையே என்றும், இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு எந்தக் கோரிக்கையும் பாதுகாப்புச் சபைக்கு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

மகிந்தவும் ரணிலும் கூட்டறிக்கை விட்டால் போதும்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக ஐதேக இன்னமும் முறைப்படியான அறிக்கையை வெளியிடாதிருப்பது கவலை தருவதாக கூறியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க.

“ இந்த அறிக்கையை எதிர்ப்பதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து அதிகாரபூர்வமான அறிக்கையைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையைக் கண்டித்து ரணில் விக்கிரமசிங்கவும் மகிந்த ராஜபக்சவும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டாலே 75 வீதமான பிரச்சினைகள் தீர்ந்து விடும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments