பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கையும் அதில் அடக்கப்படாத அம்சங்களும்

இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பில் பான் கீ மூனின் நிபுணர் குழு கையளித்துள்ள அறிக்கையின் பின்னர் நிபுணர் குழு இலங்கைக்கு செல்லுமா? என ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இன்னர் சிட்டி பிரஸ் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த 12 ஆம் திகதி பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ள, இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்தில் நெகிழ்வு தன்மையுடன் இருக்கிறார் என பான் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தற்போது நிபுணர் குழு இலங்கை செல்லுமா எப்போது செல்லும்? அவ்வாறு செல்லாவிட்டால் ஏன் செல்லவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் நேற்று கேள்வி எழுப்பியது.

அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் பதில் எதனையும் வழங்காமல், குறித்த கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியாது. அதற்கு நிபுணர் குழுவே பதில் வழங்கும் என்று துணைப்பேச்சாளர் ஹக் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நிபுணர் குழுவின் அறிக்கையை பான் கீ மூன் முதலில் மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியமை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையதிகாரி விஜய் நம்பியாரின் நடவடிக்கைகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படாமை சந்தேகத்தை எழுப்புவதாகவும் இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கையின் பகுதிகளையும் இன்னர் பிரஸ் சிட்டி வெளியிட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கை எனக்கூறி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இதன்போது பூஜ்ஜிய பொதுமக்கள் இழப்பு என்ற அடிப்படையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது, எனினும் இந்த நடவடிக்கையின் போது இலங்கை இராணுவமும் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இலங்கைப்படையினரின் செல் தாக்குதல்களினால் பல பொதுமக்களின் உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன.

விடுதலைப்புலிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சுமார் 330000 பொதுமக்கள் தங்கியிருந்த பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கைப்படையினர் எறிகனை வீச்சுகளை நடத்தினர்.

அதேநேரம் இந்த சம்பவங்கள் வெளியில் செல்லாத வகையில் இலங்கை அரசாங்கம் ஊடகங்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்தது.

பொதுமக்களின் இழப்புகள் குறித்து விமர்சித்ததவர்கள் வெள்ளை வேன் மூலம் கடத்தப்பட்டனர். பலர் அச்சுறுத்தப்பட்டனர்.

இலங்கைப்படையினர் வன்னியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று பாதுகாப்பு வலயங்களின் மீது செல் வீச்சுக்களை நடத்தினர்.

இதன் காரணமாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

அத்துடன் உலக உணவுத்திட்டம் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல சென்ற சர்வதேச செஞ்சிலுவை சங்க கப்பல்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

அரசாங்கப்படையினர் வைத்தியசாலைகளின் முன்னரங்குகளின் மீது தாக்குதல்களை நடத்தினர்.

இந்த இடங்களை படையினர் நன்கு அறிந்த நிலையிலேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பொதுமக்களை பாதுகாப்பு வலயங்களுக்கு திருப்புவதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதன்காரணமாக 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மேமாதம் வரையிலான பகுதியில் எண்ணிலடங்காத பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

அதிலும் இறுதியுத்தத்தின் இறுதிப்பகுதியில் பலர் கொல்லப்பட்டனர்.

கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிக்கொண்டே செல் தாக்குதல்களை அதன் படையினர் மேற்கொண்டனர்.

இதனையடுத்து பாதுகாப்பு வலயஙகளில் இருந்து வெளியேறி படையினர் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளா? என அறிவதற்காக வெளிப்படை இல்லாமல் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

சிலர் பொதுமக்களிடம் இருந்து தனியாக்கப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டனர்.

பெண்கள் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டனர்

பலர் காணாமல் போயினர்.

இதனை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களாக குறிப்பிட்டதாக பான் கீ மூனின் நிபுணர் குழு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அகதிகள் அனைவரும் மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

அதிக சனநெரிசலுக்கு உட்பட்ட நிலையில் அகதிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சில முகாம்களில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன.

சரணடைந்த அல்லது அகதிகளாக வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தனிமைப்படுத்தப்பட்டு வெளியுலகம் தெரியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டனர். அத்துடன் துஸ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

இதேவேளை பாதுகாப்பு வலயங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அனுமதி மறுத்தனர்.

படையினர் முன்னேறுவதை தடுப்பதற்காக பொதுமக்களை அவர்கள் கேடயங்களாக பயன்படுத்தினர்.

இறுதி யுத்தக்காலப்பகுதியில் அவர்கள் சிறுவர் என்ற வயது வித்தியாசமின்றி ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டனர் அவர்களின் சொந்த பாதுகாப்பை கருதி பொதுமக்களை கொண்டு பாரிய பதுங்குக்குழிகளை அமைத்தனர்.

தமது சிரேஸ்ட தலைவர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக பொதுமக்களை அவர்கள் பலியிட்டதாகவும் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தப்பிச்சென்ற பொதுமக்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் துப்பாக்கி சூட்டையும் நடத்தினர்.

அத்துடன் பொதுமக்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்தும் பொது வைத்தியசாலைப்பிரதேசங்களில் இருந்தும் அவர்கள் இலங்கைப்படையினர் மீது எறிகனை வீச்சுகளை நடத்தினர்.

அதேநேரம் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே தற்கொலை தாக்குதல்களையும் அவர்கள் நடத்தி வந்தனர்.

இதேவேளை இறுதிப்போரின் இறுதிக்கட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தினால் பாரியளவில் மனித உரிமைகள் மீறப்பட்டன.

செல் வீச்சுகளினால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். வைத்தியசாலை உட்பட்ட மனித நேய இடங்களின் மீது செல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மனிதபிமான உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை இலங்கைப்படையினர் தடுத்தனர். போரின் போது பாதிக்கப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் மீது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.

அத்துடன் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே ஊடகங்கள்மற்றும் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் மீது மனித உரிமைமீறல் சம்பவங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளும் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர். தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களை கொன்றனர். தற்கொலை தாக்குதல்களின் மூலம் பொதுமக்கள் பலியாவதற்கு காரணமாக இருந்ததாகவும் பான் கீ மூனின் நிபுணர் குழு குற்றம் சுமத்தியுள்ளது

இந்தநிலையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணைகளில் எவ்வித நியாயத்தன்மையும் இல்லை என்று பான் கீ மூனின் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை விசாரணை செய்து வருகிறது

எனினும் அதன் விசாரணைகள் சர்வதேச மனித உரிமைகள் தரத்தில் அமையவில்லை.

இந்த ஆணைக்குழுவின் முன்னால் தாமே முன்வந்து சாட்சியமளிக்குமாறு கோரப்பட்டுள்ள நிலையில் பலர் அச்சம் காரணமாக சாட்சியமளிக்கவில்லை

இதனைதவிர இலங்கை அரசாங்கத்தின் சட்டமுறைமைகளும் நியாயதிக்க தன்மையை கொண்டிருக்கவில்லை.

இராணுவ நீதிமன்றத்தை பொறுத்தவரை அவை இராணுவ மீறல்கள் குறித்த எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை என்றும் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம். சர்வதேச தரத்துக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது

அத்துடன் பான் கீ மூன் இந்த மீறல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் அந்தக்குழு பரிந்துரைத்துள்ளது

நிபுணர் குழுவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்

இலங்கை அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

அரசாங்கம் தாம் மேற்கொள்ளும் வன்முறைகளை நிறுத்தவேண்டும் அரசாங்கத்தினால் ஊக்கமளிக்கப்படுகின்ற அனைத்து ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவேண்டும்

போரில் பாதிக்கப்பட்ட மக்களின் மனித தன்மைகள் மதிக்கப்படவேண்டும். அந்த மக்களின் கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காணாமல் போன மற்றும் மரணித்தவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் கோரினால் மரண சான்றிதழ்களை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு மற்றும் மீள்குடியமர்ந்தவர்களுக்கான உரிய நிவாரணங்களை அரசாங்கம் வழங்கவேண்டும்.

சட்டவிரோதமாக கடத்திச்செல்லப்பட்டவர்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்களின் நிலை தொடர்பில் அரசாங்கம் தகவல்களை வெளியிடவேண்டும்

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரக்காலச்சட்டம் ஆகியவற்றை மீள்பரிசீலனை செய்யவேண்டும் இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது சர்வதேச நியதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும்.

அத்துடன் வன்னி இறுதிப்போரின் போது இடம்பெற்ற யுத்தமீறல்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக்கல்களை வழங்கவேண்டும்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடைமுறையை பின்பற்றி இலங்கையில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்று பான் கீ மூனின் நிபுணர் குழு பான் கீ மூனை அறிவுறுத்தியுள்ளது.

Comments