தலைவர் பிரபாகரனின் மனைவி எங்கே ரமேஷிடம் இராணுவம் கேள்வி-காணொளி



இறுதி யுத்தத்தின் போதும் 16, 17, 18 என மூன்று நாட்களாக பல கட்டங்களாக புலிகளின் சில சிரேஷ்ட தளபதிகளும், அரசியல்துறைப் பொறுப்பாளர்களும், ஆயுதம் தாங்காத செயற்பாட்டாளர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். ஆனால் அவர்களில் கணிசமான பேரை இராணுவம் கடுமையாகத் தாக்கி விசாரித்து பின்னர் படுகொலை செய்துள்ளது. பல தளபதிகளின் உடல்கள் இவைதான் என அடையாளம் காட்டிய தேசிய பாதுகாப்பு இணையம், பொட்டம்மானைப் பற்றி வாயே திறக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் குறித்து எந்த ஒரு கருத்தையும் இலங்கை அரசு இதுவரை முன்வைக்கவில்லை. இந் நிலையில் சரணடைந்த கேணல் ரமேஷிடம் தலைவரின் மனைவி எங்கே என இராணுவம் விசாரித்துள்ளது.

அதாவது இந்த விசாரணை மே 18ம் திகதி போர் முடிவடைந்து, அனைத்துப் பகுதிகளையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னரே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட முடியாத நிலையில், தேசிய தலைவர் அவர்களின் மனைவி இருப்பதை இலங்கைப் புலனாய்வு வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறது என்பதற்கு இந்த வீடியோவே ஆதாரமாக உள்ளது எனலாம். இதுபோன்று விடைகாண முடியாத பல சிக்கல்கள் இன்னும் தொடர்வதாக அதிர்வு இணையம் அறிகிறது. சரணடைந்த பல போராளிகளும் சில தளபதிகளும் கொல்லப்பட்ட நிலையில், கேணல் ரமேஷின் நிலை என்ன என்று இன்னும் தெரியவில்லை. அவரை இராணுவம் உயிரோடு பிடித்து விசாரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளதே தவிர அவரின் இன்றைய நிலை என்ன என்பதை எவராலும் கூறமுடியாத நிலை காணப்படுகிறது.





அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுவதாக, சட்டத்துக்குப் புறம்பான கொலைகளை ஆராயும் ஐ.நா அதிகாரி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு மேலும் தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு புறம்பான படுகொலைகள் தொடர்பாக ஐ.நா வுக்கு அதிர்வு இணையம் மக்களோடு இணைந்து, பல ஆதாரங்களை அனுப்பிவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.



Comments