மேற்குலகம் தீர்மானித்தால் அதனை நிறைவேற்றியே முடிப்பார்கள்.

சிறீலங்கா மீது ஐ.நாவின் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என மேற்குலகம் தீர்மானித்தால் அவர்கள் அதனை நிறைவேற்றியே முடிப்பார்கள் என்பதற்கு லிபியா, சிரியா விவகாரங்கள் நல்ல உதாரணங்கள் .

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை தமக்கு ஆதரவாக திரும்பும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. 47 அங்கத்தவர்களை கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தற்போது தாய்லாந்து தலைமை தாங்குகின்றது.

இந்த சபையில் அங்கோலா, ஆர்ஜன்ரீனா, பஹாரைன், பெல்ஜியம், பிரேசில், பேர்கினா பாசோ, கமெரூன், சிலி, சீனா, கியூபா, டிபோட்டி, ஈகுடோர், பிரான்ஸ், கபோன், கானா, குவந்தமாலா, ஹங்கொரி, யப்பான், ஜோர்டான், கரிகிஸ்த்தான், லிபியன் அரபு ஜமாகிரியா, மலேசியா, மாலைதீவுகள், மொறீரியானா, மொறீசியஸ், மெக்சிகோ, நையீரியா, நோர்வே, பாகிஸ்தான், போலந்து, கட்டார், கொரியா, மொல்டோவா, ரஸ்யா, சவுதி அரேபியா, செனகல், ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், சுவிற்சலாந்து, உகண்டா, உக்ரேன், பிரித்தானியா, சிறீலங்கா, அமெரிக்கா, உருகுவே, சம்பியா ஆகிய நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன.

ஆனால் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை ஏற்கனவே மிகவும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை தான் வரவேற்பதாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்துள்ளார்.

போர் எவ்வாறு நிறைவடைந்துள்ளது என்பதை அறிக்கை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. அங்கு பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் தேவை என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நாளை (03) தனது அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அறிக்கையை ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நிறைவேற்றுக்குழு கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, லிபியா விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை சிரியா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் மேற்குலகம் எதிர்பாராத வெற்றியை அடைந்துள்ளது. எனவே சிறீலங்கா மீதான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என மேற்குலகம் தீர்மானித்தால் அவர்கள் அதனை நிறைவேற்றியே முடிப்பார்கள் என்பதற்கு லிபியா, சிரியா விவகாரங்கள் உதாரணம்.

சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தில் 26 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. 9 நாடுகளே எதிராக வாக்களித்துள்ளன. சீனா, கியூபா, ஈகுடோர், காபோன், மலேசியா, மொறிசியஸ், பாகிஸ்தான், ரஸ்யா, பங்களாதேசம் ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்திருந்தன. ஏழு நாடுகள் வாக்களிக்கவில்லை. நான்கு நாடுகள் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இந்த சமயத்தில் தான் சிரியா மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையும் காதத்திரமானதாகவே அமைந்திருந்தது.

எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவுகளை பெறுவதற்கு சிறீலங்கா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எதிர்வரும் 16 ஆம் நாள் இந்தியா செல்லும் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரீஸ், இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அவர் இந்தியாவின் ஆதரவை கோருவதற்கும் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் இந்தோனேசியா செல்லும் பீரீஸ், அங்கு அணிசேரா நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments