ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் காணொளிகள்

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என நேற்று (12) அவசர கூட்டம் ஒன்றை நடத்திய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நேற்று (12) ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சிறீலங்கா தொடர்பான விவாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் அதில் உள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

அங்கு பேசிய பலரும் அறிக்கைக்கு ஆதரவாகவே உரையாற்றியிருந்தனர். இந்த விவாதத்தை தொடர்ந்து, சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான, சுயாதீனமான, நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் போர் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளன, சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சிங்கள மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் சிறீலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் ஐ.நா அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Comments