எச்சரிக்கையாய் இருங்கள்! - புலம்பெயர் தமிழ் மக்களே!

போர்க்குற்றவாளி மகிந்தவை ஓடஓட விரட்டிய மானத்தமிழர்கள் நீங்கள். சிறீலங்காவினதும், இந்தியாவினதும் கைப்பொம்மையான கே.பியின் கண்ணீர் சிந்திய இரங்கல் தீர்மானங்களையும், அவரின் தலைமையையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து அவரை வரலாற்றுக்குப்பைக்குள் வீசியெறிந்த தேசியஉணர்வுள்ளவர்கள் நீங்கள்.



தாயக மண் முழுவதையும் ஆக்கிரமித்த பின்பும், தாயகத்தில் வாழும் எமது உறவுகளை கொடும் அடக்குமுறைக்குள் தினம் தினம் பயந்து பயந்து வாழ்வதற்கு பழக்கிய சிங்களத்தால் வெல்லமுடியாத பெரியசக்தியாக இரண்டு வருடங்களாகிய பொழுதிலும் நிமிர்ந்துநிற்கும் ஒரே ஆயுதம் புலம்பெயர் தமிழர்கள் என்ற பலமிக்க நீங்கள்தான்.!

இங்கு ஒவ்வொரு நாளும் மரணம் வந்து எம்மை அழைத்து சென்றுவிடும் என்ற பயத்துடன் வாழ்கின்றோம். ஆனால், நாங்கள் செத்தாலும், எங்களின் மண்ணை என்றாவது ஒருநாள் எங்களின் புலம்பெயர் தமிழர் என்ற சக்தி மீட்டுவிடும் என்ற நம்பிக்கையுடனேயே ஒவ்வொரு இரவும் நித்திரைக்குள் போகின்றோம்.

முள்ளிவாய்க்காலின் நாட்கள் நெருங்கும்போது புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்துவிடுவார்களோ என்ற சிங்கள தேசத்தின் நடுக்கம் இங்கு காவலரண்களில் நிற்கும் சிங்கள சிப்பாய்களிலும் தெரிகிறது. இப்போது அந்த புலம்பெயர் சக்தியையும் சிதைக்கும் திட்டங்களுடன் சிறீலங்காவின் கைக்கூலிகளும், ஒட்டுக்குழுக்களின் எடுபிடிகளும் புலத்து தமிழர்களுள் ஊடுருவி இருக்கிறார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் போர்க்குற்றத்துக்கு எதிராக எழுவதை தடுப்பதற்காகவும் தமிழீழ தேசிய உணர்வுடன் ஒன்று சேர்வதை குழப்புவதற்காகவும் மே 18க்கு முன்னர் அதிர்ச்சித் தகவல்கள் என்ற செய்திதருவது போலவே சில ஆவணங்களை வெளியிட உள்ளார்கள்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று புலம்பெயர் தமிழர்களுக்கு புகைப்படக் கண்காட்சிகளை இணையத்தில் வலம் வரவிடுவார்கள். தமிழர்களுக்கு என்று இருந்த ஒரே தலைமையும் சிங்களத்தால் அழிக்கப்பட்டுவிட்டது என்று போலிக்கண்ணீருடன் புகைப்படங்களை போடுவார்கள். தலைவரைப்போன்ற தோற்றத்துடனானவரை சிங்கள முகாமுக்குள் வைத்து விசாரிப்பதுபோன்ற ஒளிக்காட்சிகளையும் சீறவிடுவார்கள்.

இனிப்போராடி என்ன பயன் என்று நீங்கள் ஓய்ந்துபோக வைப்பார்கள். போர்க் குற்றத்துக்கெதிராக நீங்கள் கிளர்ந்தெழுவதை திசைதிருப்பவே இந்த ஓளி நாடாக்களும், ஒளிப்படங்களும்.

அன்புக்குரிய புலம்பெயர் தமிழர்களே,

ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள்.

சிறீலங்காவில் சிங்களவர்களாலும், அரசாங்கத்தாலும் நடாத்தப்படும் எத்தனை ஆயிரம் இணையங்களும், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இருக்கின்றன. அவற்றில் வெளியிடாமல் புலம்பெயர் ஊடகங்களில், அதுவும் தமிழர்கள் என்று சொல்லப்படுவர்களின் ஊடகங்களில் இவற்றை வெளியிடும் காரணம் என்ன?

ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலுக்கூடாகவே இந்த ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டு இருப்பதை உன்னித்து பாருங்கள். முதலில் படங்கள் வெளியிடப்படுகின்றன. பிறகு திடீர் என தொடர்ச்சியாக ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்படுகிறார்கள். (இவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் இருபத்து மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது)

இறுதியில் முன்னர் கே.பி தொலைக்காட்சியில் விம்மி விம்மி வெடித்து அழுது சொல்லி ஏமாற்ற முயன்று தோற்றதையே மீண்டும் ஒளிப்படமாகவோ, ஒளிநாடாவாகவோ காட்டி உறுதிப்படுத்த முனைவார்கள். அதைப்பார்த்த பிறகு உங்களில் பலர் வீடுகளுக்குள் முடங்கிகிடந்துவிடுவீர்கள்.

நீங்களும் வீச்சுடன் இல்லையென்றால் தாயத்தில் மிச்சம்மீதி இருக்கும் எங்களையும் இன்னும் ஓரிரண்டு வருடங்களுக்குள் அழித்துவிடுவார்கள். எனவே, இனிவரப்போகின்ற நாள்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

வரப்போகின்ற இரண்டு வாரங்களில் சிங்களம் உங்கள் மீது மோசமான ஊடக தாக்குதல்களை நீங்கள் எதிர்பார்க்காத, நீங்கள் கேள்விப்பட்டிராத இணையங்கள் வாயிலாக நடாத்தும்.

அதற்குள் நீங்கள் மூழ்கிப்போனால் தமிழர்கள் என்ற இனம் இலங்கைத்தீவில் வாழ்ந்தது என்பது வரலாற்றில்கூட கிடைக்காது.

அதனை நீங்கள் நிராகரித்து எழுந்தால் இன்றில்லாதுவிட்டாலும் என்றாவது ஒருநாள் மாவீரரின் கனவு நனவாகும்.

- தமிழ்க்கதிருக்காக என்றும் அன்புடன் தாயக தமிழன்
- ச.அமுதன்

Comments