புதுவை, பாலகுமார் பேபி ஆகியோர் எங்கே ? GTF -BTF- TGTE கேள்வி கேட்குமா ?

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த புதுவை ரத்தினதுரை, யோகி, பாலகுமார் மற்றும் பேபி சுப்பிரமணியம் ஆகியோர் எங்கே. இதுவரை அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இலங்கை அரசால் வெளியிடப்படவில்லை.

அதுமட்டுமல்லாது தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் போராளிகளினுடைய பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை தமிழ் அமைப்புகளான GTF, BTF மற்றும் நா.க.அரசாங்கம் என்பன வெளியிடச் சொல்லிக் கோரிக்கை விடுக்குமா ? போர் குற்றம், இன அழிப்பு என்பன குறித்து கவனம் செலுத்திவரும் இவ்வமைப்புகள், போராளிகளின் விடுதலை குறித்து பேசாவிட்டாலும், தடுத்துவைக்கப்பட்டுள்ளோரின் பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை சர்வதேசத்துக்கு கொடுக்க முயலவேண்டும்.

வெலிகந்தையில் இருக்கும் இராணுவத்தின் ரகசிய தடுப்பு முகாம்களில் உள்ள விடுதலைப் புலிகளின் சில முக்கிய நபர்களை, கருணாவின் கோஷ்டி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். இதுவரை பல தடவைகள் கருணாவின் ஆட்கள் முகாமுக்குச் சென்று இவ்வாறு பலரை அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அவ்வாறு செல்பவர்கள் எவரும் இதுவரை முகாமுக்கு திரும்பியது இல்லை என்றும் தெரியவருகிறது. இவ்வாறே யோகி உட்பட பலர் அழைத்துச் செல்லப்பட்டதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

இரகசிய தடுப்பு முகாமில் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருகிறது. எனவே , தடுப்பு முகாமில் இருக்கும் புலிகள் பற்றிய பெயர் பட்டியலை இலங்கை அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என அனைத்து தமிழ் அமைப்புகளும் அழுத்தம் கொடுக்கவேண்டும். இல்லையே இன்னும் சில காலத்தில் ரகசிய தடுப்பு முகாம்கள் என்று ஒன்றும் இல்லை என இலங்கை அரசு கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Comments