சனல்-4: 'சிறிலங்காவின் கொலைக்களம்' - பி.பி.சி 1: 'லூதர்' என்ற துப்பறியும் தொடர் : மீள்மதிப்பீடு

சிறிலங்காவினது உயர் ஆணையராலயத்தில் உள்ளவர்களைத் தவிர பிரித்தானியாவில் இந்த ஆவணப்படத்தினைப் பார்த்தவர்களைப் பொறுத்தவரையில் இந்தக் காட்சிகள் போலியானவை என நம்புவதற்கு எவரும் தயாராக இல்லை.

இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்டInnocents in the line of fire, Sri Lanka's Killing Fields Vs TV Shows The Independent ஊடகத்தில் சனல்-4 திரையிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் காணொலி பற்றிய மீள்மதிப்பீடு [Reviewed] ஒன்றை Tom Sutcliffe எழுதியுள்ளார்.

அதன் முழுவிபரமாவது.

"இந்த ஆவணப்படம் குழப்பம்தருகின்ற காட்சிகளைக் கொண்டது" என சிறிலங்காவினது கொலைக்களம் என்ற இந்த ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் அதன் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோ எச்சரிக்கிறார்.

"மரணங்கள், காயமடையும் சம்பவங்கள், படுகொலைகள், பாலியல் முறைகேட்டின் பின்னானகொலைகள்" உள்ளிட்ட காட்சிகளை நீங்கள் இந்த ஆவணப்படத்தில் காணுவீர்கள் என அவர் தொடர்ந்தார்.

ஆம், இவரது கூற்றுக்கள் உண்மையானவையே. இருப்பினும் இதனை விட மோசமான சம்பவங்கள் எந்தவிதப் பதிவுகளும் இல்லாமல் இடம்பெற்றிருக்கிறது என்பதை இந்தக் காட்சிகள் எங்களுக்கு உணர்த்துகிறது.

அவர்கள் தாம் படம் பிடிக்கப்படுவதற்கு இடமளித்ததுவும் அவ்வாறு படம்பிடிக்கும்போது இடம்பெற்ற அவர்களின் உரையாடல்களும் அந்த மக்களின் உளவுரன் எவ்வாறு சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இறுதி வாரங்களில் இடம்பெற்றது என்ன என்பதை விபரிக்கும் சனல்-4 தொலைக்காட்சியின் இந்த விபரணப்படத்தில் ஒன்றுடனொன்று தொடர்புபடாத இருவேறு காட்சிகளை அவதானிக்கமுடிகிறது.

முதலாவதாக, சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட 'பாதுகாப்பு வலயப் பகுதியில்' சிக்கியிருந்த அகதிகளால் போர்க்குற்றங்களைப் பதிவதற்காக எடுக்கப்பட்ட காட்சிகள்.

இரண்டாவதாக, இத்தகைய குற்றங்களைப் புரிந்த படையினரே தங்களது இத்தகைய குற்றங்களை, காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளைத் தாங்களே பதிந்திருக்கிறார்கள்.

போரின் அவலத்திற்குள் தள்ளப்பட்டிருந்த மக்களால் எடுக்கப்பட்ட கானொலிகளைவிட படையினரால் எடுக்கப்பட்ட படங்களே அதிகளவிலான போர்க்குற்ற ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

போரின் இறுதி மாதங்களில் அனைத்துலக சமூகம் பொதுமக்களை வினைத்திறனுடன் பாதுகாக்கத் தவறியதோடு தமக்கான இந்தப் பணியினைத் தட்டிக்கழித்ததையும் சனல்-4 இந்த ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஐ.நா அமைப்புக்களினதும் அங்கு செயற்பட்டுவந்த இதர அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களதும் பாதுகாப்பினை இனியும் உறுதிப்படுத்த முடியாது எனக்கூறியதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஐ.நா அமைப்புக்கள் வெளியேறியதுடன் ஐ.நாவின் இந்த உதாசீனப் போக்கு ஆரம்பமாகிறது.

போர் இடம்பெற்ற பகுதியிலிருந்து அனைத்துலக சாட்சியங்களை இல்லாதுசெய்வதற்கான அரசாங்கத்தின் ஒரு நகர்வுதான் இது எனக் கருதப்படுகிறது.

ஐ.நா அங்கிருந்து வெளியேறிய நிலையில், தங்களது மக்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதற்குத் துணிந்த விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினரது கொடூரமான தாக்குதல்களுக்கும் இடையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிக்குண்டதைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் வகைதொகையற்ற வகையில் படுகொலை செய்யப்பட்டனர்.

'பாதுகாப்பு வலயம்' என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் மீது மீண்டும் மீண்டும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்காலிக மருத்துவமனைகள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின. இத்தகைய மருத்துவமனைகளின் அமைவிடம் தொடர்பான விபரங்களை பாதுகாப்புக் கருதி அரச தரப்புக்கு வழங்குவது வழமை.

ஆனால் இந்த அமைவிடம் தொடர்பான தங்களது விபரங்களின் துணையுடன்தான் மருத்துவமனைகள் துல்லியமாக இலக்குவைக்கப்படுகின்றனவா என்ற சந்தேகத்தில் இத்தகைய தகவல்களை வழங்கவேண்டாம் என செஞ்சிலுவைக் குழுவினரிடம் கோரப்பட்டிருந்தது.

குறித்ததொரு இலக்குநோக்கி முதலில் ஒரு எறிகணையினை ஏவும் படையினர் அதிக இழப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில், முதலாவது தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்கவருபவர்களையும் தாக்கும் நோக்கில் சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் அதே இடத்தினை இலக்குவைத்து மீண்டும் தாக்குதல்களை நடாத்துவார்கள் என்ற நம்பிக்கையினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆவணப்படத்தின் முதல் அரைப் பகுதியில் எதுவும் காணப்படவில்லை.

வேகமாகச் சுருங்கிச்சென்ற விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிலவிய நிலைமையினை விளக்கும் சாட்சியங்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக ஆவணப்படத்தின் முதல் அரைபபகுதி அமைகிறது.

முதல் அரைப் பகுதியினைப் பொறுத்தவரையில் அதில் வரும் காட்சிகள் பாதிக்கப்பட்டவர்களாலேயே பதியப்பட்டது என்பதால் இதனைப் போர்க்குற்றங்களாகப் பார்க்கமுடியாது என்றும் போரின் மத்தியில் ஏற்பட்ட குழப்பமே இது என்றும் சிறிலங்கா அரசாங்கத்தனால் வாதிடமுடியும்.

ஆனால் ஆவணப்படத்தின் இரண்டாவது அரைப்பகுதியானது சிறிலங்காப் படையினரினால் கைதிகள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளை அது கொண்டிருக்கிறது.

இது வெறும் இட்டுக்கட்டப்பட்ட கதை எனக்கூறுவதுதான் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இதனை மறுதலிப்பதற்கு இருக்கும் ஒரேயொரு வழி.

ஆனால், சனல் -4 தொலைக்காட்சியினது தொழிநுட்ப ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் இந்தக் காட்சிகள் பொய்யானவையாகத் தெரியவில்லை.

அத்துடன் சிறிலங்காவினது உயர் ஆணையராலயத்தில் உள்ளவர்களைத் தவிர பிரித்தானியாவில் இந்த ஆவணப்படத்தினைப் பார்த்தவர்களைப் பொறுத்தவரையில் இந்தக் காட்சிகள் போலியானவை என நம்புவதற்கு எவரும் தயாராக இல்லை.

"இது எங்கள் அரச சொத்து – நாங்கள் சுட்டுக் கொல்லுவோம்" என சிறைக்கைதிகள் சிலர் சுட்டுக்கொல்லப்படும் காட்சியில் இந்த வாசகத்தினைக் கேட்க முடிகிறது.

"ஒரு பயங்கரவாதியைச் சுட்டுக்கொல்லவதற்கு நாங்கள் யாரும் இங்கு பந்துகளுடன் இருக்கிறோமா" என முழங்காலில் இருக்கும் மூன்று கைதிகளையும் எவ்வாறு சுட்டுக்கொல்லவது என நிச்சயமற்ற நிலையிலிருக்கும் சக படை வீரர்களை நோக்கி, இன்னொரு சிங்களப் படையினன் கூறுகிறான்.

ஆடைகள் களையப்பட்ட பெண்களின் உடலங்களை உழவூர்தியில் ஏற்றும்போது, "அருகே யாரும் இல்லையெனில் இவளது முலைகளை நான் வெட்டியெடுக்க விரும்புகிறேன்" என ஒரு சிங்களப்படையினர் கூறுவதுதான் மிகவும் கோரமானது.

குறிப்பிட்ட இந்த ஆவணப்படமானது சனல் -4 தொலைக்காட்சியின் நேர்மையினையும் அவர்களது ஊடக தரத்தினையும் கேள்விக்குள்ளாக்குகிறது என சிறிலங்காவினது கொலைக்களம் என்ற வெறுப்பூட்டும் இந்த ஆவணப்படம் தொடர்பாகக் கருத்துரைத்த சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.

போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறும் இந்த விடயத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்துலகச் சமூகத்தில் எந்தத் தரப்பும் தயாராக இல்லை என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு பொறுப்பற்ற வகையில் பதிலளித்திருக்கிறது.

இந்தப் போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணையினை மேற்கொள்ளுவதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபை தவறியிருப்பதானது 'நியாயப்படுத்தமுடியாதது' என அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஸ்ரீவ் கிறவ்சோ கூறுகிறார்.

ஆனால் இதனை காரணம்கூறி நியாயப்படுத்த முடியும் என்றும் இந்தக் காரணங்கள் அரசியல் மற்றும் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் நான் அஞ்சுகிறேன்.

ஆவணப்படத்தின் இறுதியில் உதவி நாடி நிற்கும் தமிழ் பொதுமக்களின் காணொலிக்கு மேலாக ஐ.நா 'மீண்டும் ஒருமுறை தவறிழைக்குமா?' என்ற கேள்வியினை இதன் ஜோன் ஸ்னோ தொடுக்கிறார்.

இதற்கான விடை பெரும்பாலும் ஆம் என்பதாகத்தான் இருக்கும். கோபம் தொனிக்கும் காத்திரமான இந்த ஆவணப்படம் முக்கியமானதொன்றாக கருதப்படவில்லை.

சனல் -4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் த பெயாறி ஜொப்மதர் [The Fairy Jobmother] தொடருக்குப் பிரித்தானியர்களால் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட இந்த ஆவணப்படத்திற்கு அவர்களால் கொடுக்கப்படவில்லை.

உண்மையில் நடந்தேறிய சம்பவங்கள் காட்சிப்படுத்திய இந்த ஆவணப்படம் அதிகளவிலானோரைக் கவரவில்லை. ஆனால் இதுபோன்ற தொலைக்காட்சித் தொடர்கள் மக்களின் மனங்களை அதிகம் தொட்டு நிற்கிறது.

பி.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இடைநின்றுபோன 'லூதர்' என்ற துப்பறியும் தொலைக்காட்சித் தொடரைப் போல இந்த ஆவணப்படம் இருந்தது. இந்தத் துப்பறியும் தொடரில் தனது மனைவியைக் கொலைசெய்த லூதர் அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விலக்கி விடப்படுகிறார்.

தி.வண்ணமதி.

Comments