சனல் 4 ன் "கொலைக்களம்" தமிழில் ஜெயா தொலைக்காட்சியில்

சனல் 4 "கொலைக்களம்" காணொளி ஆவணப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் அது விரைவில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெலலிதாவிற்குச் சொந்தமான ஜெயா தொலைக்கட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று வெளியான சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் இத்தகவலை அரசியல் அலசல் பகுதியில் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியை இலங்கையிலும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள ஸ்ரீலங்காவின் தூதர் பிரசாத் காரியவாசம் அண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது ஜெயலலிதா தாம் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இரண்டாவது பிரதான காரணம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தான் கொண்டிருந்த நிலைப்பாடு ஆகும் என்றும் இலங்கைத் தூதரிடம் தெரிவித்தார் என்றும் சண்டே ரைம்ஸ் அரசியல் அலசலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஸ்ரீலங்கா பற்றி தாம் எடுக்கும் நடவடிக்கைகள் தனது மக்கள் மற்றும் தனது அரசாங்கத்தின் கூட்டாளிக்கட்சிகளின் ஆலோசனையுடன் தான் அமையும் என்றும் ஜெயலலிதா பிரசாத் காரியவாசத்திடம் தெரிவித்ததாகவும் சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.


இதேவேளை ஜெயா ரிவியில் ஒளிபரப்பப்படும் இந் நிகழ்வுகளை இலங்கையிலும் பார்க்க முடியும் என்பதால் குறிப்பிட்ட நாளில் அவ் ஒளிபரப்புகளைத் தடைசெய்வது குறித்தும் இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறதாம்.

Comments