சிறிலங்காவைக் கைவிட அமெரிக்காவால் முடியாது! வெறும் மிரட்டல் மாத்திரமே

உலக நாடுகளுக்குச் செய்யும் நிதி உதவி வழங்கல் மூலம் அமெரிக்கா தனது தேசிய நலனை முன்னெடுக்கிறது. பணமாகவும், பொருளாகவும், ஆயுதமாகவும், இராணுவப் பயிற்சியாகவும் அமெரிக்க உதவிகள் வெளி நாடுகளுக்குச் செல்கின்றன.


இந்த உதவிகள் (Foreign AID) அதாவது வெளி உதவி என்று அமெரிக்க அரசினால் வகைப்படுத்தப்படுகிறது. மிகக் கூடுதலான இந்த வகை உதவிகளை வழங்கும் நாடாக அமெரிக்க இடம் பெறுகிறது. வருடமொன்றுக்கு 23பில்லியன் டாலர்களை வெளி உதவியாக அமெரிக்கா வழங்குகிறது.

மிகக் கூடுதலான நிதி உதவிகளைப் பெறும் தெற்காசிய நாடாகச் சிறிலங்கா இடம்பெறுகிறது. அதனுடைய பொருளாதாரம் இலவச வழங்கல் தொடக்கம் சலுகை வட்டிக் கடனுதவி வரையில் தங்கியுள்ளது. உதவி வழங்கலில் சீனா முதலிடத்தையும், ஜப்பான் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவும் இந்தியாவும் மூன்றாம் நான்காம் இடங்களையும் பிடித்துள்ளன.


இந்தியக் கடலாதிக்கத் தேவைக்காக சிறிலங்காத் தரையும் துறைமுகங்களும் தேவைப்படுகின்றன. மேற்கூறிய நாடுகள் சிறிலங்காவுக்குக் கொடுக்கும் உதவித் தொகைகளை “முற்பணம்” என்று வகைப்டுத்தலாம். பணத்தையும் பிற உதவிகளையும் கொடுத்துத் தீவில் இடம்பிடிக்க முயற்சிக்கிறார்கள். அவ்வளவும் தான்.


அமெரிக்க அரச நிர்வாகத்தில் கடும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. எதிர் கட்சியான குடியரசுக் கட்சியின் கையோங்கிவிட்டது. இரு பகுதிக்கும் இடையில் எழும் முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதில் செனட்சபை உறுப்பினர்கள் ஈடுபடுகிறார்கள்.


அமெரிக்கா மீண்டும் பொருளாதார நெருக்கடியை எட்டிவிட்டது. பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அமெரிக்க வரவு செலவுக் கணக்கில் ஈடுசெய்யப்பட வேண்டிய தொகை 14.3 திரில்லியன் (Trillion) டாலர்கள் இருக்கின்றன.


இந்தத் தொகையைக் குறைப்பதற்காக கோடீஸ்வரர்கள், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஆலோசனையை எதிர் கட்சியினர் வன்மையாக எதிர்க்கின்றனர். அடுத்த வருடம் வரவிருக்கும் சனாதிபதித் தேர்தலில் ஒபாமாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அம்சமாக இட்டு நிரப்பவேண்டிய தொகை இடம்பெறுகிறது.


இரு நாடுகளுக்கு முன்பு சர்வதேசப் பொருளியல் நிபுணர்களும் வங்கி அதிகாரிகளும் உலகப் பொருளாதாரம் 2008ல் கண்ட வீழ்ச்சியைப் போல் (Recession) அமெரிக்காவின் இன்றைய நெருக்கடி மூலம் மீண்டும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவை எச்சரித்துள்ளனர்.


சிறிலங்காவுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் விடுக்கும் எச்சரிக்கை வெறும் மிரட்டல் மாத்திரமே. சிறிலங்காவைப் பணியச் செய்ய இந்த மிரட்டல்கள் போதுமனவையல்ல. சிறிலங்காவைக் கைவிட அமெரிக்காவுக்குக் கட்டுப்படியாகாது என்பதை சிறிலங்கா நன்கு அறியும்.

– இளந்தி

Comments