தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் வரையில் மேதகு பிரபாகரன் அவர்களும் தமிழீழ தேசிய கொடியும் நம்மை வழிநடத்தும் -விடுதலைச் சிறுத்தைகள்

ஈழ விடுதலைக்கான ஐந்தாம் போரை சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப யுக்திகளை வகுத்து செயல்பட உலக தமிழர்கள் தயாராக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலை போராட்டம் நெருக்கடியான சிக்கல்கள் நிறைந்த வரலாற்று சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

இச்சூழலில் இவ்விடுதலை போராட்டத்தை வீரியத்தோடு முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும் கடைமையும் உலக தமிழினத்திருக்கு உள்ளது. குறிப்பாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.


புலிக் கொடி

இவாறான சூழல்களில் எதிர்போராட்ட சக்திகளை அடையாளம் காண்பதும் அவர்களின் சதி முயற்சிகளை முறியடிப்பதும் உண்மையான புரட்சிகர சக்திகளின் தார்மீக கடமையாகும்.

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் எதிரிகளும், எதிரிகளுக்கு துணைப்போகும் எதிர்ப்போராட்ட சக்திகளும் தற்போது தலை எடுக்க துணிந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது.

குறிப்பாக, தமிழீழ தேசிய தலைவரையும், தமிழீழ தேசிய கொடியையும் தமிழ் ஈழத்தின் இறையாண்மையும் பின்னுக்குத்தள்ளி, ஈழ விடுதலை போராட்டத்தை வீரியம் இழக்க செய்யும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதையும் அறிய முடிகிறது.

அனைத்து உலக சமுகமே அதிர்ச்சியும் வியப்பும் அடையும் வகையில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வந்துள்ள பெரும் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ஏற்றிவைத்துள்ள விடுதலை பேர் ஒளியை அணைத்துவிட துடிக்கும் சிங்கள இனவெறி சக்திகளுக்கு துணைபோகும் வகையில் இத்தகைய எதிர் போராட்ட சக்திகள் செயல்படுவது தெரிகிறது.

எனவே, எதிரிகளை அடையாளம் கண்டிருப்பதை போல, நமக்குள் ஊடுருவ முயற்சிக்கும் எதிர் போராட்ட சக்திகளையும் நாம் அடையாளம் காணவேண்டும்.

தமிழ் சமுகத்தின் ஒரே வேட்கையான தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் வரையில் மேதகு பிரபாகரன் அவர்களும் தமிழீழ தேசிய கொடியும் நம்மை வழிநடத்தும் சக்திகள் என்பதை உலக தமிழினம் மறந்துவிட கூடாது என்பதை விடுதலை சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

Comments