உரிமையைப் பெற்றுக் கொடுப்போருக்காக வாக்களியுங்கள்.



நல்லூர் வரைக்கும் வந்து விட்ட சிங்களப் பேரினவாதத்தின் ஊழிக்கூத்து

  • "உங்களின் பிள்ளைகள், உறவுகள் புதைக்கப்பட்ட மண்ணில்- அவர்கள் நினைவாக ஒன்று கூடி- அழுவதற்காக, அவர்களின் ஆன்மாக்களோடு உறவாடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்போருக்காக வாக்களியுங்கள். வாக்குகளுக்காக உங்களைத் தேடி வருவோரிடம் இதையெல்லாம் நிறைவேற்றித் தருவீர்களா என்று கேள்வியை எழுப்புங்கள். அத்தகைய உறுதிமொழி தருவோருக்கு வாக்களியுங்கள். இந்தக் கேள்வியை எழுப்பத் தகுந்த தருணம் இதுவே. இதைத் தவற விட்டால் எம் உறவுகளுக்காக மௌனமாக அழுவதைவிட வேறேதையும் செய்யமுடியாது போகும்."

-

தமிழ் மக்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சிங்கள அரசாங்கம் இப்போது தமிழரின் வரலாறுப் பெருமைமிக்க சின்னங்களையும் பாரம்பரியங்களையும் அழிக்கின்ற முயற்சிகளில் இறங்கியுள்ளது. நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அழிக்கப்பட்டது, கற்சிலைமடுவில் இருந்த பண்டாரவன்னியன் நினைவுச்சின்னம் பெயர்க்கப்படடது, மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டமை என்று தமிழருக்கு எதிரான பண்பாட்டு- வரலாறு அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத்தூபி அழிக்கப்பட்டது மட்;டுமன்றி- ஒரே இரவில் அதைப் பெயர்த்துக் கொண்டு போய் குப்பை மேடொன்றில் வீசியிருக்கின்றனர்.

இது சாதாரணமானதொரு நடவடிக்கையல்ல. சிங்களப் பேரினவாதத்தின் ஊழிக்கூத்து தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான நல்லூர் வரைக்கும் வந்துவிட்டதன் வெளிப்பாடு. யாழ்ப்பாண மாநகரசபையின் ஆட்சியை சிங்களப் பேரினவாதத்தின் தந்தையான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதனுடன் கூட்டணி சேர்ந்த ஈபிடிபிக்கும் தாரை வார்த்துக் கொடுத்த யாழ்.நகர மக்களுக்கு அவர்கள் செய்த கைம்மாறு தான் இது. யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரியாமல் இப்படியொரு காரியம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் துணையுடன் கூட இது நடந்திருக்கலாம்.

  • கற்சிலைமடுவில் பண்டாரவன்னியன் நினைவுக்கல் பெயர்த்தெடுக்கப்பட்ட சம்பவமும் இதேபோன்றது தான். பண்டாரவன்னியன் என்ற தமிழ் மன்னனின் வரலாற்றையே அழிக்க முனையும் சதி அது.

  • வடக்கு,கிழக்கு தமிழரின் தாயகம் அல்ல- அங்கு தமிழ் அரசுகள் இருந்ததும் இல்லை என்று நிறுவ இதுபோன்ற அழிப்பு நடவடிக்கைகள் சிங்களப் பேரினவாதிகளுக்குத் தேவைப்படுகின்றன. வன்னியில் உள்ள புலிகளின் நினைவுச்சின்னங்களை அழித்து- புலிகளின் வரலாற்றையே இல்லாமல் செய்வதற்கு முனைவது போன்ற நிலை தான் பண்டாரவன்னியனுக்கும் வந்திருக்கிறது. வன்னியில் சிங்களப் படையினருக்கு நினைவுத்தூபிகளை அமைத்து வரும் சிங்கள அரசு அங்கிருக்கும் புலிகளின் நினைவுத்தூபிகளை பெயர்த்தெடுத்து இருந்த இடமேதெரியாமல் அழித்து வருகிறது. மாவீரர் துயிலுமில்லங்களை சிதைத்து அந்த மண்ணைக் கொண்டு வீதிகளை அமைக்கிறது.

போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயப் படைகள் தமிழர் தாயகத்தில் இருந்த கோவில்களை அழித்தது போன்று இவையும் ஒரு பண்பாட்டு அழிப்பு நடவடிக்கையே. கோவில்களை அழித்து அவற்றின் கற்களை கொண்டு தேவாலயங்களை அமைத்த அந்நியப் படைகளைப் போன்றே சிங்களப்படைகளும் இன்று செய்து கொண்டிருக்கின்றன. தமிழ்வீரர்களின் நினைவிடங்களில் இருந்து பெயர்க்கப்பட்ட மண்ணைக் கொண்டு சிங்களப் படையினருக்கு நினைவுத்தூபிகள் அமைக்கப்படுகின்றன- பௌத்த தேவாலயங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றைவிட சுற்றுலா விடுதிகளும் அமைக்கப்படவுள்ளன.

திலீபனின் நினைவுத்தூபி அழிப்பு நடவடிக்கை சிங்களப் பேரினவாதம் இன்னமும் உச்சக்கட்ட விழிப்பு நிலையிலேயே இருப்பதை உணர்த்துகிறது. இது தமிழ் மக்களுக்குத் தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட மிகப் பெறுமதி வாய்ந்த செய்தி.

  • தென்னிலங்கையில் ஜேவிபி ஒன்றுக்கு இரண்டு முறை ஆயுதக்கிளர்ச்சி செய்து அரசுக்கு எதிராகப் போராடிய அமைப்பு. அதற்காக அவர்களில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போதும் அவர்களால் கொல்லப்பட்ட தமது தலைவர்கள் நினைவாக நிகழ்வுகளை நடத்த முடிகிறது. அவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அமைக்க முடிகிறது. ஆனால் தமிழ் மக்களால் அப்படிச் செய்ய முடியாது என்று கூறுகிறது சிங்களப் பேரினவாதம். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடியவர்களை நினைவு கொள்ள முடியாத நிலை உள்ளது.

மரணித்த வீரர்களுக்காக ஒரு நினைவுத்தூபியைக் கூட வைத்திருக்க முடியாத நிலை காணப்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்திலேயே இந்த நிலை. சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது எந்தளவுக்குக் கோலோச்ச முனைகிறது என்பது இதிலிருந்தே வெளிப்படையாகிறது.

இறந்தோரை வணங்கும் மரபு தமிழருடையது.

ஆனால் அந்த மரபைக் கூடக் கடைப்பிடிக்க முடியாத வகையில் சிங்களப் பேரினவாதம் காடைத்தனங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது.

சிங்கள அரசுடன் இணங்கிப் போகலாம் என்று தமிழ்மக்களுக்கு ஆலோசனை கூறிவோர்- இந்த உரிமையைக் கூட விட்டுக் கொடுக்காதவர்களிடத்தில் இருந்து எதைத் தான் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?

தமிழ் மக்கள் தமது நிலத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை வைப்பதற்குக்குக் கூட உரிமை இல்லாத போது- அடிப்படைச் சுதந்திரத்தை எப்படிப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதே மனிதனின் இயல்பு- மரபு.

அது எதிரியாயினும் நண்பனாயினும் மாறுபாடு இருக்கக் கூடாது என்பதே நாகரீக மனித சமுதாயத்தின் பண்பு. ஆனால் இறந்து போன ஒருவரின் நினைவுத்தூபியைக் கூட விட்டுக் வைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ள சிங்களப் பேரினவாதம் உயிரோடு இருக்கும் தமிழர்களுக்கா உரிமைகளை வழங்கப் போகிறது?

திலீபன் நினைவுத்தூபி அழிக்கப்பட்டடது போன்றே நாளை தமிழரின் வரலாற்றுச் சின்னமான சங்கிலிய மன்னனின் வளைவு, சிலை கூட அழிக்கப்படலாம். ஏன் தமிழர் தாயகத்தில் உள்ள ஏனைய வரலாற்றுச் சின்னங்களைச் சிதைத்து அங்கு பௌத்த வழிபாட்டு சின்னங்களை அமைக்கலாம்.

இவையெல்லாம் காலமாற்றத்தில் நிகழ முடியாதவை என்று யாராலும் உறுதி கூற முடியாது.

ஆனால் அந்தக் கவசத்தை இழந்து நிற்கும் தமிழரிடம் சிங்களப் பேரினவாதம் வாலாட்டிக் கொண்டிருக்கிறது.

ஆங்கிலேய, ஒல்லாந்த, போர்த்துக்கேயப் படைகள் அன்று செய்த அனைத்தையும் இன்று சிங்களப்படைகள் செய்கின்றன.

அன்று கோவில்கள் அழிக்கப்பட்டு தேவாலயங்கள் கட்டப்பட்டன.

இன்று தமிழரின் வரலாற்றையும்- வீரத்தையும் வெளிபடுத்தும் சின்னங்களை அழித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

இப்படிச் சொல்வது ஒன்றும் இனவாதமோ மதவாதமோ அல்ல. மாறாக தேர்தல் நேரத்தில் யாழ்ப்பாண மக்கள் மட்டுமன்றி தமிழ் மக்கள் அனைவருக்குமே விடப்பட்ட சவால் இது.

வாக்குகளுக்காக உங்களைத் தேடி வருவோரிடம் இதையெல்லாம் நிறைவேற்றித் தருவீர்களா என்று கேள்வியை எழுப்புங்கள்.

  • அத்தகைய உறுதிமொழி தருவோருக்கு வாக்களியுங்கள்.

  • இந்தக் கேள்வியை எழுப்பத் தகுந்த தருணம் இதுவே.

இதைத் தவற விட்டால் எம் உறவுகளுக்காக மௌனமாக அழுவதைவிட வேறேதையும் செய்யமுடியாது போகும்.

  • அன்புத் தோழனே!
    அடிமை விலங்கொடிக்க,
    அகிம்சைப்போர்புரிந்த
    "திலீபனே"
    விண்ணிருந்து பார்ப்பேன்
    விடுதலையை என்று சொல்லி
    கண்ணெதிரே சென்றவனே

    விண்ணிருந்து பார்!
    விடுதலையின் சீரழிவை?
    கண்ணெதிரே நடக்கும்
    கொடுமைகளை
    கண்டு மனம் துடிக்கிறது
    கேட்க ஒருவரற்ற இனமாய்
    நாதியற்று நாங்கள்
    நடுத்தெருவில் நிற்கின்றோம்
    நமக்குள் நடக்கும் குத்துவெட்டுச்
    சண்டையெல்லாம்
    காசுக்கும்
    கதிரைக்குமாய் நடக்கிறது

    கரிகாலன் கனவெல்லாம்
    கண்ணெதிரே சிதறடிக்கப்படுகிறது

    நடுத்தெருவில்
    நமது இனம்
    கூறுபோட்ட சிங்களவன்
    கொடுவாள் எடுத்து
    கொடும் செயல் முடித்த கையோடு
    நிலத்தோடு
    நீண்ட நெடுமரமாய்
    ஆண்ட பரம்பரையின் ஆலமரம்
    அடியோடு சாய்ந்து
    முள்ளிவாய்காலில்
    முறிந்துபோனது
    வியாபக விருட்சமே
    வீழ்ந்துபோனது என்று
    ஆனபின்னால்
    அனைவரது கைகளிலும்
    அக்கிரமக் கோல்
    இனத்தை அழித்தவன்
    உன் நினைவையும்
    அழித்தான்.
    கண்ணெதிரே நடப்பவற்றை
    எம்மால்
    கண்டுகொள்ள முடியவில்லை
    கதிகலங்கி நிற்கின்றோம்
    அன்புத்தோழனே
    கல்லறைகள்
    கருத்தரிக்கும் என்றே
    நம்புபவன்.
    ஆண்டுகள் ஆயிரமானாலும்
    அழியாது தாயகக் கனவு.
    அது மூழும்
    என்பிள்ளை பிள்ளையதன் பிள்ளை
    பேரன் பூட்டன் காலத்தில்
    கரிகாலன் கனவு
    நனவாகும்.
    அப்போ
    உன்னோடு நானும்
    உடனிருந்து பார்ப்பேன்,
    விடுதலையை,,.........

அறம் எங்கள் தலைவனாய் உயிர் கொண்டது அன்னைமண் விடுதலைப்பயிர்கண்டது

மாவீரர் - Tamil National Heroes
மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது...

தொல்காப்பியன்

Comments