தமிழீழ மக்களை திசைதிருப்புவதற்கு கண்துடைப்பு நாடகம் நடாத்தும் அனைத்துலக சமூகம்

வன்னிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்றுகுவித்து நரபலி வேட்டையாடிய சிங்கள ஆட்சியாளர்களையும், சிங்கள ஆயுதப் படைகளையும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் காலம் கனிந்து வருவது போன்ற தோற்றப்பாடு அண்மைக் காலமாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.


இதற்கு சிகரம் வைத்தாற்போன்று, சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கான முன்னெடுப்புக்களில் அனைத்துலக சமூகம் ஈடுபட்டு வருவது போன்ற பிரம்மையும் மேற்குலக ஊடகங்களில் தோற்றம்பெறுவதோடு, இதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருவது போன்ற தொனியில் மேற்குலக மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களும் அமைவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான பின்புலத்தில், உண்மையில் சிங்கள ஆட்சியாளர்களையும், ஆயுதப் படைகளையும் தண்டித்து தமிழீழ மக்களுக்கு நீதி வழங்குவதில் அனைத்துலக சமூகம் அக்கறை கொண்டுள்ளதா?

அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் உயிர்ப்புப் பெறுவதைத் தடுப்பதை இலக்காகக் கொண்டு போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் தமிழீழ மக்களை திசைதிருப்புவதற்கு அனைத்துலக சமூகம் முற்படுகின்றதா?

என்ற கேள்விகள் தமிழீழ மக்களிடையே இயல்பாகவே எழுகின்றன. இவற்றுக்கு தர்க்கீக அடிப்படையில் பதிலளிப்பதற்கு இக்கட்டுரை முற்படுகின்றது.

எல்லாப்  பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத்  தண்டித்தது மேற்குலகம். அந்தத்  தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும்  அனுபவிக்கவில்லை- தமிழ்மக்களையே பெரிதும்  பாதித்தது


‘சிறீலங்காவில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள்’ என்ற தலைப்புடன் கடந்த 17ஆம் நாளன்று பன்னாட்டு நெருக்கடிக் குழு (International Crisis Group) என்ற அனைத்துலக அமைப்பினால் கொள்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இக்கொள்கை அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்று அன்றைய நாளில் இலண்டனில் உள்ள ‘சதம் ஹவுஸ்’ (Chatham House) என்ற கொள்கை வகுப்பு மையத்தில் இடம்பெற்றதோடு, அதில் பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் தற்போதைய தலைவரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க்குற்றங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் தொனிப்பொருளாக அமைந்திருந்தது. இதன்பொழுது லூயிஸ் ஆர்பர் அம்மையார் வெளியிட்ட ஏனைய கருத்துக்களும், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் – பரிமாறப்பட்ட கருத்துக்களும் ஊடகங்களில் வெளியிடப்படுவதை ‘சதம் ஹவுஸ்’ அமைப்பின் விதிகள் கட்டுப்படுத்துவதால், அவை தொடர்பான விளக்கங்களை மேற்கொண்டு தெரிவிக்க முடியாத நிர்ப்பந்தம் இக்கட்டுரைக்கு ஏற்படுகின்றது.

‘சதம் ஹவுஸ்’ அமைப்பின் விதிகளுக்கு இக்கட்டுரை மதிப்பளிக்கும் அதேவேளை, லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் வாதங்களுக்கு மூலாதாரமாக பன்னாட்டு நெருக்கடிக் குழு வெளியிட்ட அறிக்கை அமைவதால், அவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையின் கருத்துவம் வடிவமைக்கப்படுகின்றது.


பன்னாட்டு நெருக்கடிக் குழு வெளியிட்ட அறிக்கையை நாம் நுணுகி ஆராயும் பொழுது, அதன் குறிக்கோள் என்பது சிறீலங்கா அரசாங்கத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தித் தமிழீழ மக்களுக்கு நீதிவழங்குவதை விட, மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் தோற்றம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவதே அதன் மையப்பொருளாக அமைவதை அவதானிக்க முடிகின்றது.

முதலாவதாக, வன்னிப் போரில் திட்டமிட்ட வகையில் மக்களின் வாழ்விடங்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மனிதநேயப் பணிகளை இலக்காகக் கொண்டும் பீரங்கிக் கணை வீச்சுக்களை நிகழ்த்தி, பல்லாயிரக்கணக்கில் தமிழீழ மக்களை சிறீலங்கா அரசாங்கமும், அதன் ஆயுதப் படைகளும் கொன்றுகுவித்திருப்பதை பன்னாட்டு நெருக்கடிக் குழு ஒப்புக்கொள்கின்றது. இதற்கான சான்றுகள் தம்வசம் இருப்பதையும், இவற்றின் அடிப்படையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போர்க்குற்ற ஆய்வுகளை (இங்கே கவனிக்க வேண்டியது போர்க்குற்ற விசாரணை அல்ல: போர்க்குற்ற ஆய்வு என்பதே) நிகழ்த்த முடியும் என்றும் பன்னாட்டு நெருக்கடிக் குழு விதந்துரைக்கின்றது.

அதேநேரத்தில் மக்களைத் திட்டமிட்ட வகையில் சுட்டுக்கொன்றமை, மக்களைக் களப்பணிகளில் பலவந்தமாக ஈடுபடுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தும் பன்னாட்டு நெருக்கடிக் குழு, இது தொடர்பாக தம்மிடமுள்ள சான்றுகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்குற்ற ஆய்வுகளை நிகழ்த்த முடியும் என்றும் குறிப்பிடுகின்றது. வன்னிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளும், பொறுப்பாளர்களும் களப்பலியாகிய நிலையில், எஞ்சியிருக்கக்கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்தமட்ட உறுப்பினர்கள் மீது போர்க்குற்ற ஆய்வுகளைத் தொடுக்க முடியும் என்றும் தனது அறிக்கையில் பன்னாட்டு நெருக்கடிக் குழு வலியுறுத்துகின்றது.

அதாவது, சிறீலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்று கூறுவதன் ஊடாக, சிறீலங்கா அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றப் பழியை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமன்படுத்துவதற்கு பன்னாட்டு நெருக்கடிக் குழு முற்படுகின்றது. இதில் நாம் ஒரு விடயத்தை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். அதாவது, பன்னாட்டு நெருக்கடிக் குழு என்பது ஒரு சாதாரண அமைப்பு அல்ல. அதன் தலைவராக விளங்கும் லூயிஸ் ஆர்பர் அம்மையார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஆணையாளராக மட்டுமன்றி, கனடிய உச்சநீதிமன்றத்தின் நீதியாளராகவும், யூகொஸ்லாவியா, றுவாண்டா போன்ற நாடுகள் தொடர்பான பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைகளில் முதன்மை குற்றவியல் விசாரணை வழக்கறிஞராகவும் விளங்கியவர்.

இதேபோன்று பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் முக்கிய பொறுப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் வெளியுறவு ஆணையாளரும், பிரித்தானிய அவைநிலை அமைச்சரும், ஹொங்கொங் தேசத்தின் ஆளுநருமான கிறிஸ் பற்றேன் பிரபு, ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் முன்னாள் பிரதியமைச்சர் றிச்சார்ட் ஆமிற்ரேட்ஜ் ஆகியோர் போன்ற பல்வேறு பன்னாட்டு பிரமுகர்களும் அங்கம் வகிக்கின்றனர். இந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் தொடர்பான மேற்குலக அரசுகளின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு கொள்கை வகுப்பு அமைப்பாகவே பன்னாட்டு நெருக்கடிக் குழுவை நாம் கருத முடியும்.

அடுத்தபடியாக, வன்னிப் போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிகழ்த்துவது சாத்தியமில்லை என்று பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை குறிப்பிடுகின்றது. மாறாக, ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றையே நிகழ்த்த முடியும் என்றும் தனது அறிக்கையில் பன்னாட்டு நெருக்கடிக் குழு தெளிவாகக் குறிப்பிடுகின்றது. அது வருமாறு:

‘‘சிறீலங்கா படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இழைத்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டோருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது என்பது குறுகியகால நோக்கில் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகளையே கொண்டுள்ளது. நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்க தரப்புக்கள் சிறிய அளவிலான அக்கறையை மட்டுமே கொண்டிருப்பதோடு, இதுவிடயத்தில் அனைத்துலக – வெளிநாட்டு அதிகாரத் தரப்புக்கள் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன. எனினும்… ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைபெற்ற பன்னாட்டு ஆய்வு ஒன்றை முன்னெடுப்பது எதிர்காலத்தில் காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான பயனுள்ள வழிகளில் ஒன்றாக இருக்கும்…

…சிறீலங்காவில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் வகிக்கக்கூடிய பாத்திரம் என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே. ரோம் சட்ட உடன்படிக்கையின் தரப்பாக சிறீலங்கா திகழாத நிலையில் – அது தொடர்பான தனது நிலைப்பாட்டை சிறீலங்கா மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அற்ற நிலையில் – சிறீலங்கா பாதுகாப்புப் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரையுடனேயே முன்னெடுக்க முடியும். ரசியா, சீனா போன்ற நிரந்தர உறுப்புரிமையுடைய நாடுகளின் ஆதரவை சிறீலங்கா கொண்டிருக்கும் வரை, பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரையைப் பெறுவது கடினமானதே..’’

இவ்வாறு தனது கொள்கை அறிக்கையில் பன்னாட்டு நெருக்கடிக் குழு குறிப்பிடும் அதேவேளை, சிறீலங்கா அரசாங்கத்தின் அல்லது அதன் ஆயுதப் படைகளின் பிரமுகர்கள் வதிவிட உரிமை பெற்றிருக்கக்கூடிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தொடர்பான குற்றவியல் – அல்லது குடியியல் வழக்குகளை தாக்கல் செய்ய முடியும் என்றும் சுட்டிக் காட்டுகின்றது. இதனை விட போர்க்குற்ற ஆய்வுக்கு சிறீலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அதன் மீது தெரிவுசெய்யப்பட்ட தடைகளையும், கட்டுப்பாடுகளையும் அனைத்துலக சமூகம் விதிக்க வேண்டும் என்றும் பன்னாட்டு நெருக்கடிக் குழு வலியுறுத்துகின்றது.

ஒருபுறம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை மேற்குலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் பன்னாட்டு நெருக்கடிக் குழு, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அகதித் தஞ்சம்கோரும் நாடுகளில் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகப் போர்க்குற்ற வழக்குகள் தொடரப்பட வேண்டும் என்ற கருத்தையும் ஆணித்தரமாக முன்வைக்கின்றது.

இவ்வாறாக தனது கொள்கை அறிக்கையை நீட்டிச் செல்லும் பன்னாட்டு நெருக்கடிக் குழு, இவ்வாறான போர்க்குற்ற ஆய்வை நிகழ்த்துவதன் ஊடாகவே மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதக் கிளர்ச்சியாகத் தோற்றம் பெறுவதைத் தடுக்க முடியும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றது:

‘‘தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையும், அதனால் தமிழ் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அவமானமும், மீண்டும் வன்முறைகள் உயிரூட்டம் பெறுவதற்கான புறச்சூழலை தோற்றுவிப்பதற்கான வாய்ப்புக்களை கொண்டிருப்பது தொடர்பாக அனைத்துலக சமூகம் கவலைகொள்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. இலங்கைப் பிரச்சினையின் பல அடிப்படைக் காரணிகளுக்கு இதுவரை தீர்வுகாணப்படாதிருப்பதோடு, எதிர்ப்புணர்ச்சி எழுவதற்கான சில மூலங்களும் தற்பொழுது வெளிப்பட்டு வருகின்றன. மீண்டும் வன்முறைக் கிளர்ச்சி தோற்றம் பெறும்பொழுது அதனை நசுக்குவதற்கான வலிமையையும், ஆற்றலையும் சிறீலங்கா பாதுகாப்பு இயந்திரம் கொண்டுள்ள பொழுதும், நியாயபூர்வமான அபிலாசைகளுக்கு தீர்வு காணப்படும் வரை இவ்வாறான கிளர்ச்சிகளை நிரந்தரமாக முறியடிக்க முடியாது…

…தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை பலரை அதிர்ச்சிக்கும், வழிகாட்டல் அற்ற நிலைக்கும் இட்டுச்சென்றுள்ளது; இதனால் எழுந்துள்ள கடும் சீற்றமும், அவமான உணர்ச்சியும் வன்முறைகளைப் புதுப்பிப்பதற்கான ஆதரவுச்சூழலுக்கு இட்டுச்செல்லுமா என்பது தெளிவற்றதாகவே உள்ளது. எனினும் இவ்வாறான நிலை தோன்றினால், புதிய கிளர்ச்சியை முன்னெடுப்பதற்கும், அதற்கான நிதியை வழங்குவதற்கு புகலிடத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள ஒரு தொகுதியினரே போதும்.’’

அதாவது, மீண்டும் ஆயுதப் போராட்டம் தலைதூக்குவது தடுத்துநிறுத்தப்பட வேண்டும் என்பதே பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் கருத்தாக அமைகின்றது. இதற்கான வழிகளில் ஒன்றாகவே போர்க்குற்ற ஆய்வை பன்னாட்டு நெருக்கடிக் குழு அணுகுகின்றது.

ஒரு அரசுசாரா அமைப்பாக பன்னாட்டு நெருக்கடிக் குழு விளங்கினாலும், அதன் நிதிமூலம் என்பது மேற்குலக அரசுகளிலும், மேற்குலக அரசுகளில் செல்வாக்குடைய தனவந்தர்களிலுமே தங்கியிருப்பதை அதன் கணக்கறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வகையில், பன்னாட்டு அரசியலில் முதன்மை இராசதந்திரகளாக விளங்கியோரை அங்கத்தவர்களாகக் கொண்ட இந்த அமைப்பை, மேற்குலகின் மறுமுகமாகவும் கருத முடியும். இதன்மூலம் ஈழப்பிரச்சினையில் மேற்குலக சமூகம் தற்பொழுது கொண்டுள்ள நிலைப்பாட்டையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

அதாவது சிங்கள ஆட்சியாளர்களையும், சிங்கள ஆயுதப் படைகளையும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளிகளாக முன்னிறுத்தி தமிழீழ மக்களுக்கு நீதிவழங்குவதை விட, ஐக்கிய நாடுகளின் ஏற்பாட்டில் போர்க்குற்ற ஆய்வு ஒன்றை நிகழ்த்தி, அதன் ஊடாக தமிழீழ மக்களை ஓரளவுக்கு திருப்திப்படுத்தியும், தமிழீழ மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியும், ஈற்றில் தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுவதற்கு தமிழீழ மக்களை நிர்ப்பந்திப்பதுமே வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சிநிரலாக அமைவதையே பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை புலப்படுத்துகின்றது.

இதன் மறுபக்கத்தை நாம் புரட்டிப் பார்த்தால், தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சி பெறுவதைத் தடுப்பதற்கும், தமிழீழத் தனியரசுக் கோரிக்கையை மழுங்கடிப்பதற்குமான கருவியாகவே ‘போர்க்குற்ற விசாரணை’ என்ற போர்வையில் ‘போர்க்குற்ற ஆய்வு’ என்ற ஆயுதத்தை வல்லாதிக்க சக்திகள் கையிலெடுத்திருப்பது வெள்ளிடைமலையாகப் புலப்படும்.

எது எவ்வாறிருப்பினும், வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சிநிரல்களுக்குள் சிக்கிக்கொள்ளாது, சிங்கள அரசையும், அதன் ஆயுதப் படைகளையும், உலக அரங்கில் நீதியின் முன்னிறுத்தித் தண்டிப்பதும், தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான அனைத்துலக அங்கீகாரத்தை வென்றெடுப்பதுமே இன்று ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கு எதிர்நோக்கும் மிகப்பெரும் சவாலாகும். இந்தச் சவாலை தமிழீழ தேசம் எதிர்கொண்டு வெற்றிகொள்வது என்பது ஆக்கபூர்வமாகவும், காத்திரமான முறையிலும் தமது அரசியல் – பரப்புரைப் பணிகளை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் முன்னெடுத்துச் செல்வதிலேயே தங்கியுள்ளது.

-சேரமான்

நன்றி: ஈழமுரசு

Comments