கே.பி மாமாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்: நீங்கள் நல்லவரா – கெட்டவரா??? (பாகம் - 3)

ஹாய் கே.பி மாமா,

உங்களுக்கு நான் எழுதும் கடிதம் குரங்கு வால் போல நீண்டு செல்வதை நிறுத்த வேண்டிய தேவை உண்டு.


எனினும் சிறீலங்காவின் பேரினவாத ஊடகம் ஒன்றிற்கு தமிழின விரோதிகளின் உதவியுடன் நீங்கள் வழங்கிய நேர்காணலில் உள்ள பொய்கள் குறித்து பல தரப்பில் இருந்தும் மறுப்புக்கள் கிளம்பிவருவது உங்களையும், கற்பனை கதை எழுதும் உங்களின் பிரத்தியோக ஊடகவியலாளரையும் அச்சமடைய வைத்திருக்கலாம்.

இருந்தபோதும், உங்களிக் கைது ஒரு காட்டிக்கொடுப்பு எனவும், சிறீலங்கா அரசுடன் இணைந்து நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை மூலம் தான் தமிழ் மக்கள் வாழமுடியும் என்றும் தமது கைகளில் அகப்பட்டுள்ள இயக்கத்தின் சொத்துக்களை மகிந்தாவின் காலடியில் போட்டு வெள்ளைப் பணமாக்க பல புலம்பெயர் மேதாவிகள் முயன்று வருகின்றனர்.

நியாய, அநியாயங்கள் எவை என தெரிந்தும், தெரியாதது போல கண்ணை மூடிக்கொண்டு உங்களை ஆதரிப்பவர்களிடம் சில கேள்விகளை கேட்பதுடன் இந்த மடலை சுருக்கிக் கொள்வது நல்லது.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவுபெறும் வரை பல முகங்களில், பல கடவுச்சீட்டுக்களில், பல நாடுகளில் தலைமறைவாக இருந்த நீங்கள், போர் நிறைவுபெற்றதாக சிறீலங்கா அரசு அறிவித்த பின்னர், புலம்பெயர் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசின் கவனம் திரும்பிய போது, நீங்கள் மட்டும், இலாவகமாக, படு உல்லாசமாக, மலேசியாவில் உள்ள நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியதன் மர்மம் என்ன?

மலேசியாவில் உள்ள விடுதியில் உங்களை யாரும் சந்திக்கலாம் என்பது மட்டுமல்ல, எல்லோரையும் தொலைபேசியில் நீங்கள் தொடர்புகொண்டு அழைத்ததும் நாம் அறிந்ததே. ஏன் உங்களின் தொடுப்பு ஒன்று என்னை கூட அழைத்திருந்தது.

இவ்வாறு ஆடம்பரமாக விடுதியில் வெளிப்படையாக தங்கியிருந்த உங்களை காட்டிக் கொடுப்பதற்கு ஏன் மாமா சிறீலங்கா அரசுக்கு ஆட்கள் தேவை?

ஆனால் நீங்கள் மலேசியாவில் தங்கியிருந்ததன் காரணம் வேறு. விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக உங்களை பிரகடனப்படுத்திய நீங்கள், புதிய அரசியல் திட்டம் தொடர்பிலும் பேசி வந்தீர்கள். அதன் நோக்கம் தெளிவானது, அதாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழவிடுதலைக்கு ஆதரவான அத்தனை தமிழ் பிரதிநிதிகளையும் மாநாடு என்ற போர்வையில் அங்கு வரவைத்து ஒட்டுமொத்தமாக சிறீலங்காவுக்கு அள்ளிக்கொண்டு போகவே நீங்கள் திட்டமிட்டிருந்தீர்கள்.

ஆனால் உங்களின் இந்த திட்டத்தை குங்குமத்தின் ஆட்கள் கண்டறிந்ததால், ஏற்பட்ட பிளவில் குழம்பிய நீங்கள், அதன் பின்னர் உங்களை சந்திக்க வந்தவர்களை சந்தேகக் கண்ணுடனே பார்த்ததுடன், தப்பி ஓடவேண்டிய நிலையும் ஏற்பட்டது என்பதே உண்மை.

எனவே போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க சிறீலங்கா அரசு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று குவித்திருந்த சமயத்தில், இன்ரபோல் காவல்துறையினரால் தேடப்படும் நீங்கள் மலேசியாவில் உள்ள ஆடம்பரவிடுதியில் தங்கியிருந்ததும், உங்களை யாரோ காட்டிக் கொடுத்ததாகவும் கூறுவது, “கேக்கிறவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏயர் பஸ் -380 ஓடுமாம்” என்பது போல் உள்ளது.

சரி அவ்வாறு கைது செய்யப்பட்டாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய இரகசியங்கள் தெரிந்தவர்கள் உயிருடன் சரணடைவது வரலாறு அல்ல. உங்களிடம் குப்பி இல்லை என கூறலாம், ஆனால் இயக்கத்தின் இரகசியங்கள் தெரியக்கூடாது, இயக்கத்தின் சொத்துக்கள் எதிரியின் கைகளில் சிக்கக்கூடாது என்பதற்காக வைத்தியசலை கட்டில் சட்டத்தில் தலையை மோதி உயிர்விட்ட வரலாறும் விடுதலைக்கு பேராடிய வேங்கைகளுக்கு உண்டு.

மாமா, சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் என உங்களுக்கு பல்லாக்கு தூக்கும் ஒரு குழு தெரிவித்து வருகின்றது. சரி அது தான் உண்மை என்றால், அதற்கு ஏன் மாமா நீங்கள் புதிதாக சிரமப்படவேண்டும்??

அதனை தானே கடந்த 20 வருடங்களாக டக்ளஸ் தேவனந்தாவும், சில வருடங்களாக கருணாவும், பிள்ளையானும் செய்து வருகின்றனர். மகிந்தாவின் காலை நக்குவது என தீர்மானித்த பின்னர் உங்களுக்குள் ஏன் மாமா மோதல்?

உங்களை சூழ்நிலைக் கைதி என்றும் சிலர் தெரிவிக்கின்றனர், அதற்கான விளக்கம் என்ன என்பதை எம்மால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் சிறீலங்கா அரசு வழங்கும் உல்லாசங்களை அனுபவிப்பது தான் சூழ்நிலைக்கைதிகளின் கடமை என்பது தான் அதன் விளக்கமானால், தேவானந்தாவையும், கருணாவையும் நாம் சூழ்நிலைக் கைதிகளாக கருதலாமா?

சரணடைந்த 11,000 போராளிகளும் ஏன் சூழ்நிலைக்கைதிகளாக மாறவில்லை? அவர்களுக்கு ஏன் கொமோண்டோ பாதுகாப்பு வழங்கப்படவில்லை? மாறாக தினம் தினம் அவர்கள் ஏன் படுகொலை செய்யப்படுகின்றனர்?

அடுத்த வாரம் முற்றுப்பெறும்.

நன்றி:ஈழம்செய்திகள்

Comments