தமிழக அரசியல் களத்தில் அனாதையாக்கப்பட்டுள்ள வை.கோ. - என்ன செய்ய வேண்டும்....?

தமிழக அரசியல் அரங்கில் தமிழ்த் தேசிய தளத்தில் வலுவாக இருந்துவரும் அண்ணன் வை.கோ. அவர்களது இன்றைய நிலை உலகத் தமிழர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் அ.தி.மு.க. தலைமை மீது கட்டற்ற பகைமையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான உரிமையினை சனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனையடுத்து கூட்டணி அமைப்பதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் பலத்த இழுபறிகள் நீடித்த நிலையில் காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட பல கட்சிகளை உள்ளடக்கி தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. கூடாரத்தில் இன்னும் குழப்பம் தீரவில்லை.

நேற்று வந்த விஜயகாந்திற்கு 41 தொகுதிகள் உள்ளிட்ட லெட்டர்பாட் கட்சிகளுக்கு தொகுதிகளை முன்னுரிமை கொடுத்து ஒதுக்கிய அ.தி.மு.க. தலைமை தமிழ் உணர்வாளரான வை.கோ. மற்றும் இடதுசாரிகள் கட்சிகளுக்கு துரோகமிழைத்தது.

ஒருவாறு இடது சாரிகள் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் வை.கோ. தனித்து அனாதையாக விடப்பட்டமை உலகத் தமிழர்களை ஆதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு ம.தி.மு.க. வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை சற்று சிந்திக்க வேண்டி உள்ளது.

இன்னும் சிறிய நாட்களே உள்ளநிலையில் வெளியேறி தனித்து நிற்பதோ அல்லது பாரதிய சனதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதோ ஆரோக்கியமானதாக இருக்கப் போவதில்லை. அ.தி.மு.க. தலைமையின் இந்த போக்கு தன்மானத்தை கேள்விக்குள்ளாக்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

வெளியேறிப்போவதனால் கூட்டணியை விட்டு புலி ஆதரவு சக்தி வெளியேறிப் போக வேண்டும் என காய்நகர்த்தி சகுனிவேலை பார்க்கும் "சோ" போன்றவர்களின் எண்ணத்தை ஈடேற்றுவதாக அல்லவா அமைந்துவிடும்.

இந்திய தேசிய அளவில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினையும் பகிரங்கமாக துணிந்து ஆதரித்துவரும் ஒரே சக்தி அண்ணன் வைக்கோ தான். நாளை தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் சேர்ந்து பயணிக்க வேண்டியதாயிருக்கும். அதனால் வை.கோ கூட்டணியில் இருந்தால் நெருடலாக இருக்கும் என கணக்குப் போட்டே "சோ" என்ற சகுனி ஜெயலலிதாவை பயன்படுத்தி வெளியேற்ற போட்டுள்ள திட்டத்தை நாமே நிறைவேற்றுவதாக அல்லவா இருக்கும்.

அ.தி.மு.க. கூட்டணியில் கொடுக்கும் தொகுதியை பெற்று அந்த தொகுதிகளில் மாத்திரம் மட்டுப்படுத்திய அளவில் பிரச்சாரங்களை செய்து கூடியவரை அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு முயற்சி எடுப்பதே இன்றைய தமிழக அரசியல் சூழலைப் பொறுத்தவரை ஆரோக்கியமானதாக இருக்கும்.

தமிழக சட்டமன்றத்தில் நாம் பெரும் எண்ணிக்கையில் போகமுடியாது என்பது வருத்தம்தான் இருந்தாலும் தமிழ்தேசிய மீட்சியையும் தமிழீழ விடுதலையையும் நெஞ்சத்தில் சுமந்த சிலராவது சட்டமன்றம் சென்று தேசியக் கடமையாற்ற இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!?

தன்மானம் பெரிதுதான். அதிலும் இனமானம் பெரிது. எம்மை நம்பவைத்து கழுத்தறுக்க நினைத்த சகுனிகள் மத்தியில் நின்று களமாடி குறைந்தபட்ச சட்டமன்ற பலத்தை பெறுவதே அதிமுக்கியமாகும். இதனையே உலகத் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.

உலகத்தமிழர்களது எண்ணத்தையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 19ம்திகதி தமிழக தாயகத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்ட செயற்குழுவில் இன மானம் காக்கும் முடிவை எடுப்பார்கள் என நம்பிக்ககையுடன் காத்திருக்கின்றோம்.

Comments