இலங்கை அரசு தனது சதி வலையமைப்பு ஊடாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஈழத் தமிழர் மீது ஊடறுப்பு போர்….!

பல முதுபெரும் பல தலைவர்கள் தமிழருக்கு சம ஆட்சி அரசு தேவையில்லை சிங்களவரும் தமிழரும் சகோதரர்களாக எப்பொழுதும் இருக்கலாம் என்று தமிழின விரோத அரசியலை நடத்தினார்கள். தந்தை செல்வாவின் பல அறவழிப் போராட்டங்களை ஒடுக்க பல தமிழ் தலைவர்களை இலங்கை அன்று உருவாக்கியது. இராணுவத் தீர்வே தமிழீழத்தை பெற்றுத்தரும் என்ற கொள்கையுடன் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்குள் பல முரண்பாடுகள். ஒவ்வொரு இயங்கங்களும் நான் பெரிதா நீ பெரிதா என்ற அடிப்படையில் எதிரியின் சூழ்ச்சியில் வீழ்ந்து

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தினார்கள். பின்னாளில் பல எட்டப்பர்கள் உருவானார்கள்.

தமிழீழ விடுதலையைப் பெற்றெடுக்கக்கூடிய ஒரே விடுதலை அமைப்பாக விடுதலைப் புலிகள் வளர்ந்ததும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராளிக்குழுக்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தமிழீழ பகுதிகளில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கி தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எதிராக பல அட்டூழியங்களை செய்தார்கள் செய்துகொண்டும் இருக்கின்றார்கள். இவைகளே தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு என்றால் மிகையாகாது. இப்படியாக சாத்வீக மற்றும் ஆயுத வழிப்போரட்டங்களுக்கு எதிராக ஈழத் தமிழர்களையே பாவித்து அவர்களின் போராட்டங்களை மழுங்கடித்தார்கள். இவ்வளவு சம்பவங்களுக்கும் பிறகும் திருந்தாமல் இன்னும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் வேலைகளை தமிழரில் சிலர் ஈடுபடுவதானது தமிழருக்கு விழுந்த சாபம் என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்நாட்டில் மங்கியிருக்கும் ஈழ விடுதலை மூச்சை புலம்பெயர் தமிழர் சுவாசம் கொடுத்து ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு உத்வேகம் கொடுத்துவிடுவார்கள் என்ற பயத்தில் இலங்கை அரசு தனது அனைத்து வளங்களையும் ஒன்றிணைத்து புலம்பெயர் தமிழர் மீது வலிந்த போரைத் தொடுத்திருக்கின்றது என்பது தான் உண்மை. இதற்கு தேவைப்படுவது என்னவென்றால் புலம்பெயர் தமிழருக்குள் இருக்கும் சமூக மற்றும் வணிக முன்னோடிகளை தம் வசப்படுத்தி அவர்கள் மூலமாக தான் நினைத்ததை செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியுள்ளது இலங்கை அரசு. இவர்களை தம் வசப்படுத்துவதானால் பல அனுகூலங்கள் இலங்கைக்கு கிடைக்கும்.

குறிப்பாக புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் அரசியல் மற்றும் இராசதந்திர அழுத்தங்கள் ஊடாக தமிழருக்கு எதிராக யுத்தம் புரிந்து கொலை மற்றும் பல மனிதவுரிமை மீறல்களுக்காக தண்டனையை சிங்களத் தலைவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதனை இல்லாதொழிக்க ஒரே வழி புலம்பெயர் தமிழருக்குள் பிரிவை உண்டுபண்ணலாம் என்று இலங்கை கருதுகின்றது. அத்துடன் ஈழக் கோரிக்கையை தமிழர்கள் மறந்துவிட்டார்கள் என்று உலக அரங்கில் பிரச்சாரப்படுத்தலாம் மற்றும் உலக நாடுகளுடன் இருந்து தமிழரின் மறுவாழ்வுக்காக பணத்தை வாங்கி தாம் கொள்ளையடிக்கலாம் என்ற நோக்குடன் களம் இறங்கியுள்ளது இலங்கை.

கருணா, டக்ளஸ், சித்தாத்தன், மாத்தையா மற்றும் கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் போன்றவர்களினால் மட்டும் வளர்த்தெடுக்கப்பட்டதல்ல

ஈழ விடுதலைப் போராட்டம். ஈழ விடுதலைப் போராட்டம் பல பரிமாணங்களைக் கொண்டது. அதனை தமிழர்கள் உணர்ந்து செயல்பட்டால் ஈழ விடுதலை வெகுசீக்கிரமே உருவாகும். ஆனால் இலங்கை அரசு கே. பியை கருவியாக பாவித்து புலம்பெயர் தமிழரை தம் வசப்படுத்திவிட வேண்டும் என்ற வேள்வியுடன் களம் இறங்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து சிலர் இலங்கை சென்று ஜனாதிபதியை சந்தித்து காசோலையையும் கொடுத்து தமிழரை காப்பாற்றச் சொல்லிவிட்டு நாடு திரும்பினார்கள்.

இதன் பின்னர் ஏற்பட்ட கசப்பான பல சம்பவங்கள் இலங்கையின் பிரித்தாளும் தந்திரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது. இதன் பின்னர், கே. பி ஊடாக ஒன்பது புலம் பெயர் தமிழரை இலங்கைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து அனுப்பியுள்ளது இலங்கை அரசு. இக்குழு ஆறு நாடுகளில் இருந்து இலங்கை சென்றது.


இக்குழுவினர்களின் சந்திப்புக்கான ஒழுங்குகளை கே.பியே செய்ததாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியின் பாசமிகு சகோதரருமான கோதபாய ராஜபக்ச பிரித்தானிய வானொலிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் கே.பியை இலங்கை படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, இலங்கை சென்று திரும்பியவர்களில் ஒருவரான மருத்துவர் அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.


தான் தனிப்பிட்ட முடிவில் கொழும்பு சென்று பிரித்தானிய திரும்பியுள்ளதாக கூறியிருக்கும் மருத்துவர் அருட்குமார் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவென கே.பியின் ஏற்பாட்டில் ஜூன் 14 ஆம் நாள் விஜயம் செய்த இந்த குழுவினர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களுக்குச் சென்றதுடன், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச, ஈழத்தில் பல அட்டூழியங்களுக்கு பொறுப்பானவரும் கருணாவை புலிகளிடம் இருந்து பிரிக்க முக்கிய பொறுப்பை வகித்த நீண்ட காலம் இலங்கை படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்திருந்தனர். இவர்கள் ஜூன் 20 வரை தங்கியிருந்து மேலும் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகத் தகவல்.

சந்திப்பு நடைபெற்ற இடத்திற்கு கோதபாய வந்தபொழுது கே.பி அவரைக் கட்டித்தழுவ முற்பட்டதாகவும், அவரது இந்த நடவடிக்கை தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறும் அருட்குமார், விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்ட பிரிவு – 4 முகாமைப் பார்வையிட அனுமதி மறுத்த படையினர், பிரிவு இரண்டாவது முகாமிற்கு தம்மை அழைத்துச் சென்றதாகவும், அங்கும் படைப் புலனாய்வாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டவர்களே முன்னாள் போராளிகள் போன்று தம்மை சந்திக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆணவத்துடன் கோதபாய தம்முடன் உரையாடியதாகக் கூறும் மருத்துவர் அருட்குமார், வரலாற்றைப் பற்றி யாரும் பேசக்கூடாது எனவும், அரசு செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மட்டும் நல்க வேண்டும் என, அடிமை போன்று நடத்த முற்பட்டதாகவும், புலம்பெயர் மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

புலம்பெயர் மக்களை கே.பி ஊடாக உள்வாங்க முனைவது, அல்லது புலம்பெயர் தமிழ் மக்களை பிரிவுகளாக உடைத்து சின்னா பின்னமாக்கி மன்டியிட வைப்பது என்பதில் இலங்கை அரசும், படைப் புலனாய்வாளர்களும் திட்டமிட்டிருப்பதை தமது சந்திப்புக்களில் உணர முடிந்ததாக கூறும் மருத்துவர் அருட்குமார், கே.பியை 2006ஆம் ஆண்டே தான் சந்தித்திருப்பதாக கோதபாய கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வளங்களை இந்தியா சுரண்டுவதாக இந்த சந்திப்புக்களில் குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா அரச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசியதாகவும், தமிழர் புனர்வாழ்வு மையம் (ரி.ஆர்.சி) என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, அதனூடாக புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருட்குமார் கூறினார். இதிலிருந்து புலம்பெயர் தமிழர் கற்க வேண்டிய பாடம் பல. அருட்குமார் தனது வலியை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்.

பிரித்தானியாவை சேர்ந்த சார்ல்ஸ் அன்டனிதாஸ் அறிக்கை வாயிலாக கூறும்பொழுது தாம் எந்த அரசியல் நோக்கத்துடனும் இந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை எனவும் இந்த சந்திப்பு முழுக்க முழுக்க மனிதநேய நோக்குடனையே இடம்பெற்றதாக கூறும் இவர் தாம் பல வாக்குறுதிகளை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுள்ளதாக கூறியிருப்பது நகைப்புக்குள்ளானவையாகவே பார்க்கப்படுகின்றது. காரணம் இலங்கை அரசு பல வாக்குறுதிகளை பல காலமாக கொடுத்துக்கொண்டு தான் வருகின்றது. இவைகளில் ஒரு வாக்கையேனும் இன்றுவரை இலங்கை அரசுகளினால் காப்பாற்ற முடியவில்லை.


சார்லஸ் என்ன ஒன்றுமறியா பச்சைப் பிள்ளையா? இவருக்கு பல காலமாக கே. பியை தெரியும். கே. பிக்கு கோதபாய மற்றும் மகிந்த போன்ற அரச பயங்கரவாதிகளைத் தெரியும். அப்படியிருக்க இவர் கூறும் கூற்றுக்கள் நகைப்பாக உள்ளது. எதுவாயினும் இவர் போன்றவர்கள் கூறும் சமாதானத்தை புலம்பெயர் தமிழர் உள்வாங்கி தம்மை பாதுகாக்க மற்றும் ஈழ விடுதலைக் கனலை அணையாமல் வைத்திருக்க பொறுப்பு புலம்பெயர் தமிழர் உள்ளிட்ட உலகத் தமிழரிடம் தான் உள்ளது.

நெருடல் இணையம்

Comments