திரு.வி.ருத்திரகுமாரன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முறைமையைக் கைவிட்டு ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார் - ஜெயானந்தமூர்த்தி

நாடுகடந்த தமிழீழ அரசில் ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்குக் காரணமாக தமிழ் தேசியத்தின் சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அதைவிட்டு வெளியேறவேண்டிய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இயங்குவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடுகடந்த அரசின் பிரித்தானிய பிரதிநிதியும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

நாடுகடந்த அரசின் இரண்டாவது அமர்வு தொடர்பாகவும் அங்கு ஏற்பட்ட குழப்பநிலைமை காரணமாகவும் எஸ்.ஜெயானந்தமூர்த்தியிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதென்றால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதால் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தோம் அதன் மூலம் தமிழ் தேசியத்தின் சார்பாக நாங்கள் அதினமானோர் தெரிவு செய்யபட்டிருந்தோம்.

அதிலும் நான் பிரித்தானியாவில் மாத்திரமின்றி அனைத்து நாடுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தேன். எனினும் நாம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற நிலையில் நாம் தொடர்ந்து செயற்பட்டிருந்தோம்.

ஆனால் ஆரம்பம் முதலே நாடுகடந்த அரசின் உருவாக்கத்தில் இருந்தவர்களும் அதன் இடைக்கால நிறைவேற்றுனரும் மறைமுகத் திட்டங்களுடன் செயற்பட்டு வந்ததுடன் தேசியத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்களை திட்டமிட்டு ஓரங்கட்டி செயற்படத் தொடங்கியிருந்தனர். ஆனால் மாறாக தாங்கள் வெளிப்படையாகவும் ஒற்றுமையாகவும் இயங்குவதாக மக்களுக்குத் தெரிவித்து வந்தனர்.

இது மாத்திரமின்றி சில சக்திகளின் பின்னணியில் இந்த நாடுகடந்த அரசு உருவாகி இருந்ததையும் அது எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளில் செல்லக் கூடும் என்பதையும் எடுத்துக் கூறி எனினும் சர்வதேச வலைக்குள்ளேயோ அல்லது இலங்கை அரசின் நிகழ்சி நிரலுக்குள்ளேயோ சென்றுவிடாது தமிழர்களின் ஒரே தலைமை எமது தேசியத் தலைமை என்ற அடிப்படையில் அவரின் கொள்கையில் ஒற்றுமையாக நின்று செயற்பட வேண்டுமென்பதை கடந்த மே மாதம் 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெற்ற முதலாவது அமர்வின் போது லண்டனில் கலந்து கொண்டு வலியுறுத்தியிருந்தேன்.

எனினும் இதற்கு சில மாறான கருத்துக்கள் சிலரால் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும் நாடுகடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிறைவேற்றுனராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு.வி.ருத்திரகுமாரன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முறைமையைக் கைவிட்டு ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார்.

அது மாத்திரமின்றி தற்போது இலங்கை அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் குமரன் பத்மநாதனின் செயற்திட்டங்களுடன் நாடுகடந்த அரசு செயற்படுகின்றதா என்ற அச்சம் எமக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அவர்வு நடைபெற்றுள்ளது.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பு என்பது பல விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு நாட்டுக்கான வலுவைக் கொண்டாக இருக்க வேண்டும். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசினால் உருவாக்கப்பட்டுள்ள யாப்பு குறைந்தது ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் யாப்பைப்போன்றும் அமையவில்லை என்பதே எனது கருத்தாக உள்ளது. அது ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது குழுவின் கரத்தைப் பலப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

எனவே இது ஒரு நாட்டின், அல்லது தேசியத்தின் விடுதலைக்கான யாப்பாக இதைப் பார்க்க முடியாது. அது மாத்திரமின்றி இரண்டாவது அமர்வில் பல முறைகேடுகளும் பக்கசார்பான, தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் இடம் பெற்றுள்ளன. என்னைப் பொறுத்த வரையிலும் என்னைப் போன்று தேசியத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட பலரைப் பொறுத்த வரையிலும் நாம் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களோ அல்லது விலைபோனவர்களோ கிடையாது. எமது நோக்கமே புலம் பெயர் தேசத்தில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பி அதன் மூலம் எமது இனத்தில் விடுதலையை அடைவதேயாகும்.

எனினும் நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரம்பம் முதல் இரண்டாவது அமர்வு நடைபெற்றது வரை ஐனநாயகம் என்பது கடைப்பிடிக்கப்படாமல் பக்கசார்பான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இரண்டாவது அமர்வின்போது சில பதவிகளை ஐனநாயக ரீதியில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யாமல் வாக்கெடுப்பைத் தடுத்து தன்னிச்சாயான முடிவில் தெரிவுகள் இடம் பெற்றுள்ளன. இது ஐனநாயகத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது மாத்திரமின்றி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அம்மக்களின் விருப்பு வெறுப்புகளை முன்னெடுக்கவிடாது தடுக்கப்பட்டும் உள்ளது.

இரண்டாவது அமர்வில் நம்பிக்கையோடு நியூயோர்க், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களில் கலந்து கொண்ட தேசியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தொடர்ந்தும் அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாதவாறு நடத்தப்பட்டதால் அதில் இருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் இவ்வுறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் குறைந்தளவான உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பதவிநிலை தெரிவுகள் இடம் பெற்றுள்ளன.

நான் இரண்டாவது அமர்வில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அங்கு இடம் பெற்ற சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். கடந்த மே மாதம் நடைபெற்ற முதல் அமர்வில் இருந்தே எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தன. அதனால் நாடுகடந்த அரசின் மீது நம்பிக்கையீனம் இருந்தது என்பது உண்மையே. இதன் காரணமாக நான் சில உறுப்பினர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் சந்திப்புகளில் கலந்து கொள்வில்லை.

உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சென்று அவர்களை பிழையாக வழி நடத்த விரும்பவில்லை. எனக்கும் தேசியத்திற்கும் வாக்களித்த மக்களுக்கு உண்மையான விடயங்களை முன்வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அந்த உண்மையான விடயங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசின் நோக்கம் அதன் போக்குப் பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

எனவே நாடுகடந்த அரசின் செயற்பாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பதா இல்லையா என்பதை நான் தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். இக்கருத்தையே தேசியத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிலரும் கொண்டுள்ளனர். எனவே நாம் எடுக்கும் எந்த விதமான முடிவுகளாக இருந்தாலும் அதற்கு நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் சர்வாதிகாரப் போக்குடைய ஒருசிலருமே பொறுப்பாகும் என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதை விரைவில் நாம் மக்களுக்குத் தெளிவு படுத்துவோம்.

மக்களின் விருப்பு வெறுப்புகளையோ அரசியல் அபிலாசைகளையோ கைவிட்டு தனிநபர்களின் அல்லது சர்வாதிகாரப் போக்குடைய ஒரு குழுவின் திட்டங்களுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனினும் எமது தாயகம், தேசியம், கொள்கை என்பவற்றைக் கைவிடாது இறுகப்பற்றிக் கொண்டு தேசியத் தலைமையின் வழியில் எமது மக்களின் விடுதலையை நோக்கி எனது செயற்பாடு தொடரும். என ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments