விடுதலைபுலிகள் மீது பழி சுமத்த சதி நடக்கிறது; சீமான்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் இதுவரை 540க்கும் மேற்பட்டோர் சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் எங்கும் எழுந்துள்ள கடும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அரசு தனது வெளியுறவு செயலர் நிருபமாராவ் கண்துடைப்பாக உடனே இலங்கைக்கு அனுப்பியது. தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடை பெற்று வரும் மீனவர் படுகொலைகள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் என்பதே கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித எதிர்ப்பும் காட்டாது கள்ள மவுனம் காத்த மத்திய அரசு இப்போது புதிதாக பெயரளவுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கும் வெளியறவு செயலர் நிருபமாராவ் திடீர் இலங்கை பயணத்திற்கும் உண்மை காரணமாகும்.

இலங்கை அரசு தனது தமிழின அழிப்பு நடவடிக்கை தொடர்வதற்கு தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதையே விரும்புகின்றது. இதனால் சிங்கள ராஜபக்சே அரசு மிகப்பெரிய சதி நட வடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது எனவும் அதற்கு இந்திய அரசு மறைமுக உதவி புரிவதாகவும் ஆபரேஷன் கடல் சிங்கம் என்ற திட்டத்துடன் இது நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இலங்கையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் என்று கூறப்படும் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதன்படி, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடைகளில் அவர்கள் இலங்கையின் கடற்படை வழங்கும் படகில் தமிழக மீனவர்கள் நடமாடும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் திட்டம் மேற் கொள்ளப்படலாம். அந்த வேளையில் அங்கு முன்கூட்டியே திட்ட மிட்டபடி வருகை தரும் சிங்கள கடற்படை அவர்கள் மீது எதிர்தாக்குதல் தொடுத்து தமிழக மீனவர்களை காப்பாற்றுவது போன்று திட்ட மிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தமி ழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அறிவித்து விட்டு கைது செய்யப்படுவார்கள். இதுவரை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இவர்களே என்ற விதத்தில் இந்தியா வுக்கும் உலகின் பார்வைக்கும் சிங்கள அரசினால் தகவல்கள் வழங்கப்படும் நயவஞ்சக திட்டம் இருப்பதாக அறிய முடிகிறது. இதுவே ஆபரேஷன் கடல் சிங்கம் பெயரினாள செயல் திட்டமாகும்.

தமிழக மீனவர்கள் மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடத்தவே இல்லை என்று நிராகரித்த சிங்கள அரசு, மூன்றாவது சக்தி ஒன்று இந்த தாக்குதல்களை நடத்தி இருக்கலாம் என்று கடந்த மாதம் கூறியது இந்த திட்டத்தின் அடிப்படையில்தான். தனக்கு ஆதரவான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உதவி புரிவது, விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைப் பது, தன் மீதான கொலைப் பழியை சர்வதேச அளவில் மறைப்பது ஆகியவையே சிங்கள அரசின் ஆபரேஷன் கடல் சிங்கம் திட்டத்தின் நோக்கமாகும்.

ஆகவே தமிழர்கள் குறிப்பாக மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த சதி திட்டத்திற்கு பலியாக கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சீமான் அதில் கூறியுள்ளார்.

Comments