ஏர்டெல் உட்பட இலங்கை பொருட்களை எதிர்த்து விரைவில் நாடு தழுவிய போராட்டம்: சீமான்

இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


பிக்கி வர்த்தக அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது.

சர்வதேச நாடுகள் அனைத்தும் இலங்கையை போர்க்குற்றவாளி என்றும் அதனைத் தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் வேளையில் பிக்கியின் தலைவரான பார்தி மிட்டலோ இலங்கையை இலங்கையை புதிய நாடு என்றும், வர்த்தக விரிவுபடுத்தலுக்கும், முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் உற்சாகமாக நாடு என்றும் வர்ணித்துள்ளது.

அதனை வணிக வாய்ப்புகளை அள்ளித்தரும் உற்சாக பூமி என்கிறது பிக்கி. ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் ஃபிக்கியின் தலைவராக இருந்துகொண்டு இலங்கை அரசின் இனப் படுகொலை குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது கொலை செய்யப்பட்ட எம் தமிழினத்தின் நீதி கேட்கும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், எமது துயரங்களை மேலும் அதிகப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இலங்கை அரசைப் பொறுத்தவரை, இனப் படுகொலை குற்றச்சாட்டால் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், தனது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை மேம்படுத்திக்கொள்ள முடிவு செய்து செயலாற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தனக்கு இணக்கமான, தன்னுடன் இணைந்து செயலாற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாய்ப்புக்களை அள்ளித்தந்து தன்னை அனைவருக்கும் ஏற்ற சமாதான பூமியாக காட்டிக்கொள்ள எத்தனிக்கின்றது.

எனவேதான் ஏர்டெல் நிறுவனத்துடன் இலங்கை அரசு கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் - கொழும்பிலிருந்து புத்தளம் வரை - செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்போது 12இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவரும் ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில்1.25 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழனைக் கொல்லும் அரசுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழனோடு வணிகமும் செய்யும் மனிதாபிமானமற்ற ஏர்டெல் நிறுவனம், ஈழத் தமிழினத்தை அழித்த இலங்கையின் இனப் படுகொலைப் போரில் அந்நாட்டிற்கு உதவியதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது.

அந்த உதவிக்கு கைமாறாகத்தான் அங்கு செல்பேசி சேவை நடத்த அனுமதி பெற்றதென்றும் கூறுகின்றனர். டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஏர்டெல் செல்போன் நிறுவனம் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாகத்தெரிகின்றது.

ஆக, ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல், வெறும் இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது மட்டுமின்றி, தமிழின எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய நிறுவனமாக ஏர்டெல் செயல்பட்டு வருகிறது.

இதைப்போல இன்னும் எண்ணற்ற இலங்கை-இந்திய நிறுவனங்கள் சிங்கள அரசுக்கு துணை போயும், அதற்கு ஆதரவாகவும் உள்ளன. அவை அனைத்திற்கும் எதிராகவும் போராட்டம் இருக்கும். முதற்கட்டமாக தமிழர்களைக் கொன்றொழித்து ரத்தக்கறையுடன் இருக்கும் சிங்கள அரசுடன் இணக்கமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தை முற்றிலும் புறக்கணிக்கும் போராட்டத்தை நேற்று கோவையில் நாம் தமிழர் இயக்கம் நடத்தியுள்ளது.

எம்மியக்கத்தவர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டொரு நாளில் என் தலைமையில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் இந்தப்போராட்டத்தை நடத்த உள்ளோம்.

வீதி வீதியாக எடுத்துச்செல்வோம்.தமிழர்களின் ரத்தம் குடித்த சிங்கள அரசுக்கு துணை போகும் அனைவரையும் எதிர்ப்போம்,புறக்கனிப்போம்.தமிழினம் வீரம் செறிந்த இனம் மட்டுமல்ல, அறிவிற் சிறந்த இனம் என்பதை இந்தப்போராட்டத்தின் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவோம்.

Comments