ஜெயலலிதாவின் கடிதம் ஒரு ஏமாற்று வேலை-வைகோ

தன் மீது பொது மக்கள் மத்தியிலும் அதிமுக தொண்டர்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாகவே எனக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

ஜெயலலிதா படுத்தியபாட்டால் நொந்து போய் விட்டார் வைகோ. இதுவரை இல்லாத அளவுக்கு அவமானப்பட்டுவிட்ட வைகோ, இந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் அறிவித்து விட்டார்.

மதிமுகவினர் மத்தியில் இது அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், வைகோவின் இந்த தன்மானமான முடிவு நடுநிலையாளர்களின் பாராட்டுக்களையும், அனுதாபத்தையும் வாரிக் கொட்டியுள்ளது.

இந் நிலையில் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றுள்ளார் வைகோ.
நேற்று மாலை சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்ற வைகோ அங்கிருந்து கலிங்கப்பட்டிக்குக் கிளம்பினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து தேர்தலை புறக்கணிக்க நீங்கள் எடுத்துள்ள முடிவு வருத்தம் அளிப்பதாகவும், எப்படி இருந்தாலும் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் எப்போதும் இருக்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு வைகோ அளித்த பதில்,

234 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 74 தொகுதிகள் போக மீதமுள்ள 160 தொகுதிகளுக்கும் கடந்த 16ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்த போதே மதிமுகவை பிடரியை பிடித்து நாங்கள் வெளியேற்றுகிறோம் என்ற விதத்தில் அவமதித்து, கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டார்.

இதனால் மக்கள் மன்றத்தில் அதிமுக மீது ஏற்பட்ட விமர்சனத்தின் காரணமாக 19ம் தேதி அன்று அதிமுக எங்களுக்கு ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கை 12 தான் என்பதையும் ஊடகங்களில், செய்தி ஏடுகளில் எண்ணிக்கை குறித்து உலவ விடப்பட்ட செய்திகள் உண்மை அல்ல என்பதையும், அதிமுக பொதுச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்ட 12 தொகுதிகள் என்பதில் இருந்து நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டை உண்மை என்று அவரே ஒப்புக்கொண்டு விட்டார்.


அதிமுக தொண்டர்கள் மனதிலும், பொது மக்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள, அதிருப்தியின் காரணமாகவே எனக்கு இப்படியொரு கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார் என்றார் வைகோ.

அதிமுகவுக்கு எதிராக நீங்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக சொல்கிறார்களே என்று கேட்டதற்கு,

எனது தாயாரை சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்குவதற்காக சொந்த ஊருக்கு செல்கிறேன். அம்மாவை பார்க்க செல்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் எந்த அறிக்கையும் விடப்போவதில்லை. அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறேன் என்றார் வைகோ.

தனது தாயாருக்கு வைகோ சொந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் உரிய மதிப்பு கொடுத்து வைத்துள்ளார் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தான் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், அதை தனது தாயாரிடம் சொல்லி அவரது ஆசியைப் பெறுவது அவரது வழக்கம்.

அதேபோல தேர்தல் பிரசாரம் செய்வதாக இருந்தாலும் கூட தாயாரிடம் ஆசி பெற்று விட்டுத்தான் கிளம்புவார். அந்த வகையில் தனது ‘அன்புச் சகோதரியால்’ ஏமாற்றப்பட்ட விரக்திக்குள்ளாகியுள்ள வைகோ தனது தாயாரைத் தேடிச் சென்றது பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று அதிகாலை கலிங்கப்பட்டியில் அவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியம்மா கோயில் கும்பாபிஷேகத்தில் வைகோ கலந்து கொண்டார். கோயிலில் நின்ற வைகோவிடம் ஊர் மக்கள் ஜெயலலிதாவின் செயல் குறித்து துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தனர்.

அவர்களிடம் அதிமுக செய்த துரோகத்தை விளக்கிய வைகோவிடம், நீங்கள் எடுத்த முடிவுதான் சரியானதே என்று மக்கள் ஆறுதல் கூறினர்.

பின்னர் வைகோ தன் வீட்டிற்கு சென்றுவிட்டு காலை 9 மணிக்கு சென்னை புறப்பட்டார்

Comments