மூன்றாவது ஒரு அணி உருவாக்கினால் ம.தி.மு.கவுக்கு சிறந்த எதிர்காலம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற உள்ளன. திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) ஏற்கனவே தொகுதி உடன்பாடுகளை அதன் தோழமைக் கட்சிகளுடன் செய்துவிட்டது. பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க.) தொகுதி உடன்பாடுகளை தனது தோழமைக் கட்சிகளுடன் செய்துவிட்டது.

பரிதாபமான நிலையென்னவெனில், தி.மு.கவில் இருந்து பிரிந்து கடந்த 1993-ஆம் ஆண்டு ம.தி.மு.கவை ஆரம்பித்த வைகோவுக்கு, அடுத்த மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியமான பிரச்சனையாக உள்ளது. வைகோ என்கிற எழுச்சிப்புயலின் ம.தி.மு.க. தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தை வகிக்குமா என்பதை அடுத்த மாதம் இடம்பெற இருக்கும் தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருக்க வேண்டும் என பலர் எண்ணினர் ஆனால் அது நடக்கவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.கவுக்கு 1996-இல் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் 35 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. அதில் மூன்று சட்டமற்ற உறுப்பினர்கள் தி.மு.கவுக்கு தாவிட்டனர். மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்ற ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வீர.இளவரசன் சுகயீனம் காரணமாக மரணமடைந்தார். தற்போது ம.தி.மு.கவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ம.தி.மு.கவின் செல்வாக்கு கணிசமாக குறைந்தே தமிழகத்தில் காணப்படுகிறது. வைகோவின் கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவுவதும், கட்சிக்கு புறம்பான வகையில் பேசுவதும் சர்வ சாதாரணமாக இருக்கிறது. இவைகளும் வைகோ தலைமயிலான மதிமுகவை பலமிழக்க செய்கிறது.

விஜயகாந்த் தலைமயிலான தேசிய முன்னேற்ற திராவிட கழகத்திற்கு (தே.மு.தி.க.) 41 இடங்களும், மனிதநேயம் மக்கள் கட்சிக்கு (ம.ம.க.) 3 இடங்களும், சமத்துவ மக்கள் கட்சிக்கு (ச.ம.க.) 2 இடங்களையும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களையும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு 1 இடத்தையும், பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 இடத்தையும், இந்திய குடியரசுக் கட்சிக்கு 1 இடத்தையும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடத்தையும் அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளையும் அ.தி.மு.க. ஒதிக்கியது.

நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டது. அதில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர் 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. தமிழக வாக்காளர்களின் அமோக ஆதரவை இக்கட்சி பெற்றிருக்காவிடினும், தனித்து போட்டியிட்டைமையினால் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அணியினால் தி.மு.க. கூட்டணியை வெல்ல முடியாமல்போன காரணத்தினால்தான் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் கொண்டுவருவதன் மூலமாக தி.மு.கவை தோற்கடிக்க முடியும் என்பதே ஜெயலலிதாவின் கணக்கு.

தி.மு.கவா அல்லது அ.தி.முகவா வெற்றிக் கூட்டணி?

அ.தி.முகவின் பொதுச்செயலாளரும் முன்னர் இரு தடவைகள் முதலமைச்சராக இருந்த ஜெயராம் ஜெயலலிதா இயல்பாகவே தற்பெருமையுடன் இணைந்த கர்வம் கொண்டவர். மற்றவர்களை மதிக்கும் பக்குவம் அற்றவர். தானேதான் மனித குலத்திற்கே முதலானவர் என்கிற மமதையுடையவர். தன் காலில் விழுந்து வணங்குபவர்களை ஜெயலலிதாவுக்கு நன்கு பிடிக்கும். இவரின் பாதங்களை விழுந்து கும்பிட்டால் போதும் வாழ்க்கையில் முன்னேற என்கிற கருத்து பரவலாக தமிழக மக்களிடம் உண்டு. எம்.ஜி.ஆர் வழிவந்த தலைவரே தான் என்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் விரும்பாத பல செயல்களை செய்தே வந்துள்ளார். இப்படியாக பல கருத்துக்களை ஜெயலலிதாவைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.


தி.மு.க. கூட்டணியின் தொகுதி உடன்பாடுகள் தீர்க்கப்பட்டாகிவிட்டன. தி.மு.க. 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 63 தொகுதிகளும், பா.ம.கவுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகளும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகளும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகளும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடக்கி விட்டுள்ளார்கள். தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரங்களை செய்வதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் தயாராகிவிட்டார்கள். தமது ஆட்சிக்காலத்தில் தாம் என்னவெல்லாம் தமிழக மக்களுக்கு செய்ததென்பதை முன்னிறுத்தி பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளது தி.மு.க.

அ.தி.மு.க. தொகுதி உடன்பாட்டை முடிவு செய்வதில் ம.தி.மு.கவுடன் இழுபறி நிலையிலையே இருந்தது. 144 தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. முடிவு செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே தொகுதி உடன்பாட்டை அனைத்து தோழமைக்கட்சிகளுடனும் அ.தி.மு.க. செய்துவிட்டது. அதன்படி, அனைத்து கூட்டணிக்கட்சிகளுக்குமென 74 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க. 144 தொகுதிகளிலும் மற்றும் ஏனைய கூட்டணிக் கட்சிகள் 74 தொகுதிகளில் போட்டியிடுவதென்றால் மீதி இருப்பது 16 தொகுதிகள் யாருக்கும் ஒதுக்கபடாமல் இருந்தது. ம.தி.மு.கவுடனே இன்னும் தொகுதி உடன்பாட்டை எட்ட முடியாமல் இருக்கும் அ.தி.மு.க., 16 தொகுதிகளையும் ம.தி.மு.காவுக்கு ஒதுக்கும் என்றுதான் பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. தானே 160 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அ.தி.மு.க. அறிவித்தது.

ம.தி.மு.கவுக்கு 2006 நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 35 இடங்கள் ஒதிக்கியது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் ம.தி.மு.கவில் பழைய 35 இடங்கள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் 21 இடங்களாவது வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.கவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்படுவதாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. இதை கேட்டு வைகோவும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தங்கள் அதிருப்தியை அவர்கள் தெரிவித்தவுடன், 7 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறினார்கள். கூடுதல் இடங்கள் வேண்டுமென்று ம.தி.மு.க.வில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. பின்பு 8 இடங்கள் ஒதுக்குகிறோம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு செல்லுங்கள் என்று அழைப்பு விடப்பட்டதாகவும், அதற்கு வைகோ மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் அ.தி.மு.கவினர் 12 தொகுதிகளை ம.தி.மு.கவுக்கு தருவதாக கூறப்பட்டது. இதனையும் ம.தி.மு.கவினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

அடுத்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆராய ம.தி.மு.க உயர்நிலைக் குழுக் கூட்டம் மார்ச் 19ம் தேதி (சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் அதே தினம் மாலை 3.00 மணிக்கும் ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறும் என ம.தி.மு.க. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே மதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவரும் என்று சொல்லப்பட்டது.


அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வந்த ம.தி.மு.க., அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளது. தங்கள் கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொகுதி பங்கீட்டில் தாங்கள் நடத்தப்பட்ட விதமும், தங்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட போக்கும் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் முன்பு இருந்தது போலவே இருக்கிறது என்றும், காலம் தந்த படிப்பினைகளால் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் ம.தி.மு.க. குறிப்பிட்டுள்ளது. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.கவுக்கு இல்லை என்றும் ம.தி.மு.க. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பலமுள்ளதாக அமையுமா மூன்றாவது கூட்டணி?

ஏதாவதொரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் சில தொகுதிகளிலாவது வெல்லலாமென்று நினைக்கிறது பாரதீய ஜனதா கட்சி. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. உறவை முறித்திருந்தால், பாரதீய ஜனதா கட்சி திமுகவுடன் இணைந்திருக்கும். சோனியா காந்தியின் மிரட்டளினாலேயோ என்னவோ கலைஞர் காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து விலத்தாமல் அது கேட்ட அனைத்துத் தொகுதிகளையும் கொடுத்துவிட்டது. பலமானதொரு மூன்றாவது கூட்டணி அமைய வேண்டுமானால், பாரதீய ஜனதா கட்சி ம.தி.மு.க. போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணியை அமைக்கலாம்.

ம.தி.மு.க. தலைமையேற்று மூன்றாவது ஒரு அணியை வைகோ உருவாக்கினால் அவரின் ம.தி.மு.கவுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும். தி.மு.கவும், அ.தி.மு.கவும் மாறிமாறி ஆட்சி செய்து தமிழர்களுக்கு எதனையும் செய்யவில்லை என்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தால் தமிழக மக்களின் கணிசமான ஆதரவைப் பெறலாம். மேலும் பல பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யலாம். ம.தி.மு.க விட்ட பிழை என்னவென்றால் ஜெயலலிதாவுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக நட்பை பேணி வந்ததன் காரணமாக, ம.தி.மு.கவின் வளர்ச்சியில் பல பின்னடைவை சந்திக்க வேண்டிவந்தது. சில வருடங்களுக்கு முன்னராவது ம.தி.மு.க., ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்து மூன்றாவது அணியொன்றை உருவாக்கி இருந்தால் வைகோவின் அரசியல் தந்திரம் இந்தத்தடவையாவது வெற்றியளித்திருக்கும்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவுடன் சவாரி செய்தால் என்ன கதி என்று ம.தி.மு.கவை அவமதிக்கும் செயலூடாக அறியக்கூடியதாக உள்ளது. கலைஞர் அல்லது அவரின் மகன் ஸ்டாலின் மற்றும் ஜெயலலிதா போன்றவர்களை தோற்கடிக்க வேண்டுமாயின் பலமான மூன்றாவது கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திப்பதனூடகவேதான் சாதிக்க முடியும்.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பிரிவினரின் அரசியல் சாணக்கியம் இல்லாத நடவடிக்கையை கடந்த சில தினங்களாக நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது. பாரதீய ஜனதா கட்சி ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஏறக்குறைய 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என தமிழக பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் மூன்றாவது அணியில் இணைந்து 15 தொகுதிகளில் சுப்ரமணிய சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி போட்டியிடப்போவதாகவும், இதில் தானும், சந்திரலேகாவும் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

வேடிக்கை என்னவென்றால் சுப்ரமணிய சுவாமி என்பவர் ஒரு அரசியல் கோமாளியாகவேதான் தமிழக மக்களினால் வர்ணிக்கப்படுபவர். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துமுகமாக பல கருத்துக்களைக் கூறி வந்துள்ளதுடன், தமிழக மக்களை சிறிதளவேனும் மதிக்காமல் அறிக்கை வாயிலாக புண்படுத்தி வந்துள்ளார். இவரைப் போன்ற அரசியல் கோமாளிகளை கூட்டணியில் சேர்த்தால் நிச்சயம் பாரதீய ஜனதா கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றியடைய முடியாது.

பலமான மூன்றாவது அணி ஓன்று உருவாக வேண்டுமானால் திராவிட கட்சி ஒன்றினை முன்னிறுத்தி ஒரு அணியை உருவாக்குவதுடன், சிறிய கட்சிகளை தமதணியில் உள்வாங்கி தேர்தலை சந்தித்தால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியினரின் வாக்குகளை பிரிப்பதனூடாக தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி பல திட்டங்களை செய்ய முடியும்.

காலத்தை வீணடிக்காமல் வைகோ தலைமையிலான ம.தி.மு.கவினர் மூன்றாவது அணியை உருவாக்கி தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவின் வாக்குகள் முழுமையாக அவர்களை சென்றடையாமல் செய்தாலே போதும் என்கின்றனர் சில தமிழ் உணர்வாளர்கள். சுய மரியாதையையே விட்டுக்கொடுத்து பிழைப்பு நடத்தும் கருணாநிதிக்கும் மற்றும் அகங்காரக் குணாதிசயங்களைக் கொண்ட ஜெயலலிதாவுக்கும் நல்லதொரு பாடத்தை தமிழக மக்கள் அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலில் கொடுத்து மூன்றாவது அணிக்கு அதிகப்படியான வாக்குகளை அளிப்பதனால் மாற்றுத் தலைமையை உருவாக்கி வழமான தமிழகத்தை கட்டியெழுப்புவதே முக்கியமானது.

--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் தொடரும்--

அனலை நிதிஸ் ச. குமாரன்

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Comments