நெற்றிக்கண்ணைக் காட்னாலும் குற்றம் குற்றமே... அது திரு. ருத்திரகுமாரனுக்கும் பொருந்தும்!

அரசியல் 'அறிஞர்' திரு. நக்கீரன் தங்கவேலு அவர்களுக்கு
நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று ஈசனுக்கும் எதிராகக் குரல் கொடுத்த நக்கீரனின் நேர்மை எங்கே? உங்களது தேசியக் கருத்துச் சிதைவுப் பக்கவாத்தியம் எங்கே...? தெரியாமல் குழம்பி நிற்கின்றோம். திரு. ருத்திரகுமாரனிடம் கேள்வி கேட்டால் உங்களிடமிருந்து பதில் வருகின்றது. அப்போ, ருத்திரகுமாரனுக்கு எல்லாமே நீங்கள்தானா...?

உலகில் எந்த நாட்டிலாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தங்கள் அமைச்சர்களை தெரிவு செய்யும் வழமை இருக்கிறதா? என்று நல்லதொரு கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். எங்களிடமிருந்தும் ஒரு கேள்வி உங்களிக்கிருக்கிறது. உலகில் எந்த ஒரு நாட்டிலாவது தங்கள் பிரதமரை தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யும் வழமை உண்டா? இல்லைத்தானே! ஆனால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எங்களைப்போன்று தெரிவு (?) செய்யப்பட்ட உருத்திரகுமாரனை நாங்கள்தானே பிரதமராக தெரிவு செய்தோம். இது உங்களுக்குத் தெரியாதா? பிரதமரையே உறுப்பினர்களாகிய நாங்கள் தெரிவு செய்யலாம் என்றால், அவரோடு இணைந்து வேலை செய்யப்போகும் துணைப் பிரதமர்களையும் மற்றைய அமைச்சர்களையும் நாங்களே தெரிவு செய்வதில் என்ன தவறு இருக்கிறது?.

குதர்க்கமாக சுற்றி வளைத்து விளங்கமுடியாதவாறு உங்கள் வழக்கமான பாணியில் பதிலளிக்காமல் நேரடியாக இந்தக் கேள்விக்குப் பதிலளியுங்கள். வெஸ்ற்மினிஸரர் முறையென்றும், அது இது என்றும் எங்கள் யாப்பை வாணிக்க வேண்டாம். எங்களுடைய அரசாங்கம் இவ்வகையில் தனித்துவமானதும், முதன்மையானதும். அதனால்தான் எங்கிருந்தும், களவாடாத தனித்துவமான அரசியல் யாப்பு இதற்கு உருவாக்கப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முழுமையான அதிகாரம் கொண்டதாக அரசியலமைப்பை உருவாக்குவது தவறா?

வடக்கும் கிழக்கும் இணைந்த அதிகாரப்பரவலாக்கலை கேட்டு நிற்கும் தமிழினத்தின் பிரதிநிதிகளாகிய நாம், அதிகாரத்தை ஒருவரிடம் குவிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?.

எல்லாவற்றிற்கும் மேற்குலகை உதாரணம் காட்டுத் நீங்கள் 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்றத்தை தனக்குச் சாதகமில்லாத பல நாடுகளில் தேர்தல்களை நடத்தாமலும், தனக்குச் சாதகமாக இல்லாதவர்களின் தெரிவை இரத்துச் செய்தும் 85 உறுப்பினர்களை வைத்து அரசியல் யாப்பை நிறைவேற்ற முற்பட்டதும், அதில் 37 உறுப்பினர்கள் அதிருப்தியால் வெளியேறியபின்னர் அதை அங்கீகரித்ததும், 48 பேரை மட்டும் சபையில் வைத்துக்கொண்டு பிரதமராக முடிசூடிக்கொண்டதுமான அரசியல் அசிங்கங்கள் எந்த நாட்டில் அரங்கேறியது என்று உங்கள் புத்திக் கூர்மையோடு தயவு செய்து எங்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். இதைச் சர்வாதிகாரம் என்பதா...? அரசியல் பித்தலாட்டம் என்பதா...?

'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற கருத்தியலை திரு கே.பி. அவர்கள் முன்மொழிந்த போதே அது குறித்த அச்சமும், சந்தேகமும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. அதனால், அதில் முன்வந்து போட்டியிடுவதைப் பலர் தவிர்த்திருந்ததை யாரும் மறைத்துவிட முடியாது. தீவிரமான தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் மட்டுமே 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' சிங்கள தேசத்தின் எதிர்ப் புரட்சி அமைப்பாக உருப்பெற்று விடக் கூடாது என்ற அக்கறையோடு களம் இறங்கினார்கள். பெரும்பாலான நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களை கே.பி.யால் நியமிக்கப்பட்டவர்களே முன்நின்று நடாத்தினார்கள். இன்றும் பல நாடுகளின் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் கே.பி. குழுவின் பிடியிலேயே உள்ளனர் என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது. இதனால், தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு இத்தனை பிரதிநிதிகளது ஆதரவு இருந்தது என்பனால் அச்சமுற்ற கே.பி. குழுவினர் தான, பேத, தண்ட முறைகளில் மக்கள் பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்த முனைந்தனர் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

அதிகாரம் செலுத்தக் கூடிய நிலப்பரப்போ, ஆட்சியை நில நிறுத்தக் கூடிய சட்ட வல்லமையோ இல்லாத புலம்பெயர் தமிழர்களது மனச்சாட்சியும், அர்ப்பணிப்பும், தியாகமும் மட்டுமே நாடு கடந்த அரசாங்கத்தை நெறிப்படுத்தும். அது திரு. ருத்திரகுமாரனுக்கு மட்டுமல்ல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழீழ விடுதலைக்கான போர்க் களமாக நினைக்கும் அத்தனை மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு. எல்லைகளைக் கொண்ட நாடுகளுக்கும், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளுக்கும் நீங்கள் கூறுவது பொருத்தமாக இருக்கலாம். ஆனால், எங்கள் தேசியத் தலைவரதும், மாவீரர்களதும், மக்களதும் இலட்சியப் பாதையில் பயணிக்கும் எல்லைகளற்ற உலகின் புலம்பெயர் தமிழீழ மக்கள் குழாமிற்கு உங்கள் சுட்டிக்காட்டல்கள் பொருந்துவதாக இல்லை.

அதை விடவும், பல கட்சிப் பாராளுமன்ற முறைமையில், கட்சியின் தெரிவும், எதிர்க் கட்சிகளின் அக்கறையும் பிரதமரையும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களையும் கட்டி நெறிப்படுத்தும். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற புதிய குதிரை திசை தவறாமல் வேகமாக ஓடவேண்டுமாக இருந்தால், அதற்குக் கடிவாளம் இடவேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் கருத்தை நிராகரிப்பது எங்கனம் சரியாக இருக்கும் என்பதைத் தயவு செய்து எமக்குக் கூறுங்கள். நாங்கள் யாரும் திரு. ருத்திரகுமாரன் அவர்களிடம் எங்களுக்கான பதவிகளை யாசிக்கவில்லையே. மக்கள் பிரதிநிதிகள் பிராந்திய ரீதியில் தெரிவு செய்யப்படும் தகுதியானவர்களை இணைத்துக்கொண்டு போர்க் களத்தை விரைவு படுத்துங்கள் என்றுதானே கேட்டோம். அதை நிராகரிப்பதற்கு கே.பி. குழுவிற்கு என்ன அக்கறை என்பது புரியாததாகவே உள்ளது. பாரிசில் இடம்பெற்ற அமர்வில், மாறி வாக்களித்த சுவிஸ் உறுப்பினர் அந்தக் குழுவை முற்று முழுதாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சுகந்தன் என்பவரால் மிரட்டப்பட்டதற்கு நேரடியாகப் பார்த்த மக்கள் பிரதிநிதிகள் சாட்சிகளாக உள்ளார்கள். அவர் அந்த அமர்வின் மூன்று நாட்களும் தன்னால் முடிந்த அத்தனை தொலைத் தொடர்புகளின் ஊடாகப் பலரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதற்கான காணொளிக் காட்சிப் பதிவும் சாட்சியாக உள்ளது.

'இந்த அரசியல் யாப்பு விடயத்தில் நாங்கள் மூன்று விடயங்களில் மட்டும் உறுதியாக இருந்தோம். அது குறித்து ஏற்கனவே, திரு. ருத்திரகுமாரன் அவர்களுடன் விவாதித்தும் இருந்தோம். அதாவது, பிரதமருக்கு உதவியாக மூன்று பிரதிப் பிரதமர்களை நியமிப்பது என்றும், அவுஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா என மூன்று கண்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் அவர்களைத் தேர்ந்தெடுப்பது என்றும், 20 நியமன உறுப்பினர்களையும் மக்கள் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நாம் தீர்மானித்திருந்தோம்.' என்ற எமது வாக்குமூலத்திற்கு முன்னதாக, திட்டமிட்டபடி இந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் திரு. ருத்திரகுமாரன் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளது தேர்வைப் பூர்த்தி செய்யவில்லை என்ற எமது மக்களாட்சி ஜனநாயகத்திற்கான எமது நியாயமான உணர்வுகளை அப்படியே விட்டு விட்டீர்களே!

பெரும்பான்மை மக்களாட்சியில் மட்டுமே நம்பிக்கை கொள்வதுதான் நியாயம் என்றால், சிங்கள அரசின் நியாயத்தையும் நாங்கள் ஏற்க வேண்டிய கடப்பாட்டுக்குள்ளும் அல்லவா சென்றுவிடுவோம். 115 மக்கள் பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டிய அவையில் ஆகக் கூடியது 48 பேரால் மேற்கொள்ளப்பட்ட தெரிவை எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்கிறீர்கள்? இது சிங்கள தேசத்தின் மக்களாட்சியையும் கேலி செய்வதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஆகிய நாங்கள் இதை ஜனநாயகம் என்றோ, மக்களாட்சி முறைமை என்றோ ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளோம்.

இது 'எட்டாப் பழம் புளிக்கும்' என்ற தத்துவம் அல்ல, புலம்பெயர் தேசத்துப் போர்க் களமும் இன்னொரு முள்ளிவாய்க்காலில் புதைந்து போகக் கூடாது என்ற தமிழ்த் தேசியவாதிகளின் அக்கறை மட்டுமே. திரு. ருத்திரகுமாரன் பிரதமராகக் கூடாது என்பதோ, அவர் ஆட்சி செய்யக் கூடாதோ என்பதல்ல எமது நோக்கம். கே.பி. குழுவின் ஆதிக்கம் நிறைந்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ருத்திரகுமாரனை முன்நிறுத்தி புலம்பெயர் தமிழர்களின் இலட்சியப் பயணத்தையும் திசை திருப்பிவிடக் கூடாது என்பதே எமது அக்கறையாகும்.

ஒரு அரசாங்கத்தின்மீது, அதன் பிரதமர் மீது அல்லது ஒரு அமைச்சரிக் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் வேண்டும் என்று திரு. ருத்திரகுமாரன் தனக்கான அணை ஒன்றை அரசியல் யாப்பில் இணைத்திருப்பதை நக்கீரன் அறியவில்லைப் போலும். மக்களாட்சி ஜனநாயக நாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பைப் பார்த்துத் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் நீங்கள் இதில் இணைத்திருக்கலாம்.

''நாட்டில் நிலப் பறிப்பு படு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்த சிங்கள பேரினவாத அரசு மறுக்கிறது. திருமலையில் சிங்களக் குடியேற்றம் தனியார் காணிகளையும் விட்டு வைக்கவில்லை. வடமராட்சி வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றப் போவதாகச் சொன்னார்கள். அவர்களை மீளக் குடியேற்ற முடியாது என்று சிங்கள இராணுவத் தளபதி அறிவிக்கிறார். அதே சமயம் யாழ்ப்பாணத்தில் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடியிருந்தார்கள் என்று சொல்லிக் . கொண்டு மீளக்குடியேறும் நோக்கத்தோடு 180 சிங்களக் குடும்பங்கள் ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் மேலும் அனுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் இருந்து 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 சிங்களவர்கள் நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். இதனை வடமாகாண ஆளுநர் ஏ.சந்திரசிறி உறுதிசெய்துள்ளார்.

முகாம்களில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் எல்லோரையும் அரசு விரைவில் விடுவிக்கும் (பிபிசி ஒக்தோபர் 5) என்று சிறிலங்கா அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் டியூ குணசேகரா சொல்கிறார். இல்லை அவர்களை விடுவிக்கப் போவதில்லை என்று இராணுவம் கூறுகிறது.'' என்று நீங்கள் தெரிவுக்கும் அத்தனையும் உண்மைதான். அங்கேதான் எங்கள் சந்தேகமும் வலுவாக எழுகின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 17 மாத காலத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டு 16 மாதங்களில், அதற்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களில் நாடு கடந்த தமிழீழ அரசின் நகர்வுகள் என்ன? அதன் சாதனைகள் எவை? எதிர்கால முன்னெடுப்புக்கள் எவ்வாறு? என்பதை மக்கள் முன் விளக்குவதற்கு திரு. ருத்திரகுமாரனோ, அவர் சார்பான மக்கள் பிரதிநிதிகளோ முன்வரவேண்டும். தமிழீழ மக்களது அவலங்களை மட்டும் வைத்து அரசியல் வியாபாரம் செய்யப்படுவதை புலம்பெயர் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், தேர்தல்கள் நடாத்துவதற்கும், அமர்வுகள் நடாத்துவதற்கும் செலவழிக்கப்பட்ட மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட டொலர்கள் கணக்கைத் தவிர, திரு. ருத்திரகுமாரனிடம் சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பதுதான் பெரும் சோகம்.

நக்கீரரே! நெற்றிக்கண்ணைக் காட்னாலும் குற்றம் குற்றமே... அது திரு. ருத்திரகுமாரனுக்கும் பொருந்தும்.

உண்மையுள்ள

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான
தமிழ்த் தேசிய உணர்வாளர்களான
மக்கள் பிரதிநிதிகள்

Comments