முதல்வர் ஊர்வலத்தில் கோரிக்கையை யாரிடம் வைக்கிறார்?: ராஜபக்சவிடமா? அல்லது மன்மோகன் சிங்கிடமா? : தா.பாண்டியன் கேள்வி

முதல்வர் பதவியில் உள்ளவரே ஊர்வலம் போகிறார் என்றால் அவர் அவரது கோரிக்கையை யாரிடம் வைக்கிறார்? ராஜபக்சவிடமா? அல்லது மன்மோகன்சிங்கிடமா? என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நெய்வேலியில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார்.

முன்னதாக கடலூரில் தா.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகநாடுகள் பலவும் போரை நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தியும் இலங்கை போரை நிறுத்தவில்லை. மேலும் ஊடகங்களையும் செய்தி சேகரிக்க அனுமதி அளிப்பதில்லை.

இலங்கை தமிழர் மீதான தாக்குதலை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் ஆளும் தி.மு.க. தனது அரசியல் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை.

இலங்கை போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் முதல்வர் பதவியில் உள்ளவரே ஊர்வலம் போகிறார் என்றால் அவர் அவரது கோரிக்கையை யாரிடம் வைக்கிறார்? ராஜபக்சவிடமா? அல்லது மன்மோகன் சிங்கிடமா?

இலங்கையில் மட்டும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் அழவில்லை. இலங்கை மட்டும் இன்றி பாலஸ்தீனம், ஈராக் உள்ளிட்ட எந்த நாட்டில் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் நாங்கள் கண்டிப்போம். சில மாதங்களாக இலங்கையில் முற்றிலும் தமிழர்களை அழிக்க இலங்கை இராணுவம் தொடங்கி விட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக 6 இலட்சம் தமிழர்கள் உயிருக்கு பயந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப முடியவில்லை. அங்கிருக்கும் தமிழர்கள் சாகிறார்கள். இங்கிருக்கும் அகதிகளும் சரியாக வாழ முடியவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக 410 தமிழக மீன்பிடி தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களை இலங்கை அரசு சுட்டுக் கொல்கிறது. எல்லா மாநிலத்திலும் கடற்கரை உள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள். ஆனால் ஏன் தமிழக மீனவர்களை மட்டும் சுட்டு கொல்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை. வரும் தேர்தலில் 3-வது அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். என்றார்.

Comments