கட்டவிழும் துரோக முடிச்சுக்கள்

இப்போது அது அல்ல பிரச்சினை இராணுவ நிரலிற்குள் KP வந்துவிட்டது போக அவர்தான் அடுத்த தலைவர் என்றும் அவர் கைது செய்யப்படும் வரைக்கும் தங்களுடன் தொடர்பில் இருந்தார் என்றும் பலர் பிதற்றித்திரிகின்றார்கள்.

அப்படியானால் சிறீலங்கா அரசின் கைப்பொம்மையாக மாறியுள்ள KP யுடன் இப்போதும் தொடர்பிலிருந்து கொண்டு அவர் சுழ்நிலையின் கைதியாகத்தான் இப்போதும் உள்ளார் என்றும்,

அவரின் திட்டங்களை தான் இனிமேல் செயற்படுத்தவேண்டும் என்றும்,

விடுதலைப் போராட்டத்தின் புலம்பெயர் கட்டமைப்பை உடைக்கும் திட்டமிட்ட வியுகத்திற்கு தாங்களாகவே விரும்பி தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்களை [ இன்போதமிழ், தாய்நிலம் ] மக்கள் இனங்கண்டு தூக்கியெறியவேண்டும்.

தமிழ்மக்களின் நீண்ட நெடிய விடுதலைபோராட்டத்தின் புரட்சிகர ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டபோது உலக சக்திகளின் ஆதரவுடன் சிறீலங்கா இராணுவத்தால் எமது படைக்கட்டுமானம் தோற்கடிக்கப்பட்டபின் தமிழ் தேசியத்தின் இடத்தில் பாரியதொரு வெற்றிடம் ஏற்பட்டது யாவரும் அறிந்த உண்மை.

மிச்சம் சொச்சமாக மாற்றம் ஒன்றுக்காய் அடைகாக்கப்பட்டு வரும் எமது விடுதலைப்போராட்டத்தின் ஆதாரவேர்கள் சர்வதேச சதிப்பின்னலின் கொடூரமுகத்துக்குள் சிக்குண்டு அதன் உயிர்த்துடிப்பு அடக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வெளிப்படுத்தப்பட முடியாமல் பல உண்மைகள் வழமைபோலவே உறைந்துபோய்க் கிடக்க, அந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கி புலம்பெயர் தமிழர்களின் கரங்களை நோக்கி நகர்த்தப்பட்டுள்ள விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை சிதைப்பதற்கு, அதன் இயங்கு திசையை மாற்றி மக்களிடமிருந்து போராட்டத்தை அந்நியப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசின் அடிவருடிகளாகச் செயற்படும் பல துரோகக் கும்பல்கள், அதன் புலனாய்வு அமைப்புடன் இணைந்து மிக மும்முரமாக இயங்கத்தொடங்கி, இன்று அது தான் நினைத்ததைச் செயற்படுத்துவதற்காக பலத்த பிராயத்தனப்பட்டும் வருகிறது.

புலனாய்வின் முக்கிய செயற்திட்டம் என்பது எதிர்த்தரப்பில் உள்ளோரை விலைக்கு வாங்குதல், அவர்களை தங்களின் நிகழ்ச்சிநிரலிற்குக் கொண்டுவருதல், அவர்களை வைத்தே தங்களின் வேலைகளை நிறைவேற்றுதல் என்பன. இது புராண, இதிகாச காலத்திலிருந்து இன்றைய நவீன காலம்வரைக்கும் எந்தவித மாற்றமுமின்றி நடைபெறுகின்ற செயற்பாடுகளில் ஒன்று.

உலக விடுதலைப்போராட்டங்களில் பலவும் ஏன் பல பலம்வாய்ந்த நிறுவனக்கட்டமைப்புகள், சக்திமிக்க நாடுகள் பலவும் கூட எதிர்த்தரப்பின் புலனாய்வு வலையமைப்புக்குள் சிக்குண்டு இருப்பில்லாது போயிருக்கின்றன. தமது பகுதியைச் சார்ந்தவர்கள் பலரும் அற்ப ஆசைகளிற்கு அடிமையாகி, எதிர்ப்பகுதியினரின் நிகழ்ச்சிநிரலிற்குள் அகப்பட்டமையே இதற்கு முக்கிய காரணம். கூட இருந்து கொல்லும் விசம்போல மடியில் வளரும் நச்சு வைரசுக்களால் சிறுகச்சிறுக அதன் ஆணிவேர் அழிக்கப்பட்டு முற்றாகச் சாய்க்கப்படும் நிலைக்கு அவை தள்ளப்பட்டிருக்கின்றன.

எங்களுடைய விடுதலைப்போராட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு காலத்திலும் வித்தியாசம் வித்தியாசமாகத் துரோகங்கள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றை தனது மதிநுட்பத்தினால் இனங்கண்ட தேசியத்தலைமை அந்த நச்சுச் செடிகளை அடியொட்ட அகற்றியிருக்கின்றது. அவை யாவரும் அறிந்த ஒன்று என்பதால் இங்கு அவைபற்றி விலாவாரியாக விபரிப்பது தேவையற்றது என நினைக்கிறேன்.

நாம் இப்போது எச்சரிக்கையடைய வேண்டியிருப்பது புலம்பெயர் தேசங்களில் கட்டவிழ்க்கப்பட்டுவரும் துரோக அரங்கேற்றங்கள். உண்மையில் இதுபற்றிக் கதைத்து சம்பந்தப்பட்டவர்களை இப்பத்தியில் உட்கார வைத்து, ஊடகங்களில் உலவவிட்டு, சமூகத்தால் தூக்கியெறியப்பட வேண்டியவர்களை பெரிய மனிதர்களாக மாற்றும் நோக்கம் அடியேனுக்கு இல்லை. மக்கள் துரோகக் களைகளை இனங்கண்டு பிடுங்கியெறிந்து வீரமும் விவேகமும் விளைந்த இந்த விடுதலைத்தோட்டத்தினை பாதுகாக்கவேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாகும்.

தமிழீழத் தேசியத் தலைமையின் தீர்க்கதரிசனம் மிக்க தூர நோக்குடனான பார்வைதான் எமது விடுதலைப் போராட்டம் உலகமயப்படுமளவிற்கு வளர்ந்தது. விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அவர் எடுக்கின்ற முடிவுகள,; அவரிற்கு அருகில் இருப்பவர்களையே வியக்கவைத்திருக்கிறது. இப்போது நடந்தவைகள் கூட அவர் முன்னமே எதிர்வு கூறியவைதான்.

விடுதலைப்போராட்டம் உலக வலைப்பின்னலின் சூறாவளிக்குள் சிக்கி அழிக்கப்படும் நிலை வருமென்பதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். அப்படி தாயகத்தில் ஆயுதப்போராட்டம் அழிக்கப்படும் நிலைவரும் பொழுது, இடைவெளியின்றி தொடர்ந்து புலம்பெயர் தேசங்களில் எமது போராட்டம் வேறுவடிவங்களில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதற்காக சரியானதொரு கட்டமைப்பையும் உருவாக்கியே வைத்திருந்தார்.

தேசியத்தலைமையின் நேரடி நெறிப்படுத்தலில் உருவாக்கப்பட்ட சர்வதேசக்கட்டமைப்பு, அவரின் ஆசியுடன் புலம்பெயர் தேசங்களில் தமிழீழத் தேசியத்திற்கு ஆதாரமான பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தது. சிதறிப்போயிருந்த மக்கள் சக்தியை திரட்டி தேசிய ஒருமைப்பாடு என்ற குவியத்துக்குள் நிறுத்தி விடுதலைப் போராட்டத்தை விரிவாக்கியது.

அதேநேரம் வேறு வேறு வேலைத்திட்டங்களிற்காக கண்டங்கள் தாண்டியும் பலர் அனுப்பப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் தாயக எல்லையைத் தாண்டியவுடனேயே தம்மை முற்றாக மாற்றிக்கொண்டு தமது பொதுவாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டனர். இதில் விடுதலைப் போராட்டத்தில் தாங்கள் மிக முக்கிய பாத்திரத்தை வகிப்பதாக இப்போது புலம்பித் திரியும் பல மேதாவிகளும் உள்ளடக்கம்.

இரத்தமும் கண்ணீருமாக எமது விடுதலைப்போராட்டம் பாரிய உயிர்விலை கொடுத்து ஒவ்வொரு அடிகளையும் தாண்டியபோது, இங்கு தமது குடும்பங்களுடன் உல்லாச வாழ்க்கை அனுபவித்தவர்களும், ஒரு துளி வியர்வைகூட சொந்த தேசத்திற்காக சிந்தாதவர்களும், நிகழ்த்தப்பட்ட முழுச்சாதனைகளிற்கும் தாங்களே முழுப்பொறுப்பும் என மார்தட்டுபவர்களும் அடக்கம்.

உண்மையில் KP என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஒரு மூத்தபோராளி இங்கு அவரின் பிழை சரிகளை கதைத்து காலத்தை வீணாக்குவது இந்தக்கட்டுரையின் நோக்கமில்லை என்பதை வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். அண்மையில் அவரைச்சென்று சந்தித்துவிட்டு வந்தவர்கள் கூறிய கருத்தின்படி KP தனக்கும் சிறீலங்கா புலனாய்வுத்துறைக்கும் இடையிலான தொடர்பு 2006 ஆம் ஆண்டே ஏற்பட்டுவிட்டதாக அவர் நேரடியாகக் கூறியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளின் அனைத்துலகச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை இறுதிவரை செய்து வந்ததாகக் கூறப்படும் அவர் 2006 ஆம் ஆண்டுக்கு முதலே எதிரிகளின் நிகழ்ச்சி நிரலிற்குள் இயங்கத்தொடங்கிவிட்டார் என்பதை யாவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இப்போது அது அல்ல பிரச்சினை இராணுவ நிரலிற்குள் KP வந்துவிட்டது போக அவர்தான் அடுத்த தலைவர் என்றும் அவர் கைது செய்யப்படும் வரைக்கும் தங்களுடன் தொடர்பில் இருந்தார் என்றும் பலர் பிதற்றித்திரிகின்றார்கள்.

அப்படியானால் சிறீலங்கா அரசின் கைப்பொம்மையாக மாறியுள்ள KP யுடன் இப்போதும் தொடர்பிலிருந்து கொண்டு அவர் சுழ்நிலையின் கைதியாகத்தான் இப்போதும் உள்ளார் என்றும்,

அவரின் திட்டங்களை தான் இனிமேல் செயற்படுத்தவேண்டும் என்றும்,

விடுதலைப் போராட்டத்தின் புலம்பெயர் கட்டமைப்பை உடைக்கும் திட்டமிட்ட வியுகத்திற்கு தாங்களாகவே விரும்பி தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்களை [ இன்போதமிழ், தாய்நிலம் ] மக்கள் இனங்கண்டு தூக்கியெறியவேண்டும்.
விடுதலைப்போராட்டம் தாயகத்திலோ, புலம்பெயர் தேசங்களிலோ முன்னெடுக்கப்பட்ட காலங்களில் தேசியத்திற்காக ஏதும் செய்யாத மேதாவிகளும், புத்திசாலிகள் என்று தம்மை நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த சிலரும் துரோக முதலாளிகளின் அற்ப சலுகைகளிற்கு ஆசைப்பட்டு தாமாகவே சென்று மாட்டிக்கொண்டுள்ளதுடன், தேசியத்தலைமையினாலும் ஆயிரம் ஆயிரம் உயிர்மூச்சுகளாலும் கட்டி எழுப்பப்பட்ட விடுதலைக்கட்டமைப்பை உடைக்கும் நாசகார நடவடிக்கைக்கு துணைபோகும் வகையில் தமிழ்மக்களை பல துண்டுகளாக பிரிக்கும் நடவடிக்கைகளிலும், அமைப்பின் கட்டமைப்புகளையும், பொறுப்பாளர்களையும், களத்தில் சமராடி மடிந்த மறவர்களையும் வசைபாடும் நடவடிக்கைகளிலும் புதிய புதிய குழுக்களை உருவாக்கி அவர்களிடையே குழு மோதல்களை உருவாக்கி விடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுவருவது கண்கூடு.

உண்மையில் பலரை சிலரால் பல காலம் ஏமாற்றமுடியாது. எமது மக்கள் எப்போதும் தேசியத்தின் பால் இயங்குபவர்கள். தேசியத்தலைமையின் வாக்கை வேதவாக்காக கொண்டு இயங்குபவர்கள், எனவே அவர் உருவாக்கிய வியூகத்தை பின்பற்றி சிறீலங்கா அரசின் புலனாய்வு மோதலை எதிர்கொண்டு, மோதி உடைத்து காலம் ஒன்று கனிந்துவரும்வரை விடுதலை நெருப்பை அணையாது பாதுகாப்பது காலம் எமக்களித்த கடமையாகவுள்ளது.

- மாதுளன்

Comments