ஓன்றிணைந்து போராடுவோம் சிறீலங்காவின் பொருட்களை புறக்கணிப்போம்


பேரினவாத சிங்கள மக்களிடம் இருந்து ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டங்கள் பல வழிகளின் ஊடகாக பயணித்து வருகின்றது. அதன் ஒரு படிமுறைதான் சிறீலங்காவின் உற்பத்தி பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம்.



இந்த போராட்டம் அனைத்துலகிலும் உக்கிரமாக மேற்கொள்ளப்பட்ட போதும், அதனை அமெரிக்க தமிழ் மக்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். கடந்த வாரங்களில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வசிங்டன் டி சி, நியூயோர்க், அட்லான்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்சி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பொஸ்ரன் ஆகிய நகரங்களில் சிறீலங்கா பொருட்களை புறக்ணிக்கும் போரட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
புறக்கணி சிறிலங்கா
சிறீலங்காவை பொறுத்தவரையில் அதன் ஏற்றுமதித்துறையில் பலத்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசின் மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதாவது அதன் ஏற்றுமதித்துறை 12.8 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சியின் முக்கிய பின்னனிகள் உலகின் பொருளாதார வீழ்ச்சியும், ஈழத்தமிழ் மக்களின் போராட்டங்களும் தான்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தல்களை சிறீலங்கா அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டம் உலகம் முழுவதும் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டால் சிறீலங்கா அரசின் பொருளாதாரம் மீளமுடியாத மிகப்பெரும் வீழச்சியை சந்திப்பது தவிர்க்கமுயாதது என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து.
அமெரிக்க தமிழ் மக்களின் தற்போதைய போராட்டங்கள் முன்னைய போராட்டங்களில் இருந்து வேறுபட்டது. அதாவது சிறீலங்கா பொருட்களை கொள்வனவு செய்யும் நிறுவனங்களுக்கு முன்னால் அவர்கள் தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போரட்டங்கள் அத்தகைய நிறுவனங்களை மிகவும் சங்கடத்தில் தள்ளும் என்பதை மறுக்க முடியாது.

சிறீலங்காவில் ஆடைகளை தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான விக்ரோரியா சிக்ரட் மற்றும் கப் ஆகிய நிறுவனங்களின் முன்பாக நடைபெற்ற போராட்டங்கள் முக்கியமானவை. இது அந்த நிறுவனங்களை ஒரு நெருக்கடிக்குள் தள்ளுவதுடன், அவர்களை பங்களாதேசம், தாய்லாந்து போன்ற வேறு நாடுகளை நோக்கி பார்வையை செலுத்த வைக்கலாம்.

இந்த நாடுகள் சிறீலங்காவுக்கு போட்டியான உற்பத்தி நாடுகள். சிறீலங்காவை விட மலிவாக அங்கு அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும். அவ்வாறு அவர்கள் மாற்றப்பட்டால் மீண்டும் அவர்களை சிறீலங்காவிற்கு இழுத்து வருவது கடினமானது என்பது தென்னிலங்கை ஆய்வாளர் ஒருவரின் கருத்து.

மேலும் அமெரிக்க தமிழ் மக்களின் போராட்டத்தின் முக்கியத்துவம் அதிகமானது. உதாரணமாக அமெரிக்காவுக்கான புடவை ஏற்றுமதியில் 19.5 விகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்ததை நாம் இங்கு குறிப்பிடலாம். பிரித்தானியாவிலும் மாக்ஸ் அன்ட் ஸ்பென்சர் மற்றும் கப் போன்ற நிறுவனங்கள் சிறீலங்காவில் இருந்து ஆடைகளை கொள்வனவு செய்து வருகின்றன அது மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் யார் யார் சிறீலங்காவின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்கின்றார்களே அவர்கள் முன் எமது போராட்டத்தை நாம் எடுத்து செல்ல வேண்டும்.

அமெரிக்காவில் தமிழ் அரசியல் செயற்பாட்டு குழு மற்றும் சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் குழு என்பன இந்த போரட்டங்களை ஒழுங்கு செய்து திறமையாக மேற்கொண்டு வருகின்றன. "நண்பர்களே உங்களை இந்த கடைகளுக்கு செல்ல வேண்டாம் என நாம் தடுக்கவில்லை, ஆனால் எந்த பொருட்களிலாவது சிறீலங்காவில் தயாரிக்கப்பட்டது என்ற வாசகம் இருந்தால் அதனை வாங்கிவிடாதீர்கள், அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்களின் குருதி படிந்துள்ளது"என்ற வாசகங்கள் அமெரிக்க மக்களை சிந்திக்க வைத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாது சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என ஒவ்வொரு வெளிநாட்டு நிறுவனங்களையும் கேட்டுக்கொள்ளும் போராட்டங்களையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் சிறீலங்காவின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு ஈட்டு செல்லும் என்பதுடன், பொருளாதார ரீதியாக பலவீனப்படப்போகும் அரசு ஒரு தீர்வுக்கு வரவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படும்.

எனவே அமெரிக்க தமிழ் மக்களின் போரட்டத்தை உலெகெங்கும் விஸ்த்தரியுங்கள், சிறீலங்கா அரசிற்கு சந்திக்கமுடியாத பேரிழப்புக்களை வழங்கி களத்தில் உள்ள எம் மக்களின் சுதந்திர வாழ்வுக்கும், உரிமைகளுக்கும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.


  • கவனயீர்ப்பு நடவடிக்கை, சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிப்போம்.

  • Comments